04.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தின் அடிப்படையில் மௌனத்தின் ஆழத்திற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து அமைதி என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அனைத்தும் மௌனத்தில் அடங்கி உள்ளது.

கேள்வி:
புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுவதற்குப் பிரதானமான அத்திவாரம் எது?

பதில்:
தூய்மை. புதிய உலகை ஸ்தாபிப்பதற்குப் பிரம்மாவின் சரீரத்தில் தந்தை பிரவேசிக்கும் பொழுது, நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். அப்பொழுது, ஆண், பெண் என்ற அனைத்து உணர்வுகளும் முடிவடைகின்றன. நீங்கள் இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகும் பொழுது, அந்தத் தூய உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நாங்கள் சகோதர, சகோதரிகள் போல் ஒன்றாக வாழ்ந்து, விகாரமான பார்வையைக் கொண்டிருக்காது, ஒருவரையொருவர் எச்சரிக்கை செய்து முன்னேறுவோம் என நீங்கள் உங்களுக்குள் சத்தியம் செய்கின்றீர்கள்.

பாடல்:
விழித்தெழுங்கள் மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! புதிய வைகறை தோன்றவுள்ளது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள், சுயதரிசனச் சக்கரம் உங்கள் புத்தியில் சுழன்றது. தந்தையும் சுயதரிசனச் சக்கரதாரி என அழைக்கப்படுகின்றார். ஏனெனில், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்திருப்பது என்றால், சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர் என்று அர்த்தம். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. பிராமணர்களாகிய உங்களுக்கு அனைத்தும் மௌனத்திலேயே தங்கியுள்ளது. அமைதியை அருள்பவர் என்று அவரை மனிதர்கள் அனைவரும் அழைக்கின்றனர்: “ஓ அமைதியை அருள்பவரே!” யார் அமைதியைக் கொடுப்பவர் என்பதோ அல்லது யார் எங்களை அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார் என்பதோ வேறு எவருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகின்றீர்கள். தேவர்களைச் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என அழைக்க முடியாது, பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு இருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, சுயதரிசனச் சக்கரதாரிகள் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையை நினைவுசெய்வதே பிரதானமான விடயம். தந்தையை நினைவு செய்வதென்றால், உங்கள் அமைதி எனும் ஆஸ்தியைக் கோருவது என அர்த்தம். அமைதியிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது. உங்கள் ஆயுள் அதிகரிப்பதுடன், உங்கள் சரீரமும் நோய்களில் இருந்து விடுபடுகின்றது. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரி ஆக்க முடியாது. ஆத்மாக்களே அவ்வாறு ஆகுகின்றனர். தந்தையிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் இருப்பதனால் அவர் இவ்வாறானவராக உள்ளார். புதிய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் பாடலிலும் கேட்டீர்கள். இப்பாடல்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. தந்தை இங்கே அமர்ந்திருந்து அவை அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றார். அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். ஆகவே குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள். தந்தை புதிய உலகைப் படைக்கும் பொழுது, நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பிரம்மாகுமாரர் அல்லது பிரம்மாகுமாரி ஆவீர்கள். இது உங்கள் புத்தியில் நிலைத்திருக்கும் பொழுது, ஆண், பெண் என்ற உணர்வு அகற்றப்படுகின்றது. நாங்கள் உண்மையில் சகோதரர்கள் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. பின்னர் தந்தை படைப்பைப் படைக்கும் பொழுது, நாங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுவதுடன், குற்றப் பார்வையும் முடிவடைகின்றது. “ஓ தூய்மை ஆக்குபவரே, வாருங்கள்!” என நாங்கள் அழைத்துக் கொண்டிருந்தோம் என்பதைத் தந்தையும் எங்களுக்கு நினைவூட்டுகின்றார். நான் இப்பொழுது வந்துவிட்டதால், உங்களது இந்த இறுதிப்பிறவியில் தூய்மையாக இருக்குமாறு நான் உங்களுக்குக் கூறுகின்றேன். பின்னர் நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பிராமணர்கள். ஆதலால், ஒவ்வொரு வீட்டிலும் உங்களது கண்காட்சிப் படங்கள் இருக்க வேண்டும். இந்தப் படங்களை நீங்கள் நிச்சயமாக உங்கள் வீடுகளில் வைத்திருக்க வேண்டும். இந்தப் படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிக இலகுவாக இருக்கும். 84 பிறவிகளின் சக்கரம் உங்கள் புத்தியில் உள்ளது. ஓகே, ஓர் ஆசிரியரை உங்களுக்கு அனுப்ப முடியும், அவர் வந்து சேவை செய்த பின்னர் திரும்பிச் செல்லலாம். உங்களால் ஒரு கண்காட்சியை ஒழுங்குசெய்ய முடியும். பக்திமார்க்கத்தில் ஒருவருக்குக் ஸ்ரீகிருஷ்ணரை எவ்வாறு வழிபடுவது அல்லது ஏதாவது மந்திரங்கள் போன்றவை தெரியாது விட்டால், அவர் ஒரு பிராமணப் புரோகிதரை வரவழைக்கின்றார். அவர் தினமும் வந்து சில சடங்குகளைச் செய்வார். நீங்களும் யாராவது ஒருவரை அழைக்கலாம். இந்த ஞானம் உண்மையில் மிக இலகுவானது. பிரஜாபிதா பிரம்மாவின் மூலமாகவே தந்தை உலகைப் படைத்திருக்க வேண்டும். ஆகவே, பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் சகோதர, சகோதரிகள் ஆகியிருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் சகோதர, சகோதரியாகச் சேர்ந்து வாழ்வதுடன், எந்த ஒரு விகாரமான பார்வையினையும் கொண்டிராமல் இருப்பீர்கள் எனவும் நீங்கள் சத்தியம் செய்கின்றீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் எச்சரித்து முன்னேறுகின்றீர்கள். நினைவு யாத்திரையே பிரதான விடயம். அம்மக்கள் விஞ்ஞான சக்தியின் மூலம் மேலே மிக உயரே செல்வதற்குக் கடினமாக முயற்சிக்கின்றார்கள். எவ்வாறாயினும், அங்கு மேலே ஓர் உலகம் இல்லை. அதுவே விஞ்ஞானத்தின் ஆழத்திற்குச் செல்வதென அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தின் அடிப்படையில் மௌனத்தின் ஆழத்திற்குச் செல்கின்றீர்கள். அவர்களிடம் விஞ்ஞானம் உள்ளது, உங்களிடம் மௌனம் உள்ளது. ஆத்மாக்களாகிய நீங்களே மௌன சொரூபங்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே சரீரங்களை எடுக்கின்றீர்கள். எவரும் செயல்களைச் செய்யாது வாழ முடியாது. தந்தை கூறுகின்றார்: உங்களை அந்தச் சரீரங்களிலிருந்து வேறுபட்ட, ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது மிகவும் இலகுவானது. இதனை அதிகளவு எனது பக்தர்களுக்கு, சிவனை வழிபடுபவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அனைத்திலும் அதிமேன்மையான வழிபாடானது சிவ வழிபாடாகும். ஏனெனில் அவரே அனைவருக்கும் சற்கதி அளிப்பவர். தந்தை வந்துள்ளார் என்பதும், அவர் எங்கள் அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்பதும் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாடகத்திற்கு ஏற்ப, சரியான நேரத்தில் நாங்கள் எங்களது கர்மாதீத ஸ்திதியை அடைவோம், பின்னர் விநாசம் இடம்பெறும். ஆத்மாக்களாகிய நாங்கள் சதோபிரதான் ஆகும்வகையில், பெருமளவு முயற்சி செய்யப்பட வேண்டும். நாங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். கீதையானது ஸ்ரீமத் பகவத்கீதை என அழைக்கப்படுகின்றது. இதுவே மகத்தான புகழாகும். முற்றிலும் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களும் முற்றிலும் விகாரம் அற்றவர்களும் எனத் தேவர்களின் புகழ் பாடப்படுகின்றது. தந்தையே வந்து, எங்களை முற்றிலும் தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். உலகம் முற்றிலும் தூய்மை அற்றதாகும் பொழுது, தந்தை வந்து உலகை முற்றிலும் தூய்மையானதாக ஆக்குகின்றார். தாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றே அனைவரும் கூறுகின்றனர். ஆகவே சுவர்க்க ஆஸ்தியானது நிச்சயம் இருக்கவே வேண்டும். மனிதர்களின் தந்தையான, பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் நாங்கள் இப்பொழுது சகோதர, சகோதரிகள் ஆகுகின்றோம். தந்தை முன்னைய கல்பத்திலும் வந்தார். இதனாலேயே சிவஜெயந்தி (சிவனின் பிறந்தநாள்) கொண்டாடப்படுகின்றது. நீங்கள் நிச்சயமாகப் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். பாபா நாங்கள் சகபாடிகளாக ஒன்றாக வாழ்ந்து, ஒரு தூய வாழ்க்கையை நடாத்துவோம் என நீங்கள் தந்தைக்குச் சத்தியம் செய்கின்றீர்கள். நாங்கள் உங்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவோம். இது பெரிய விடயமல்ல. இது இப்பொழுது உங்கள் இறுதிப் பிறவி. இந்த மரண உலகம் முடிவிற்கு வரப்போகின்றது. நீங்கள் இப்பொழுது விவேகிகள் ஆகியுள்ளீர்கள். யாராவதொருவர் தன்னைக் கடவுள் என்று கூறினால் நீங்கள் கூறலாம்: அனைவருக்கும் சற்கதி அளிப்பவரே கடவுள், ஆகவே அந்த நபர் எவ்வாறு தன்னை அவ்வாறு அழைக்க முடியும்? எவ்வாறாயினும், அது நாடகத்தின் விளையாட்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: சேவையில் மும்முரமாக ஈடுபட்டிருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் கண்காட்சியினை ஆரம்பியுங்கள். இதனை விடப் பெரும் புண்ணிய செயல் வேறெதுவும் இல்லை. தந்தையிடம் செல்லும் வழியை காட்டும் புண்ணியத்தினை விடவும் மகத்தானது வேறெதுவும் இல்லை. தந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதனாலேயே நீங்கள் தந்தையை அழைத்தீர்கள்: “ஓ தூய்மையாக்குபவரே! விடுதலையளிப்பவரே! வழிகாட்டியே, வாருங்கள்!” நீங்களே பாண்டவர்கள் எனவும் நினைவுகூரப்படுபவர்கள். தந்தையே வழிகாட்டி ஆவார். அவர் ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். அந்த வழிகாட்டிகள் பௌதீகமானவர்கள், ஆனால் அந்த ஒரேயொருவர் ஆன்மீக வழிகாட்டி ஆவார். அவை பௌதீகமான யாத்திரைகள், ஆனால் இதுவோ ஆன்மீக யாத்திரை. சத்திய யுகத்தில் பக்திமார்க்கத்தின் பௌதீக யாத்திரைகள் இருக்க மாட்டாது. அங்கு நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது உங்களை மிகவும் விவேகிகள் ஆக்குகின்றார். ஆகவே நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். ஏதாவது சந்தேகங்கள் போன்றவை இருப்பின் நீங்கள் கேட்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் எனது அதி அன்பிற்கினிய குழந்தைகள். நீங்கள் அரைக்கல்பமாக எனது காதலர்களாக இருந்து வருகின்றீர்கள். ஒரேயொருவருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டு, பல்வேறு ஆலயங்களும் கட்டப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் நான் ஒரேயொருவர் மாத்திரமே. எனது பெயர் சிவன். நான் 5000 வருடங்களின் முன்னரும் பாரதத்திற்கு வந்து குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுத்தேன். இப்பொழுது நான் உங்களை மீண்டும் ஒருமுறை தத்தெடுக்கின்றேன். நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் ஆதலால், நீங்கள் பேரன்களும் பேத்திகளும் ஆவீர்கள். இங்கு ஆத்மாவே ஆஸ்தியைக் கோரிக் கொள்கின்றார். இதில் சகோதரர் அல்லது சகோதரி என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மாவே கற்று, ஆஸ்தியைக் கோருகின்றார். அனைவருக்கும் இதற்கான உரிமை உள்ளது. இந்தப் பழைய உலகில் குழந்தைகளாகிய நீங்கள் பார்க்கும் அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. மகாபாரதப் போர் உண்மையில் உள்ளது. எல்லையற்ற தந்தை உங்கள் எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் எங்களுக்கு எல்லையற்ற ஞானத்தையும் கொடுக்கின்றார். ஆகவே, நிச்சயம் எல்லையற்ற துறவறம் இருக்க வேண்டும். ஒரு சக்கரத்துக்கு முன்னரும் தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பது உங்களுக்குத் தெரியும். இதுவே உருவாக்கப்பட்டுள்ள, குதிரை அர்ப்பணிக்கப்பட்ட, சுய இராச்சியத்திற்கான யாகமாகும். பின்னர் இராச்சியத்திற்காக, சத்தியயுகத்துப் புதிய உலகம் நிச்சயம் தேவைப்பட்டது. பழைய உலகம் அழிக்கப்படுகிறது. இது 5000 வருடங்களுக்கான விடயம். இந்த யுத்தம் இடம்பெறுவதன் மூலமே சுவர்க்க வாசல்கள் திறக்கப்படுகின்றன. “எவ்வாறு சுவர்க்க வாசல் திறக்கப்படுகின்றது என வந்து புரிந்து கொள்ளுங்கள்” என அறிவிப்புப் பலகையில் எழுதுங்கள். உங்களால் விளங்கப்படுத்த முடியாவிடின், அப்பொழுது ஏனையோரை வந்து விளங்கப்படுத்துமாறு அழையுங்கள். பின்னர் உங்கள் எண்ணிக்கை படிப்படியாக வளரும். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான, பிராமணர்களான நீங்கள் பலர் இருக்கிறீர்கள். சிவபாபாவிடம் இருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது. அவரே அனைவரதும் தந்தையாவார். நீங்கள் பிராமணர்களில் இருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள் என்பதைத் தெளிவாக உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நாங்கள் தேவர்களாக இருந்து, பின்னர் சக்கரத்தைச் சுற்றி வந்தோம். நாங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளோம், பின்னர் நாங்கள் விஷ்ணு தாமத்துக்குச் செல்வோம். இந்த ஞானம் இலகுவானது, ஆனால் பல மில்லியன் கணக்கானோரில் மிகச்சிலர் மாத்திரம் வெளிப்படுவார்கள். பலர் கண்காட்சிகளுக்கு வந்தபொழுதிலும் அரிதாகவே எவரேனும் வெளிப்படுகின்றனர். சிலர் அதனைப் புகழ்ந்து இது மிக நல்லது என்றும், தாங்கள் வருவதாகவும் கூறுகின்றனர். அரிதாகச் சிலர் மாத்திரமே வந்து ஏழு நாள் பாடநெறியைப் பெறுகின்றனர். இப்பொழுது ஏழு நாள் என்பது என்ன? கீதை ஏழு நாட்களுக்கு வாசிக்கப்படுகின்றது. நீங்களும் பத்தியில் ஏழு நாட்களுக்கு இருக்க வேண்டும். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதித் தந்தையை நினைவுசெய்வதன் மூலம் உங்களிலிருந்து குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும். அரைக்கல்பமாக உங்களுக்குள் சேகரிக்கப்பட்டுள்ள, அழுக்கான சரீர உணர்வு எனும் நோயை நீங்கள் அகற்ற வேண்டும். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! ஏழு நாள் பாடநெறி ஒரு பெரிய விடயமல்ல. சிலர் ஒரு விநாடியிலேயே அம்பினால் தைக்கப்பட முடியும். இறுதியில் வந்தவர்களால் விரைவில் முன்னோக்கிச் செல்ல முடியும். தாங்கள் இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடி நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுவார்கள் என அவர்கள் கூறுவார்கள். பழையவர்களை விடவும் சிலர் விரைவாக முன்னேறிச் செல்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு இப்பொழுது ஏற்கெனவே கூறப்பட்ட கருத்துக்கள் உடனடியாகவே வழங்கப்படுகின்றன. கண்காட்சிகளில் படங்களை விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. உங்களால் விளங்கப்படுத்த முடியாதுவிடின், ஒரு சகோதரியைத் தினசரி வந்து விளங்கப்படுத்துமாறு அழையுங்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. அது 1250 வருடங்களுக்குத் தொடர்ந்தது. அது அத்தகைய ஒரு சிறுகதை. நாங்கள் தேவர்களாக இருந்தோம், பின்னர் சத்திரியர்களாகவும் பின்னர் வைசியர்களாகவும் அதன்பின்னர் சூத்திரர்களாகவும் ஆகினோம். ஆத்மாவாகிய நான், பிராமணன் ஆகினேன். “ஹம்ஸோ” (நான் எவ்வாறு இருந்தேனோ, அவ்வாறு ஆகுவேன்) என்பதன் அர்த்தம் உங்களுக்கு மிக சாதுரியமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பல்வகை ரூபத்தின் படம் உள்ளது, ஆனால் அதிலிருந்து பிராமணர்களும், சிவபாபாவும் அகற்றப்பட்டுள்ளனர். அந்தப் படத்தின் அர்த்தத்தை முற்றிலுமே எவரும் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நினைவு செய்வதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது. நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்களாகி மேன்மையான அந்தஸ்தைக் கோர விரும்பினால், அப்பொழுது ஏன் இது நடந்தது அல்லது ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்று சிந்திப்பதை நிறுத்துங்கள். அவை அனைத்தையும் நிறுத்திவிட்டு, தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்கான ஓர் எண்ணத்தை மாத்திரம் கொண்டிருங்கள். எந்தளவிற்கு நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்குப் பாவச்செயல்களை வென்றவர்கள் ஆகுவதுடன், மேன்மையான அந்தஸ்தையும் கோருவீர்கள். அத்துடன்,வீணாணவற்றைச் செவிமடுப்பதனால், உங்கள் தலையைப் பழுதாக்க வேண்டாம். அவை அனைத்தையும் விட, முக்கியமான விடயம் அவரை மறக்காமல் இருப்பதே ஆகும். எவருடனும் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நேரம் மிகப் பெறுமதி வாய்ந்தது. புயல்களையிட்டு அஞ்சாதீர்கள். பல சிரமங்கள் வருவதுடன் இழப்புக்களும் ஏற்படலாம். ஆனால் என்றுமே தந்தையை நினைவு செய்வதை மறக்க வேண்டாம். இந்த நினைவின் மூலமே நாங்கள் தூய்மையாக வேண்டும். எங்கள் சொந்த முயற்சிகள் மூலம் நாங்கள் ஒரு மேன்மையான அந்தஸ்தைக் கோர வேண்டும். இந்த வயோதிபத் தந்தை அத்தகைய மேன்மையான அந்தஸ்தைக் கோருகின்றார், எனவே ஏன் உங்களால் முடியாது? இதுவும் ஒரு கல்வியே. நீங்கள் எந்தப் புத்தகத்தையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முழுக் கதையும் உங்கள் புத்தியில் இருக்கிறது. இது ஒரு சிறுகதை. இது ஒரு விநாடிக்கான விடயம். “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறப்படுகின்றது”. தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்! அனைவரும் அரசர்களாக முடியாது என நீங்கள் கூறுகிறீர்கள்! ஆ! ஆனால் நீங்கள் ஏன் ஏனைய அனைவரைப் பற்றியும் கவலைப்படுகின்றீர்கள்? அனைவரும் புலமைச்சித்தி அடைய வேண்டும் என ஒரு பாடசாலையில் அக்கறைப்படுகின்றார்களா? அவர்கள் வெறுமனே கற்க மாத்திரம் ஆரம்பிக்கின்றார்கள். ஒவ்வொருவரின் முயற்சியில் இருந்தும் அவர்களில் ஒவ்வொருவரும் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த நேரம் மிகவும் பெறுமதி வாய்ந்தது. இதைப் பயனற்ற விடயங்களில் வீணாக்காதீர்கள். எத்தனை புயல்கள் வந்தாலும், என்ன இழப்பு ஏற்பட்டாலும்; தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.

2. தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாறுவதைப் பற்றியே சிந்தியுங்கள். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். “ஹம்ஸோ சோஹம்” என்னும் சிறுகதையைப் புரிந்துகொண்டு, சாதுரியமாக விளங்கப்படுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதன் மூலம் மாயையை உங்களின் பக்தை ஆக்குகின்ற, மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.

அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, உங்களின் பல பட்டங்களை, உங்களின் பலநற்குணங்கள் என்ற அலங்காரத்தை, உங்களின் பல வகையான சந்தோஷத்தை, உங்களின் ஆன்மீக போதையை, படைப்பவரையும் படைப்பையும் பற்றிய விரிவாக்கமான கருத்துக்களை, உங்களின் பேறுகளின் கருத்துக்களை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். நீங்கள் விரும்பும் தலைப்புக்களைக் கடையுங்கள். உங்களால் இலகுவாக அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். அப்போது நீங்கள் ஒருபோதும் எவரின் ஆதிக்கத்திற்கும் உட்பட மாட்டீர்கள். மாயையும் உங்களை வணங்குவாள். மாயை சங்கமயுகத்தின் முதல் பக்தை ஆகுவாள். நீங்கள் மாயையை வென்றவராக, ஒரு மாஸ்ரர் தெய்வமாக ஆகும்போது, மாயை உங்களின் பக்தை ஆகிவிடுவாள்.

சுலோகம்:
உங்களின் வார்த்தைகளையும் செயல்பாடுகளையும் தந்தை பிரம்மாவிற்கு ஒத்ததாக ஆக்குங்கள். அப்போது நீங்கள் உண்மையான பிராமணர் என்று அழைக்கப்படுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.

சதா நினைவில் இருப்பதற்கான இலகுவான வழிமுறை, உங்களின் இல்லறத்தில் (பிரவுருத்தி) இருந்தவண்ணம் அப்பாற்பட்ட (பர் விருத்தி) மனோபாவத்தைக் கொண்டிருப்பதாகும். அப்பாற்பட்ட மனோபாவத்தைக் கொண்டிருத்தல் என்றால், ஆத்ம உணர்வு என்று அர்த்தம். தமது ஆத்ம உணர்வு ரூபத்தின் விழிப்புணர்வைப் பேணுபவர்கள், சதா பற்றற்றவர்களாகவும் தந்தையின் மீது அன்பு உடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் எதையாவது தாம் செய்தோம் என அவர்கள் உணர மாட்டார்கள். ஆனால் ஒரு விளையாட்டை விளையாடியதாகவே உணர்வார்கள். அவர்களின் ஆன்மீகக் கண்களும் ஆன்மீக ரூபமும் ஒரு தெய்வீகக் கண்ணாடி ஆகிவிடும். அதில் ஒவ்வோர் ஆத்மாவாலும் எந்தவித முயற்சியும் செய்யாமல் தனது ஆத்ம உணர்வு ரூபத்தைப் பார்க்கக்கூடியதாக இருக்கும்.