02.04.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இது நீங்கள் பல வகையான பொருட்களைப் பெறக்கூடிய தந்தையின் அற்புதமான கடையாகும். நீங்களே இந்தக் கடையின் அதிபதிகள்.
கேள்வி:
இந்த அற்புதமான வியாபாரியை ஏன் எவராலும் பிரதி செய்ய முடியாதுள்ளது?பதில்:
அவரே அனைத்துப் பொக்கிஷங்களினதும் பொக்கிஷதாரி என்பதால் ஆகும். அவரே ஞானம், சந்தோஷம், அமைதி, தூய்மை அனைத்தினதும் கடலாவார். தமக்கு வேண்டிய எவற்றையும் எவராலும் பெற முடியும். சந்நியாசப் பாதையில் உள்ளவர்களால் இவற்றை வழங்க முடியாது. வேறு எவராலும் தம்மைத் தந்தையைப் போன்று கடல் என அழைக்க முடியாது.பாடல்:
உங்களை கண்டுகொண்டதனால் முழு உலகையும் நாம் கண்டுகொண்டோம், வானம் பூமி அனைத்தும் எமக்கே சொந்தம்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளீர்கள். அவர் எல்லையற்ற தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் எல்லையற்ற பாட்டனார் எனவும் அழைக்கப்பட முடியும். எல்லையற்ற குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள், தந்தை உங்களுக்கு இந்த எல்லையற்ற ஞானத்தை வழங்குகிறார். நீங்கள் எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் அனைத்தையும் விட்டுவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது உங்களது எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரேயொரு கடை இதுவே ஆகும். தமக்கு என்ன வேண்டும் என்று மக்களுக்கே தெரியாது. எல்லையற்ற தந்தையின் கடை மிகப் பெரியது. அவர் சந்தோஷக்கடல், தூய்மைக்கடல், பேரானந்தக்கடல், ஞானக்கடல் என அழைக்கப்படுகிறார். சில வியாபாரிகள் பலவகையான பொருட்களை வைத்திருப்பார்கள். அவரே எல்லையற்ற தந்தை ஆவார். அவரும் பலவகையான பொருட்களை வைத்திருக்கிறார். அவர் எவற்றை வைத்திருக்கிறார்? பாபா ஞானக்கடல், சந்தோஷக்கடல், அமைதிக்கடல் ஆவார். அவர் இந்த அற்புதமான, அலௌகீக விடயங்களைக் களஞ்சியப்படுத்தி உள்ளார். அவரே சந்தோஷத்தை அருள்பவர் என்பதுவும் நினைவு கூரப்படுகிறது. இந்த ஒரு கடை மட்டுமே உள்ளது. வேறு எவரிடமும் இத்தகைய கடை இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கர் எத்தகைய களஞ்சியத்தைக் கொண்டுள்ளனர்? எதுவுமே அல்ல! தந்தையே அதிமேன்மையான களஞ்சியத்தைக் கொண்டுள்ளார். இதனாலேயே அவர் புகழப்படுகிறார்: தாயும் நீரே, தந்தையும் நீரே. அத்தகைய புகழ் வேறு எவருக்கும் பாடப்பட முடியாது. மனிதர்கள் அமைதிக்காக அலைந்து திரிகின்றனர். சிலருக்கு மருந்து தேவைப்படுகிறது, ஏனையோருக்கு வேறு ஏதாவது தேவைப்படுகின்றன. அந்தக் கடைகள் அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவை. முழு உலகிலும் அனைவரும் எல்லைக்கு உட்பட்டவற்றையே கொண்டுள்ளனர். ஒரேயொரு தந்தையிடம் மட்டுமே எல்லையற்றவை உள்ளன. இதனாலேயே அவர் தூய்மையாக்குபவர், முக்தியளிப்பவர், ஞானக்கடல், பேரானந்தக்கடல் எனப் புகழப்படுகிறார். இவை அனைத்தும் அவரது பல்வேறுவகையான களஞ்சியங்கள் ஆகும். நீங்கள் ஒரு பட்டியலை உருவாக்கினால் அதில் பல வகையானவற்றைக் காணலாம். இந்தத் தந்தையிடம் உள்ளவற்றில் குழந்தைகளான உங்களுக்கு உரிமை உள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் அத்தகைய தந்தையின் குழந்தைகளாக இருப்பதனால் நாங்களே தந்தைக்கு உரியவற்றிற்கு அதிபதிகளாக இருக்கின்றோம் என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. தந்தை பாரதத்திலேயே வருகிறார். தந்தை தன்னிடமுள்ள அனைத்தையும் வரும்போது நிச்சயமாகக் கொண்டு வருகிறார். அவற்றை அவரிடமிருந்து பெறுவதற்கு உங்களால் அவரிடம் செல்ல முடியாது. தந்தை கூறுகிறார்: நான் இங்கு வர வேண்டும். நான் ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன். நான் வந்து உங்களுக்கு இவை அனைத்தையும் கொடுக்கிறேன். நான் கொடுக்கின்ற களஞ்சியங்களை வேறெந்த நேரத்திலும் உங்களால் பெற முடியாது. அரைச் சக்கரத்திற்கு உங்கள் பொக்கிஷக் களஞ்சியம் நிரம்புகிறது. நீங்கள் அவரை அழைக்கத்தக்க வகையில் அடைய முடியாதது என்று எதுவுமில்லை. நாடகத் திட்டத்திற்கேற்ப நீங்கள் அனைவரும் உங்கள் ஆஸ்தியைப் பெற்றுப் பின்னர் படிப்படியாக அனைவரும் ஏணியில் கீழே இறங்குகிறீர்கள். நீங்கள் நிச்சயமாக மறுபிறவி எடுக்க வேண்டும். நீங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டும். அவர்கள் 84 பிறவிச் சக்கரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் இருப்பினும் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. 84 பிறவிகளுக்குப் பதிலாக அவர்கள் 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். மாயை அவர்களைத் தவறிழைக்க வைக்கிறாள். நீங்கள் இப்பொழுது இவற்றைப் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் பின்னர் நீங்கள் இவற்றை எல்லாம் மறந்து விடுவீர்கள். இந்நேரத்தில் நீங்கள் களஞ்சியம் அனைத்தையும் பெற்று, பின்னர் சத்திய யுகத்தை ஆட்சி செய்வீர்கள். எவ்வாறாயினும் அவர்களுக்கு அந்த இராச்சியத்தைக் கொடுத்தது யார் என்பதோ அல்லது இலக்ஷ்மி நாராயணனது இராச்சியம் எப்பொழுது இருந்தது என்பதோ மக்களுக்குத் தெரியாது. சுவர்க்கத்தின் சந்தோஷம் நினைவு கூரப்படுகிறது. அவர் உங்களுக்கு அனைத்து வகையான சந்தோஷங்களையும் கொடுக்கிறார். இதைவிடச் சிறந்த சந்தோஷம் வேறெதுவும் இருக்கமாட்டாது. பின்னர் அந்த சந்தோஷமும் மறைந்து விடும். அரைச் சக்கரத்திற்கு பின்னர் இராவணன் வந்து உங்களது சந்தோஷங்கள் அத்தனையையும் பறித்து விடுகிறான். எவருக்காவது கோபம் ஏற்பட்டால் அவர் தனது விவேகம் அனைத்தையும் இழந்து விட்டார் என அவருக்குக் கூறப்படுகிறது. நீங்களும் அனைத்துத் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும் 16 கலைகள் நிறைந்தவர்களாகவும் இருந்தீர்கள். ஆனால் அந்தக் கலைகள் இப்பொழுது இல்லை. வேறு எவருமே தந்தையைப் போன்று புகழப்படுவதில்லை. உங்களிடம் பணம் இருந்தால் சுற்றுலா செல்லுங்கள் எனக் கூறப்படுகிறது. சுவர்க்கத்தில் எவ்வளவு செல்வம் நிறைந்திருக்கும் எனச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அது இப்பொழுது இல்லை. அவை அனைத்தும் இப்பொழுது மறைந்து விட்டன. அவர்கள் தங்களது தர்மத்திலும் செயல்களிலும் சீரழிந்தமையினால் அவர்களது செல்வமும் மறைந்ததுடன் அவர்கள் விழ ஆரம்பித்தனர். உங்களுக்கு அதிகளவு செல்வம் கொடுக்கப்பட்டு நீங்கள் வைரத்தைப் போன்று பெறுமதி மிக்கவர்கள் ஆக்கப்பட்டீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஆகவே உங்களது செல்வம் அனைத்தையும் நீங்கள் எங்கே தொலைத்தீர்கள்? முயற்சி செய்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்ளுங்கள் எனத் தந்தை மீண்டும் கூறுகிறார். பாபா மீண்டுமொரு முறை உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைத் தருகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் கூறுகிறார்: ஓ குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், உங்களின் மீதுள்ள துரு அகற்றப்படும். பாபா நான் உங்களை மறந்துவிடுகிறேன் எனக் குழந்தைகள் கூறுகின்றனர். என்ன இது? ஒரு பெண் திருமணம் செய்ததும் தனது கணவனை எப்போதாவது மறப்பாரா? குழந்தைகள் எப்போதாவது தங்கள் தந்தையை மறப்பார்களா? தந்தை அருள்பவர் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் உங்களது ஆஸ்தியைக் கோர விரும்பினால் நீங்கள் நிச்சயமாக அவரை நினைவு செய்தே ஆக வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளே, நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கும் போது உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. வேறெந்த வழியும் இல்லை. யாத்திரை செல்வது, கங்கைகளில் நீராடுவது போன்று பக்தி மார்க்கத்தில் அவர்கள் செய்தவை அனைத்தும் அவர்களை ஏணியில் தொடர்ந்தும் கீழிறக்கியது. எவராலும் முன்னேற முடியாது. அது சட்டம் அல்ல! அது அனைவரதும் கீழிறங்கும் ஸ்திதியாகும். இன்ன இன்னார் முக்தியடைந்து விட்டார்கள் என அவர்கள் கூறுவார்களாயின் அது பொய்யாகும். எவராலும் வீடு திரும்ப முடியாது. பாபா உங்களை 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆக்கவே வந்துள்ளார். நான் நற்குணங்கள் அற்றவன் என நீங்கள் பாடுவதுண்டு. தந்தை உங்களைத் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆக்குகிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும் வணங்கத் தகுதி வாய்ந்தவர்களாகவும் இருந்தோம். 5000 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எங்களது ஆஸ்தியைக் கோரியிருந்தோம். தந்தை கூறுகிறார்: உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கொடுத்த பின்னர் நான் சென்றுவிட்டேன். மக்கள் சிவனது பிறந்தநாளையும் ரக்ஷபந்தனையும் தசேரா போன்றவற்றையும் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அனைத்தையும் மறந்து விடுகின்றனர். மீண்டும் ஒருமுறை அதனை உங்களுக்கு ஞாபகப்படுத்தவே தந்தை வந்துள்ளார். நீங்கள் அங்குதான் இருந்தீர்கள், ஆனால் பின்னர் நீங்கள் உங்கள் இராச்சிய பாக்கியத்தை இழந்து விட்டீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்த முழு உலகமும் இப்பொழுது முழுமையாக உக்கிய நிலையை அடைந்துள்ளது. இது அந்த உலகமே ஆகும். அதே பாரதமே புதுமையாக இருந்ததுடன் இப்பொழுது அது பழையதாகி விட்டது. சுவர்க்கத்தில் சதா சந்தோஷம் இருக்கும். பின்னர் துவாபரயுகத்தில் துன்பம் ஆரம்பிக்கும்போது வேதங்கள், சாஸ்திரங்கள் போன்ற அனைத்தும் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் பக்தியை நிறைவு செய்யும் போது மாத்திரமே கடவுளால் வர முடியும். பிரம்மாவின் இரவும் பிரம்மாவின் பகலும் அரை அரைவாசியாகவே இருக்க வேண்டும். இந்த ஞானம் பகலும் பக்தி இரவும் ஆகும். அவர்கள் சக்கரத்திற்குப் பிழையான கால அளவைக் கொடுத்துள்ளனர். ஆகவே முதலில் அமர்ந்திருந்து அனைவருக்கும் தந்தையின் புகழைக் கூறுங்கள். தந்தையே ஞானக்கடலும் அமைதிக் கடலும் ஆவார். ஸ்ரீகிருஷ்ணரை அசரீரியானவர், தூய்மையாக்குபவர், சந்தோஷக்கடல் என்று அழைக்க முடியாது. இல்லை. அவரது புகழ் வேறானது. அது பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் போன்றது. சிவனே, பாபா என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீகிருஷ்ணரை பாபா என அழைப்பது சரியாக இருக்காது. அது அத்தகைய பெரிய தவறாகும். நீங்கள் சிறிய தவறுகளைச் செய்தவண்ணம் அவரை 100 வீதம் மறந்துவிட்டீர்கள். தந்தை கூறுகிறார்: உங்களால் இந்தப் பேரத்தை ஒருபோதும் சந்நியாசிகளுடன் செய்ய முடியாது. அவர்கள் சந்நியாசப் பாதையை சார்ந்தவர்கள்இ நீங்களோ இல்லறப்பாதையைச் சார்ந்தவர்கள். விகாரமற்ற உலகம் இருந்தபோது நீங்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாக இருந்தீர்கள். இது விகாரம் நிறைந்த உலகமாகும். அவர்கள் வினவுகிறார்கள்: “சத்தியயுகத்தில் குழந்தைகள் பிறப்பதில்லையா? அங்கும் விகாரம் இருந்திருக்கவே வேண்டும்”. ஓ! ஆனால் அது முழுமையாக விகாரமற்ற உலகமாகும். முழுமையாக விகாரம் அற்றவர்கள், எவ்வாறு விகாரம் நிறைந்தவர்களாக முடியும்? சத்திய யுகத்தில் பல மனிதர்கள் இல்லாது இருப்பது எவ்வாறு சாத்தியம் என்றும் அவர்கள் வினவுகின்றனர். எவ்வாறாயினும் அங்கு பல மனிதர்கள் இருப்பதில்லை. அங்கு பாரதத்தைத் தவிர வேறெந்தப் பூமியும் இருக்கமாட்டாது. உலகம் எப்பொழுதும் நிறைந்து இருப்பதனால் தம்மால் இதை நம்பமுடியாது என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அவர்கள் இப்பொழுது கலியுகத்தவர்களாகி உள்ளதுடன் கல்லுப்புத்தியையும் கொண்டுள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நாடகத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். காந்திஜி போன்றோர் இராம இராச்சியம் வர வேண்டும் என்றே விரும்பினர். எவ்வாறாயினும் அவர்கள் மகாபாரத யுத்தத்தின் பின் நாடகம் முடிவடைவதைப் போல் காட்டி உள்ளனர். அவ்வளவுதான் நாடகம் முடிவடைந்து விட்டது. அதன் பின்னர் என்ன நடந்தது? அவர்கள் எதையும் காண்பிக்கவில்லை. தந்தை இங்கிருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இது முழுமையாக இலகுவானது. மக்கள் சிவனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர். ஆகவே சிவபாபா நிச்சயமாக வருகின்றார். அவர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் ஆவார். ஆகவே அவர் சுவர்க்க வாசலைத் திறப்பதற்காக நிச்சயமாக வருவார். அவர் நரகமாக இருக்கும் போது மட்டுமே வருவார். அவர் சுவர்க்க வாயிலைத் திறப்பதுடன் நரகத்தின் வாயிலை மூடிவிடுகிறார். சுவர்க்க வாயில்கள் திறக்கப்படுமாயின் அனைவரும் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். இவ்விடயங்கள் விளங்கிக் கொள்வதற்குக் கடினமானவையே அல்ல. ஒரேயொரு தந்தைக்குரிய புகழே உள்ளது. சிவபாபாவிடம் ஒரு கடையே உள்ளது. அவர் எல்லையற்ற தந்தை ஆவார். சுவர்க்க சந்தோஷத்தைப் பாரதம் எல்லையற்ற தந்தையிடம் இருந்தே பெறுகிறது. எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அங்கு உண்மையான எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. ஆகவே நாங்கள் ஏன் நரகத்தில் உள்ளோம்? எவரும் இதைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் அங்கிருந்தீர்கள், பின்னர் வீழ்ந்து விட்டீர்கள். தேவர்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டும். அவர்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளனர். அவர்கள் பின்னர் தூய்மையானவர்கள் ஆக வேண்டும். தந்தையின் பிறந்தநாள் இருக்கிறது. ஆகவே இராவணனது பிறந்தநாளும் இருக்கிறது. எவரும் இதை புரிந்து கொள்வதில்லை. எப்பொழுது அவர்கள் இராவணனை எரிக்க ஆரம்பித்தனர் என எவரிடமாவது கேளுங்கள். அதற்கு அவர்கள் அது அநாதியாகவே தொடர்கிறது எனப் பதில் அளிப்பார்கள். தந்தை மட்டுமே இந்த இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். தந்தையின் ஒரேயொரு கடையைப் பற்றிய புகழே உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களால் சந்தோஷம், அமைதி அல்லது தூய்மையைப் பெற முடியாது. ஒருவர் மாத்திரமே அமைதியைப் பெற்றார் என்றில்லை. இன்ன இன்னாரிடம் இருந்து அமைதியைப் பெற்றோம் என கூறும்போது அவர்கள் பொய் கூறுகின்றனர். அமைதி தாமத்திலேயே உங்களால் அமைதியைப் பெறமுடியும். இங்கு ஒருவர் அமைதியைப் பெறும் போது, இன்னொருவர் வந்து அமைதியின்மையை உருவாக்கி விடுகிறார். ஆகவே அவர்களால் அமைதியைப் பேண முடியாதுள்ளது. சிவபாபா மாத்திரமே சந்தோஷம், அமைதி, தூய்மையின் கடைவியாபாரி ஆவார். எவரும் வந்து அவருடன் வியாபாரம் செய்யலாம். அவர் வியாபாரி என்று அழைக்கப்படுகிறார். அவர் தூய்மை, சந்தோஷம், அமைதி, செழிப்பு அனைத்தையும் களஞ்சியப்படுத்தி உள்ளார். அடைய முடியாதது எதுவுமல்ல. நீங்கள் சுவர்க்க இராச்சியத்தை அடைகிறீர்கள். தந்தையிடம் இருந்து அதைப் பெற்றவர்களுக்கு அதைக் கொடுப்பதற்காகவே அவர் வந்துள்ளார். எவ்வாறாயினும் அதைப் பெறும்போது அவர்கள் களைப்படைந்து விடுகின்றனர். நான் இதை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே வந்துள்ளேன். ஆனால் நீங்கள் அதைப் பெறுவதில் பின்தங்கி விடுகிறீர்கள். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, மாயையின் புயல்கள் வருகின்றன. ஆம், நீங்கள் கோரவிருக்கின்ற அந்தஸ்து மிக உயர்ந்தது. நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள். இது ஒரு சிறிய விடயமா? ஆகவே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவரிடமிருந்து பெறும் பல்வேறு வகையானவற்றை ஏனையோருக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் தானம் செய்ய வேண்டும். நீங்கள் தூய்மையாக வேண்டுமானால் ஐந்து விகாரங்களின் தானத்தை நிச்சயமாகக் கொடுக்க வேண்டும். தந்தையை நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள். அப்பொழுதே துரு அகற்றப்படும். பிரதான விடயம் நினைவு ஆகும். நீங்கள் பாபாவிற்கு சத்தியம் செய்தீர்கள்: பாபா, நான் ஒருபோதும் விகாரத்தில் ஈடுபட மாட்டேன், நான் எவருடனும் கோபப்பட மாட்டேன். எவ்வாறாயினும் நீங்கள் நிச்சயம் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். வேறு எவ்வாறு இந்த பாவங்கள் எரிக்கப்பட முடியும்? இல்லாவிட்டால் இந்த ஞானம் மிகவும் இலகுவானது. நீங்கள் எவ்வாறு 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றிவந்தீர்கள் என எவருக்கும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். நினைவு யாத்திரைக்கே முயற்சி தேவைப்படுகிறது. பாரதத்தின் புராதன யோகம் பிரபல்யமானது. அவர் என்ன ஞானத்தைக் கொடுக்கிறார்? மன்மனாபவ. அதன் அர்த்தம்: சதா என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். நீங்கள் பாடினீர்கள்: நீங்கள் வரும்போது நான் ஏனைய அனைவரிடம் இருந்தும் என்னை விடுவித்து, உங்கள் ஒருவருடனேயே தொடர்பைக் கொண்டிருப்பேன். நான் உங்களுக்கு என்னை அர்ப்பணிப்பேன். உங்களைத் தவிர எவரையும் நினைவு செய்ய மாட்டேன். நீங்கள் இந்த சத்தியத்தைச் செய்தீர்கள். ஆகவே, நீங்கள் ஏன் அதை மறக்கிறீர்கள்? கூறப்படுகிறது: உங்கள் கைகள் வேலையை செய்து கொண்டிருக்கையில் உங்கள் இதயம் அற்பிற்கினியவருடன் இருக்கட்டும். நீங்கள் கர்ம யோகிகள். உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யும்போதும் உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அற்பிற்கினிய தந்தை தானே கூறுகிறார்: காதலர்களாகிய நீங்கள் என்னை அரைச்சக்கரமாக நினைவு செய்தீர்கள். நான் இப்பொழுது வந்துள்ளேன். ஆகவே என்னை நினைவு செய்யுங்கள்! இந்த நினைவையே நீங்கள் தொடர்ந்தும் மறக்கிறீர்கள். இந்த நினைவிற்கே முயற்சி தேவை. நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்களாயின் உங்கள் சரீரம் இங்கு இருக்காது. இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டதும் நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்து விடுவீர்கள். இன்னமும் அனைவரும் முயற்சியாளர்களே. மம்மாவும் பாபாவுமே அதிகளவு நினைவில் நிலைத்திருக்கிறார்கள். அவர்கள் சூட்சும உலகிலும் தென்படுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: நான் பிரவேசிப்பவர், அவரது பல பிறவிகளின் இறுதிப்பிறவியில் உள்ளார். அவரும் முயற்சி செய்கிறார். உங்களில் எவரும் இப்பொழுது உங்களது கர்மாதீத ஸ்திதியை அடைய முடியாது. உங்களில் எவராவது கர்மாதீத நிலையை அடைவீர்களாயின், உங்களால் உங்கள் சரீரத்தில் இருக்க முடியாது. பாபா உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். புரிந்து கொள்ள வேண்டியவர்களது புத்திகளிலேயே இப்பொழுது அனைத்தும் தங்கியுள்ளது! ஒரே ஒரு தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே இருக்கிறார். அவர் ஒருவரே இந்த ஞானம் அனைத்தையும் களஞ்சியப்படுத்தி உள்ளார். அவர் ஒருவரே மந்திரவாதியும் ஆவார். உங்களால் அமைதி, தூய்மை, சந்தோஷம் என்ற ஆஸ்திகளை வேறு எவரிடமிருந்தும் பெறமுடியாது. தந்தை மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் அதனைக் கிரகித்து, ஏனையவர்களையும் அவ்வாறு செய்ய தூண்டுகிறீர்கள். நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகிக்கும் அளவிற்கு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்கிறீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் போஷாக்கான விடயங்களைப் பெறுவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வளவு இனிமையானவர்கள் எனப் பாருங்கள்! நீங்களும் அவர்களைப் போன்று இனிமையானவர்களாக வர வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார். வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடல்களில் இவ்வாறு கூறுகின்றார்களா? இது எங்களின் முற்றிலும் புதிய மொழி ஆகும். ஆகவே, அது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகிறது.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து நீங்கள் பெறுகின்ற சந்தோஷம், அமைதி, தூய்மை எனும் களஞ்சியத்தை அனைவருக்கும் கொடுங்கள். முதலில் விகாரங்களின் தானத்தைக் கொடுப்பதன் மூலம் தூய்மையாகிப் பின்னர் அழியாத இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்யுங்கள்.2. தேவர்களைப் போன்று இனிமையானவர்கள் ஆகுங்கள். நீங்கள் பாப்தாதாவுக்கு செய்த சத்தியத்தைத் தொடர்ந்தும் நினைவு செய்வதுடன் தந்தையின் நினைவில் நிலைத்திருந்து உங்கள் பாவங்களை அழியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு கருவியாக இருக்கும் உணர்வுடன் உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் கவனம் செலுத்தி தீர்வுகளின் சொரூபம் ஆகுவீர்களாக.கருவி ஆத்மாக்களான உங்களின் மீதே அனைவரின் பார்வையும் உள்ளது. அதனால் கருவிகளான நீங்கள் உங்களின் ஒவ்வோர் எண்ணத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். கருவிகளான நீங்கள் எதையிட்டும் சாக்குப்போக்கு சொன்னால் உங்களைப் பின்பற்றுபவர்களும் பல சாக்குப் போக்குகளைக் கூறுவார்கள். கருவிகளான உங்களிடம் ஏதாவது குறைந்தால் அதை மறைக்க முடியாது. ஆகவே உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் விசேடமான கவனம் செலுத்துங்கள். அதன் மூலம்இ தீர்வுகளின் சொரூபம் ஆகுங்கள்.
சுலோகம்:
ஞானி ஆத்மாக்களுக்குத் தமது நற்குணங்கள் அல்லது சிறப்பியல்புகளைப் பற்றிய எந்தவிதமான அகங்காரமும் இருக்காது.அவ்யக்த சமிக்ஞை:மேன்மை ஆகுவதற்கு இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களைக் கிரகியுங்கள்.
நீங்கள் உங்களைப் பற்றிய அல்லது மற்றவர்களைப் பற்றிய கடந்தகாலத்தின் எதையும் பார்க்காமல் உங்களின் சம்ஸ்காரங்களை இலகுவானவை ஆக்கும்போது உங்களின் வாழ்க்கையில் உங்களால் இனிமை என்ற நற்குணத்தைக் கிரகிக்க முடியும். சரள சுபாவத்தைக் கொண்ட ஆத்மாக்களின் நற்குணம் இனிமை ஆகும். இனிமை அவர்களின் கண்களில் அவர்களின் வார்த்தைகளில் அவர்களின் நடத்தையில் புலப்படும். இனிமை மற்றும் பணிவு என்ற இரண்டு நற்குணங்களால் உங்களால் சதா உலக உபகாரியாகவும் மகாதானியாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகமுடியும். அத்துடன் இலகுவாக உங்களின் அன்பின் அத்தாட்சியை வழங்க முடியும்.