03.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது புதிய உறவுமுறைகளுக்குள் பிரவேசிக்கின்றீர்கள். ஆகையினால், கர்மபந்தனங்களின் அடிப்படையில் இங்குள்ள உறவுமுறைகளை மறந்து, கர்மாதீத நிலையை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளைத் தந்தை புகழ்கின்றார்? எந்தக் குழந்தைகளுக்கு அவர் அதிகளவு அன்பைக் கொடுகின்றார்?பதில்:
பாபா தனது ஏழைக் குழந்தைகளின் புகழைப் பாடுகின்றார். “இந்த ஏழ்மை மிகவும் அற்புதமானது.” பேராசை இல்லாமல் சௌகரியமாக வாழுங்கள், இரண்டு சப்பாத்திகளைச் சாப்பிடுங்கள். ஏழைக் குழந்தைகள் தந்தையை மிகுந்த அன்புடன் நினைவு செய்கிறார்கள். பாபா கல்வி அறிவில்லாத குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். ஏனெனில் அவர்கள் தாங்கள் கற்றதை மறக்க முயற்சி செய்யத் தேவையில்லை.ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு நாளும், உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள் என்று கூறவேண்டியது இல்லை. “ஆத்ம உணர்வு உடையவராக இருப்பீர்களாக” என்றால் “நீங்கள் சரீரமற்ற விழிப்புணர்வில் இருப்பீர்களாக” என்பதாகும். இந்த வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் கொண்டவை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்களாகிய உங்களுக்குள்ளே 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரங்களை எடுத்து, உங்களின் பாகங்களை நடித்து, பின்னர் உங்களுடைய சரீரம் அழிகின்றது. ஆத்மா அழிவதில்லை. இப்பொழுது மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். வேறு எவருமே இந்த விடயங்களைப் பற்றி அறியமாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இயன்றளவிற்கு தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுடைய வியாபாரம் போன்றவற்றில் நீங்கள் மும்முரமாக இருக்கும்போது, நீங்கள் அந்தளவிற்கு நினைவைக் கொண்டிருப்பதில்லை. உங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் இருங்கள். ஆனால் தாமரை மலர் போல தூய்மையாக வாழ்ந்து, இயன்றளவிற்கு என்னை நினைவு செய்யுங்கள். இங்கே விசேடமாக வழிநடத்தப்படுகின்ற தியானத்தில் மாத்திரம் நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும் என்பதல்ல. வழிநடத்தப்படுகின்ற தியானம் என்ற வார்த்தைகள் தவறானது. உண்மையில் அது நினைவேயாகும். நீங்கள் எங்கே இருந்தாலும் தந்தையை நினைவு செய்யுங்கள். மாயையின் பல புயல்கள் வரும். சிலர் ஒரு விடயத்தையும் ஏனையோர் வேறு விடயத்தையும் நினைக்கின்றார்கள். புயல்கள் நிச்சயமாக வரும். ஆகையினால் அந்த நேரத்தில் நீங்கள் அவற்றை அப்பால் துரத்தவேண்டும். அப்பொழுது அவை வராது. இங்கு நீங்கள் அமர்ந்திருக்கும் போதும், மாயை உங்களைப் பெருமளவு தொந்தரவு செய்கின்றாள். இது ஒரு போராட்டம். நீங்கள் இலேசாக இருக்கும் அளவிற்கு, உங்களுடைய பந்தனங்களும் குறைவடையும். முதலில் ஆத்மாக்களாகிய நீங்கள் பந்தனம் அற்றவர்களாக இருந்தீர்கள். நீங்கள் பிறவியெடுத்தவுடன், உங்களுடைய புத்தியானது பெற்றோரை நோக்கி ஈர்க்கப்பட்டது. பின்னர் ஒரு வாழ்க்கைத் துணையை ஏற்றுக் கொள்கின்றீர்கள். முன்னர் இல்லாத விடயங்கள் எல்லாம் இப்பொழுது உங்கள் முன் தோன்றத் தொடங்குகின்றன. பின்னர் குழந்தைகள் பிறந்து, அவர்களின் நினைவு அதிகரிக்கின்றது. அவை அனைத்தையும் இப்பொழுது மறக்க வேண்டும். ஒரு தந்தையை மாத்திரம் நினைவு செய்ய வேண்டும். இதனாலேயே தந்தை புகழப்படுகின்றார். அவர் உங்களுடைய தாய், தந்தை, அவரே உங்களுக்கு அனைத்தும் ஆவார். அவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! எதிர்காலத்திற்காக அவர் கொடுப்பவை அனைத்தும் புதியவை. அவர் உங்களைப் புதிய உறவு முறைகளுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கும் உறவுமுறைகள் இருக்கும். பிரளயம் ஏற்படும் என்றில்லை. நீங்கள் ஒரு சரீரத்தை விடுத்து இன்னொன்றை எடுப்பீர்கள். மிக நல்லவர்களாக இருப்பவர்கள் நிச்சயமாக மேன்மையான குடும்பத்தில் பிறவி எடுப்பார்கள். நீங்கள் இப்பொழுது எதிர்கால 21 பிறவிகளுக்காகக் கற்கின்றீர்கள். உங்களுடைய கல்வி முடிவடைந்து, உங்களின் வெகுமதி ஆரம்பமாகும். ஒரு பாடசாலையில் அவர்கள் கற்று பின்னர் மாற்றப்படுவார்கள். நீங்களும் முதலில் அமைதி தாமத்திற்கும், பின்னர் சந்தோஷ தாமத்திற்கும் மாற்றப்படப் போகின்றீர்கள். நீங்கள் இந்த அழுக்கான உலகிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். இது நரகம் என்று அழைக்கப்படுகின்றது. சத்தியயுகம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள மனிதர்கள் காரிருளில் இருக்கின்றனர். செல்வந்தர்கள் தமக்கு இதுவே, இங்கிருப்பதே சுவர்க்கம் என நினைக்கிறார்கள். சுவர்க்கம் புதிய உலகிலேயே உள்ளது. இப்பழைய உலகம் அழியப்போகின்றது. தங்களுடைய கர்மாதீத நிலையை அடைந்தவர்கள் தர்மராஜ்புரியிலே தண்டனை அனுபவம் செய்யமாட்டார்கள். சுவர்க்கத்தில் எந்தத் தண்டனையும் இருக்க மாட்டாது. அங்கே நீங்கள் பிரவேசிக்கும் கருவறையும் ஒரு மாளிகை போன்றிருக்கும். அங்கே துன்பம் என்ற கேள்வில்லை. இங்கே கருவறை ஒரு சிறை போன்றது. ஆகையினால் தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. நீங்கள் எத்தனை தடவைகள் சுவர்க்கவாசிகள் ஆகின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அப்போது நீங்கள் முழுச்சக்கரத்தையும் நினைவு செய்வீர்கள். இந்த ஒரு விடயமே நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியானவை. நீங்கள் இதை மறந்து சரீர உணர்வு உடையவராகும் போது மாயை உங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றாள். நீங்கள் இந்த முயற்சியையே செய்ய வேண்டும். முயற்சி செய்யாமல் எவருமே உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. சிலர் பாபா நான் கல்வி அறிவற்றவர், அல்லது பாபா எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறுகின்றார்கள். அப்பொழுது பாபா சந்தோஷம் அடைகின்றார். ஏனெனில் இங்கே நீங்கள் இதுவரை கற்றவை எல்லாம் மறக்கப்பட வேண்டும். நீங்கள் கற்றவை எல்லாம் சிறிது காலத்திற்கு உங்கள் வாழ்க்கைக்கான வருமானத்தை ஈட்டுவதற்காகவே. இப்பொழுது அனைத்துமே அழியப்போகின்றது என நீங்கள் அறிவீர்கள். இயன்றளவிற்கு தந்தையை நினைவு செய்து ஒரு துண்டு சப்பாத்தியை பெருமளவு சந்தோஷத்துடன் சாப்பிடுங்கள். இந்த நேரத்து வறுமை அற்புதமானது. பேராசை கொள்ளாதீர்கள். எளிமையாக ஒரு துண்டு சப்பாத்தியை சௌகரியமாகச் சாப்பிடுங்கள். இந்த நாட்களில் தானியங்களுக்கும் பற்றாக்குறை உள்ளது. காலப்போக்கில் உங்களால் சீனியைக் கூடபெற முடியாதிருக்கும். நீங்கள் கடவுளின் சேவை செய்வதால், அரசாங்கம் அனைத்தையும் கொடுத்துவிடும் என்றில்லை. அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள். ஆம், நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எமது பெற்றோரின் வீட்டுக்குச் செல்கின்றோம் என அரசாங்கத்திற்கும் விளக்கும்படி குழந்தைகளாகிய உங்களுக்கு கூறப்பட்டுள்ளது. பாபா சில குழந்தைகளுக்கு தோளி அனுப்ப வேண்டியுள்ளது. இங்கே, அவர்கள் மிகத்தெளிவாக “இல்லை, நாங்கள் எதையும் பெறவில்லை!” எனக் கூறுகின்றனர். செல்வந்தர் ஒருவர் ஒரு பக்கிரிக்கு (அலைந்து திரியும் சமயத்துறவி) ஒரு பிடியைக் கொடுப்பது போன்று, சிலவேளைகளில் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்கு அவர்கள் சிறிதளவைக் கொடுக்கக்கூடும். ஏழைகள் சிறிதளவையே கொடுப்பார்கள். சீனி போன்றவற்றை இங்கே கொண்டு வரலாம். ஆனால் குழந்தைகளாகிய உங்களின் யோகம் பின்னர் குறைவடையும். நீங்கள் நினைவில் இல்லாதிருப்பதாலும், சரீர உணர்வுக்கு வந்ததாலும் உங்களால் எதையும் அடைய முடியவில்லை. இதனைக் கற்பதன் மூலம் அல்லாமல் யோகத்தின் மூலமே இந்தப் பணியை பூர்த்தி செய்யமுடியும். யோகமே சிறிதளவே இருக்கின்றது. மாயை உங்களை நினைவு செய்வதை மறக்கச் செய்கிறாள். அவள் சக்தி வாய்ந்தவர்களை மிக பலமாகப் பிடிக்கிறாள். மிகநல்ல முதற்தரமான குழந்தைகளும் தம்மீது தீய சகுனங்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தீய சகுனத்தைக் கொண்டிருப்பதன் பிரதான காரணம், யோகத்தின் குறைபாடே ஆகும். தீயசகுனங்களின் காரணமாக சில குழந்தைகள் சிலரது பெயர், ரூபத்தில் சிக்கிக் கொள்கின்றார்கள். இந்த இலக்கு மிகவும் உயர்ந்தது. நீங்கள் உண்மையில் உங்களுடைய இலக்கை அடைய விரும்பினால் நினைவில் இருக்கவேண்டும். தந்தை கூறுகின்றார்: திரான்சிலும் பார்க்க இந்த ஞானம் சிறந்தது, ஆனால் இந்த ஞானத்திலும் பார்க்க நினைவு சிறந்ததாகும். நீங்கள் அதிகளவு திரான்சில் சென்றால் மாயை எனும் தீய ஆவி உங்களில் பிரவேசிக்கும். பலர் தேவை இல்லாமல் திரான்சில் செல்கின்றார்கள். அவர்கள்; பலவிதமான விடயங்களைக் கூறுகின்றார்கள். அவர்களை நம்ப முடியாது. பாபாவின் முரளியில் இருந்தே ஞானம் பெறப்படுகின்றது. திரான்சினால் எந்தப் பயனுமில்லை எனத் தந்தை தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கின்றார். அதில் மாயையின் தலையீடு அதிகளவு இருக்கின்றது. அகந்தையும் இருக்கின்றது. அனைவரும் தொடர்ந்து இந்த ஞானத்தைப் பெறுகின்றார்கள். சிவபாபாவே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். மம்மாவும் இங்கேயே இந்த ஞானத்தைப் பெற்றார். அது “மன்மனாபவ” எனவும் அழைக்கப்படும். தந்தையை நினைவு செய்து தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் தெய்வீக குணங்களைக் கிரகிக்கின்றீர்களா என உங்களைச் சோதித்துப் பாருங்கள். இங்கேயே தெய்வீகக் குணங்கள் கிரகிக்கப்பட வேண்டும். சிலருடைய ஸ்திதி ஒரு கணத்தில் முதற்தரமானதாக இருந்து, அவர் அனைத்தையும் பெருமளவு சந்தோஷத்துடன் செய்வதையும், ஒருமணிநேரத்தின் பின்னர் கோபம் எனும் தீய ஆவி வந்தவுடன் அனைத்துமே முடிந்து விடுவதையும் உங்களால் காணமுடியும். பின்னர் அவர் தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து தன்னை மாற்றிக் கொள்கின்றார். உங்களில் சிலர் மணிக்கூடு போன்றவர்கள். பாபாவிற்கு அவ்வாறான பல குழந்தைகள் உள்ளனர். ஒரு நேரத்தில் பாபாவே அவ்வாறான குழந்தைகளுக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் அளவிற்கு அவர்கள் மிக இனிமையாக இருப்பார்கள், ஒருமணி நேரத்தின் பின்னர் அவர்கள் ஏதாவதொரு விடயத்தை குழப்பம் அடைகின்றார்கள். கோபம் வந்து, நீங்கள் இதுவரை சம்பாதித்த அனைத்தையும் அழித்து விடுகின்றது. ஒரு கணம் வருமானம் சேமிக்கப்படுகிறது. அடுத்த கணம் இழப்பு ஏற்படுகின்றது. நினைவிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. இந்த ஞானம் மிக இலகுவானது. சிறு குழந்தையாலும் கூட அதை விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும் என்னை அவர்கள் நான் யார், நான் என்ன செய்கிறேன் என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கு தங்களை ஆத்மாக்களாகக் கருதி என்னை நினைவு செய்வதற்கு முடியாமல் இருக்கும். ஒருவர் இறக்கும் நேரத்தில் கடவுளை நினைக்குமாறு கூறப்படுகின்றது. ஆனால், கடவுளை மிகச்சரியாகத் தெரியாததால் அவரால் மிகச் சரியாக நினைவு செய்ய முடியாமல் உள்ளது. இது வரைக்கும், எவரும் வீடு திரும்பவும் இல்லை. எவரது பாவங்களும் அதன் மூலம் அழிக்கப்படவும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே ரிஷிகளும் முனிவர்களும் தங்களுக்கு படைப்பவரையோ, அல்லது படைப்பையோ தெரியாது என்றே கூறியுள்ளார்கள். ஆரம்பத்தில் அவர்கள் சதோகுணியாக இருந்தார்கள். எவ்வாறு அவர்களின் தற்போதைய தமோபிரதான் புத்தியால் இதைப்புரிந்து கொள்ளமுடியும்? தந்தை கூறுகின்றார்: இலக்ஷ்மி, நாராயணனுக்கும் என்னைத் தெரியாது. அரசனுக்கும் அரசிக்குமே தெரியாவிட்டால், அவர்களுடைய பிரஜைகள் எப்படி அறிந்து கொள்வார்கள்? எவருமே என்னை அறிய மாட்டார்கள். தற்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே என்னை அறிவீர்கள். உங்களுக்கு இடையேயும் சிலர் என்னை மிக நன்றாக அறிந்துள்ளீர்கள். பாபா நான் உங்களை மீண்டும், மீண்டும் மறக்கின்றேன் எனச் சிலர் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எங்கே சென்றாலும் இலகுவாக தந்தையை நினைவு செய்யுங்கள். இதிலிருந்து நீங்கள் பெறும் வருமானம் மிக அதிகமானது! நீங்கள் 21 பிறவிகளுக்கு நோய் அற்றவர் ஆகின்றீர்கள். நீங்கள் அவ்வாறான தந்தையை நினைவு செய்ய அகநோக்காக இருக்க வேண்டும். எவ்வாறாயினும் மாயை அவரை மறக்கச் செய்து புயல்களைக் கொண்டு வருகின்றாள். இங்கே, நீங்கள் அகநோக்காக இருந்து, ஞானக்கடலைக் கடையவேண்டும். இப்பொழுதே நீங்கள் இந்த ஞானக்கடலைக் கடையவேண்டும். நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்ற சங்கமயுகம் இதுவாகும். எவ்வாறு ஒரே குடும்பத்திலேயே கணவன் சங்கம யுகத்திற்குச் சொந்தமானவராகவும், அவரது மனைவியும், குழந்தைகளும் கலியுகத்திற்குச் சொந்தமானவர்கள் எனவும் கூறுகின்ற அற்புதத்தை நீங்கள் பார்க்கலாம். பெருமளவு வேறுபாடு இருக்கின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்ற விடயங்கள் மிகவும் சூட்சுமமானதும், சீர்திருத்தப்பட்டதும் ஆகும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தினருடன் வாழ்கின்ற போதிலும், நீங்கள் ஒரு மலர் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள் என்ற உண்மையை உங்களுடைய புத்தியில் வைத்திருக்க வேண்டும். இது அனுபவம் செய்வதற்கான விடயம். நீங்கள் இந்த முயற்சியை நடைமுறையில் செய்யவேண்டும். முயற்சி நினைவில் தங்கியுள்ளது. ஒரே வீட்டில், ஒருவர் அன்னமாகவும், மற்றவர் நாரையாகவும் இருக்கின்றனர். சில தம்பதிகள் முதற் தரமானவர்கள். அவர்கள் விகாரமான எந்தவித எண்ணத்தையும் கொண்டிருப்பதில்லை. அவர்கள் ஒன்றாக வாழ்ந்தும் தூய்மையாக இருக்கின்றார்கள். அவர்கள் எந்தளவிற்கு தைரியமானவர்கள் எனக் காட்டுகின்றார்கள். ஆகையினால் அவர்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். அவ்வாறான பல குழந்தைகள் இருக்கின்றார்கள். சிலர் மற்றவரை அடித்து விகாரத்திற்காக சண்டை போடுகின்றார்கள். உங்களுடைய ஸ்திதி தூய்மை அற்றவர்கள் ஆகுவதற்கான சிறிதளவு எண்ணத்தையேனும் கொண்டிருக்காது இருக்க வேண்டும். தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு ஒவ்வொரு சூழ்நிலை பற்றியும் அறிவுரை வழங்குகின்றார். நீங்கள் ஸ்ரீ ஸ்ரீயின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் ஸ்ரீ இலக்ஷ்மியும், ஸ்ரீ நாராயணனும் ஆகுவீர்கள் என அறிவீர்கள். ஸ்ரீ என்றால் மேன்மையானவர் என அர்த்தம். சத்தியயுகத்தில் நீங்கள் முதற்தரமான மேன்மையானவராக இருந்தீர்கள். திரேதா யுகத்தில் இரு கலைகள் குறைகின்றன. நீங்கள் இந்த நேரத்திலேயே இந்த ஞானத்தை பெறுகின்றீர்கள். இந்தக் கடவுளின் ஒன்றுகூடலில், இந்த ஞான இரத்தினங்களை மதிக்கத் தெரிந்தவர்களும் கொட்டாவி விடாதவர்களுமே முதல் வரிசையில் அமர வேண்டுமென்பது நியதியாகும். சில குழந்தைகள் தந்தையின் முன்னால் அமர்ந்திருந்து தொடர்ந்தும் கொட்டாவி விட்டுக்கொண்டோ அல்லது தூங்கிவிழுந்து கொண்டோ இருக்கின்றார்கள். அவர்கள் பின்னால் சென்று அமரவேண்டும். இது கடவுளது குழந்தைகளைக் கொண்ட கடவுளின் ஒன்றுகூடலாகும். இருப்பினும், சில ஆசிரியர்கள், அவ்வாறான நபர்களை இங்கும் அழைத்து வருகின்றார்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து செல்வத்தைப் பெறுகின்றீர்கள். ஒவ்வொரு வாசகங்களும் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்தவை. இந்த சங்கமயுகத்தில் மாத்திரமே, உங்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா நாங்கள் மீண்டும் ஒரு தடவை எங்களின் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருவதற்காகவே வந்துள்ளோம் என நீங்கள் கூறுகின்றீர்கள். பாபா மறுபடியும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இந்த உலகம் அழுக்கானது. நீங்கள் இதில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது இந்த உலகில் பார்ப்பவை எல்லாம் நாளை இருக்கமாட்டாது. அங்கே ஆலயங்களின் பெயரோ, சுவடோ இருக்காது. சுவர்க்கத்தில் எவருக்கும் புராதன இடங்களுக்குச் செல்வதற்கான தேவை இருக்காது. இங்கே புராதனப் பொருட்களுக்கு பெருமளவு மதிப்பு இருக்கின்றது. உண்மையில் தந்தையைத் தவிர வேறு எதற்குமே பெறுமதி இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் வராவிடில் நீங்கள் எவ்வாறு இராச்சியத்தைக் கோருவீர்கள்? இதைத் தெரிந்து கொண்டவர்கள் வந்து தந்தையிடம் இருந்து அவர்களது ஆஸ்தியைக் கோரிக் கொள்வார்கள். இதனாலேயே கோடிக்கணக்கானவர்களுள் ஒரு கைப்பிடியளவு மாத்திரமே நினைவு கூரப்படுகின்றார்கள். எதனைப்பற்றியும் எந்தவிதமான சந்தேகமும் இருக்கக்கூடாது. நாங்களும் பிரசாதம் படைக்கின்ற சம்பிரதாயத்தைக் கொண்டுள்ளோம். அதற்கு இந்த ஞானத்துடனோ, அல்லது நினைவுடனோ எந்தத் தொடர்பும் இல்லை. உங்களுக்கு எதனுடனும் தொடர்பில்லை. இரண்டு விடயங்களே இருக்கின்றன: அல்பாவும், பீற்றாவான இராச்சியமும் ஆகும். கடவுளே அல்பா என அழைக்கப்படுகின்றார். மக்கள் அவரை நினைவு செய்வதற்கு மேல்நோக்கி அவர்களது விரலால் சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆத்மாவே அதைச் சுட்டிக் காட்டுகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னைப் பக்தி மார்க்கத்தில் நினைவு செய்தீர்கள். நீங்கள் அனைவரும் எனது காதலர்கள். பாபா ஒவ்வொரு கல்பத்திலும் வந்து மனிதர்கள் அனைவரையும் அவர்களது துன்பத்திலிருந்து விடுவித்து, அமைதியையும், சந்தோஷத்தையும் அவர்களுக்கு வழங்குகின்றார் என நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே பாபா எவ்வாறு எல்லையற்ற தந்தை உலகில் அமைதியை ஸ்தாபிக்கின்றார் எனப் புரிந்து கொள்ளுங்கள் என எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகையை தொங்க விடுமாறு உங்களுக்கு கூறுகின்றார். இந்த உலகில் எவ்வாறு ஒரு செக்கனில் 21 பிறவிகளுக்கு உலகின் அதிபதிகள் ஆகுவது எனப்புரிந்து கொள்ள விரும்பினால், இங்கே வந்து புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிற்கு வெளியே இந்தப் பெயர்ப் பலகையை தொங்க விடுங்கள். நீங்கள் மூன்று அடி நிலத்தில் மகத்தான வைத்தியசாலையையும் பல்கலைக்கழகத்தையும் திறக்கலாம். நீங்கள் நினைவின் மூலம் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியத்தையும் இந்தக் கல்வியின் மூலம், சுவர்க்க ஆட்சி உரிமையையும் பெறுகின்றீர்கள். பிரஜைகளும் தாங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவோம் எனக் கூறுகின்றனர். இன்று மக்கள் நரகவாசிகளாக இருப்பதால் அவர்கள் வெட்கம் அடைகின்றார்கள். அவர்கள் எங்களுடைய தந்தை சுவர்க்கவாசியாகி விட்டார், நாங்கள் நரகவாசிகள் எனக் கூறுகின்றார்கள். நாங்கள் மரணிக்கும் பொழுது, சுவர்க்கத்திற்குச் செல்வோம். இது மிகவும் இலகுவான விடயம். ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்தால் அவர் ஒரு விசேடமானவர் அல்லது ஒரு மகாதானி என்றும், அதனால் அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் எனவும் கூறுவார்கள். எவ்வாறாயினும் எவரும் இதுவரை அங்கே செல்லவில்லை. ஒரு நாடகம் முடிகின்ற பொழுது அனைவரும் மேடையில் வந்து நிற்பார்கள். நடிகர்கள் அனைவரும் இங்கே வந்த பின்னரே இந்த யுத்தம் இடம்பெறும். பின்னர் அனைவரும் வீடு திரும்புவார்கள். சிவனின் திருமண ஊர்வலம் நினைவு கூரப்படுகின்றது. ஆத்மாக்கள் அனைவரும் சிவபாபாவுடன் வீடு திரும்புவார்கள். உங்களுடைய 84 பிறவிகள் இப்பொழுது முடிவடைகின்றது என்பதே பிரதான விடயம். பாம்பு எவ்வாறு தனது பழைய தோலை அகற்றிவிட்டு புதியதை எடுக்கின்றதோ, அவ்வாறே இந்தப் பழைய சப்பாத்து அகற்றப்பட வேண்டும். நீங்கள் சத்தியயுகத்தில் புதிய சரீரத்தைக் கொண்டிருப்பீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் மிகவும் அழகானவர்! அவரிடம் பெருமளவு கவர்ச்சி உள்ளது! அவர் முதல் தரமான சரீரத்தைக் கொண்டிருப்பார். நாங்களும் அவ்வாறான சரீரங்களைப் பெறுவோம். நான் நாராயணன் ஆகுவேன் என நீங்கள் கூறுகின்றீர்கள். இந்தத் சரீரம் உக்கிப்போய் அசுத்தம் ஆகியுள்ளது. நான் இதை நீக்கிவிட்டு புதிய உலகிற்குச் செல்வேன். நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுகின்றீர்கள் எனக் கூறிய போதிலும் நீங்கள் ஏன் இதை நினைவு செய்து சந்தோஷத்தை அனுபவம் செய்யக்கூடாது? சத்திய நாராயணனின் கதையை மிக நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதைச் செய்து காட்டுங்கள். உங்களுடைய வார்த்தைகளும் செயல்களும் ஒன்றாக இருக்க வேண்டும். உங்கள் வியாபாரம் போன்றவற்றை தொடர்ந்து செய்யுங்கள். ஆனாலும் தந்தை கூறுகின்றார்: உங்களுடைய கைகள் வேலை செய்யட்டும், உங்களுடைய இதயம் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கட்டும். நீங்கள் கூடியளவு இந்த ஞானத்தைக் கிரகித்தால், நீங்கள் கூடியளவு மதிப்பை அதற்குக் கொடுப்பீர்கள். இந்த ஞானத்தைக் கிரகிப்பதன் மூலம் நீங்கள் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். இது ஆன்மீக ஞானம். நீங்கள் ஆத்மாக்கள். ஆத்மாவே சரீரத்தின் மூலம் பேசுகின்றார். ஆத்மாவே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார், ஆத்மாவே இந்த ஞானத்தைக் கிரகிக்கின்றார். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தப் பழைய உலகில் பழைய பொருட்களைப் பார்க்க வேண்டியிருக்கின்ற போதிலும் அவற்றைப் பார்க்காதீர்கள். ஒரு சாதாரண மனிதனில் இருந்து, நாராயணன் ஆகுவதற்கு உங்களுடைய வார்த்தைகளும், செயல்களும் ஒன்றாக இருக்கட்டும்.2. இந்த அழியாத ஞான இரத்தினங்களுக்கு மதிப்பு அளியுங்கள். நீங்கள் சம்பாதிக்கின்ற வருமானம் மிகப்பெரியது. ஒருபோதும் தூங்கி விழவோ, கொட்டாவி விடவோ வேண்டாம். ஒருவருடைய பெயரிலோ, அல்லது ரூபத்திலோ கவரப்படுகின்ற தீய சகுனத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருந்தவண்ணம் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தாமரை மலரைப் போல் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருப்பீர்களாக.சங்கமயுகத்தில், தந்தை சேவையாளராக வரும்போது, அவர் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் ஒரு பாதுகாப்புக் குடையின் மூலம் சதா சேவை செய்கிறார். நீங்கள் அவரை நினைவு செய்த உடனேயே, ஒரு விநாடியில் அவரின் சகவாசத்தை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். இந்த நினைவெனும் பாதுகாப்புக் குடையானது, இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இடையே உங்களை ஒரு தாமரை மலரைப் போல் அன்பாகவும் பற்றற்றவராகவும் ஆக்குகிறது. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. தந்தையை உங்களுக்கு முன்னால் கொண்டு வருவதன் மூலமும் உங்களின் ஆதி ஸ்திதியில் ஸ்திரமாக ஆகுவதன் மூலமும் எந்த வகையான சூழ்நிலையும் மாற்றப்பட்டுவிடும்.
சுலோகம்:
வார்த்தைகள் என்ற திரை உங்களுக்கு இடையே வர அனுமதிக்காதீர்கள். அப்போது நீங்கள் தொடர்ந்து தந்தையின் சகவாசத்தை அனுபவம் செய்வீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
எந்தவிதமான தடையில் இருந்தும் விடுபடுவதற்கு, உங்களின் ரூபத்தை, அதாவது உங்களின் ஆத்ம உணர்வு ஒளி ரூபத்தை ஒரு விநாடியில் உணர்ந்தவர் ஆகுங்கள். செயல்படும்போது, ஒரு கருவியாக இருக்கும் உணர்வைக் கொண்டிருங்கள். இந்த இலேசான மற்றும் ஒளியான ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். நீங்கள் ஒரு விநாடியில் உயரப் பாய்வீர்கள். அப்போது நீங்கள் முன்னேறுவதை எந்தத் தடையும் இடையூறு செய்யாது.