05.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த விலைமாதர் இல்லத்தை சிவாலயமாக மாற்றுவதற்குத் தந்தை வந்துள்ளார். கடவுளின் செய்தியை விலைமாதர்களுக்கும் கொடுத்து அவர்களையும் நன்மை அடையச் செய்வது உங்களது கடமையாகும்.
கேள்வி:
எந்தக் குழந்தைகள் தமக்கு தாமே பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றனர்?பதில்:
எந்தவொரு காரணத்திற்காகவும் முரளியை, படிப்பைத் தவறவிடுபவர்கள் தமக்கு தாமே பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றனர். சில குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் முரண்பட்டு வகுப்பிற்கு வருவதை நிறுத்தி விடுகின்றனர். அவர்கள் ஏதொவொரு சாக்குப் போக்கைக் கூறி வீட்டில் உறக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தமக்கு தாமே இழப்பை ஏற்படுத்துகின்றனர். ஏனெனில் ஒவ்வொரு நாளும் பாபா ஏதோவொரு புதிய கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றார். நீங்கள் அதனைச் செவிமடுக்கா விட்டால் எவ்வாறு உங்களால் அதனைப் பயிற்சியில் இட முடியும்?ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, மாயை உங்களை மறக்கச் செய்தாலும், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்கே இப்பொழுது முயற்சி செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். சிலரை மாயை முழுநாளும் இதை மறக்கச் செய்கிறாள். அவர்கள் ஒருபோதும் தந்தையை நினைவு செய்வதில்லை. நினைவு செய்வார்களாயின், அவர்கள் அந்த சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். கடவுளே தமக்கு கற்பிக்கின்றார் என்பதைக் கூட அவர்கள் மறந்து விடுகின்றார்கள். இதனை மறப்பதனால், அவர்களால் சேவை செய்ய முடிவதில்லை. அனைவரிலும் அதி சீரழிந்தவர்களான விலைமாதர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என கடந்த இரவு பாபா விளங்கப்படுத்தி இருந்தார். தந்தையின் ஞானத்தை கிரகிப்பதன் மூலம் அவர்கள் சுவர்க்கத்தின் சக்கரவர்த்தினிகள் ஆக முடியும் என விலைமாதர்களுக்கு தெரியப்படுத்துங்கள். செல்வந்தர்களால் அவ்வாறு ஆக முடியாது. கற்றவர்களும், அனைத்தும் தெரிந்தவர்களும், இந்த ஞானத்தை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும். அப்பொழுது அந்த அப்பாவிகள் மிக சந்தோஷம் அடைவார்கள், ஏனெனில் அந்தப் பெண்களும் பலவீனமாகவே இருக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். தந்தை தொடர்ந்தும் பல வழிமுறைகளை விளங்கப்படுத்துகின்றார். அவர்களிடம் கூறுங்கள்: நீங்களே அனைவரிலும் அதி மேலானவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது அனைவரிலும் அதிதாழ்ந்தவர்களாக ஆகியுள்ளீர்கள். உங்களது பெயரின் காரணமாகவே பாரதம் விலைமாதர் இல்லமாக ஆகியுள்ளது. இந்த முயற்சியைச் செய்வதன் மூலம் உங்களால் மீண்டும் ஒருமுறை சிவாலயத்திற்குச் செல்லமுடியும். நீங்கள் பணத்திற்காக தற்பொழுது அத்தகைய இழிவான செயல்களைச் செய்கிறீர்கள். இப்பொழுது அவற்றைச் செய்வதை நிறுத்துங்கள். இவ்வாறு அவர்களுக்கு விளங்கப்படுத்தும் போது அவர்கள் மிக சந்தோஷம் அடைவார்கள். எவராலும் உங்களை தடுக்க முடியாது, ஏனெனில் இது நல்லதொரு விடயமாகும். கடவுள் ஏழைகளுக்குச் சொந்தமானவர். அவர்கள் பணத்திற்காக அத்தகைய தீய செயல்களைச் செய்கின்றனர். அது அவர்களுக்கு ஒரு வியாபாரம் போன்றதாகும். சேவை விரிவடைவதற்கான வழிமுறைகளை இப்பொழுது நீங்கள் உருவாக்குவீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள். சில குழந்தைகள் ஏதோவொன்றிற்காக ஒருவருடன் ஒருவர் முரண்பட்டு கற்பதை நிறுத்தி விடுகின்றனர். அவர்கள் கற்காவிட்டால் தமக்கு தாமே பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாதிருக்கின்றனர். அவர்கள் முரண்பட்டு “இன்ன இன்னார் இவ்வாறு, அவ்வாறு கூறினார்கள்” எனக் கூறி அத்துடன் வருவதை நிறுத்திக் கொள்கின்றார்கள். வாரம் ஒருமுறையேனும் அரிதாகவே அவர்கள் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பாபா முரளியில் வெவ்வேறு ஆலோசனைகளைக் கூறுகின்றார். நீங்கள் முரளியைச் செவிமடுக்க வேண்டும். வகுப்பிற்கு நீங்கள் வரும் போதே உங்களால் அதைச் செவிமடுக்க முடியும். ஏதோவொரு காரணத்தினால் சாக்குப் போக்குகளைக் கூறி மீண்டும் உறங்கச் செல்லும் பலரும் உள்ளனர். “சரி இன்று நான் வகுப்பிற்குச் செல்லமாட்டேன்”. எவ்வாறாயினும் பாபா மிக நல்ல கருத்துக்களைப் பேசுகிறார். நீங்கள் சேவை செய்தால், உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். இது ஒரு கல்வி. பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமய நூல்களைக் கற்கின்ற பல பண்டிதர்கள் உள்ளனர். அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாத போது, அவர்கள் சமய நூல்களை மனப்பாடம் செய்து ஆன்மீக ஒன்றுகூடல்களை ஆரம்பிக்கின்றனர். அங்கே, எந்த இலக்கும் இல்லை. இந்தக் கல்வியின் மூலம் அனைவரது படகும் அக்கரை செல்ல முடியும். ஆகவே அதி சீரழிந்தவர்களுக்கே குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும். அத்தகைய பெண்கள் இங்கு வருகின்றனர் என்பதை செல்வந்தர்கள் கேள்விப்பட்டால், அவர்கள் இங்கு வருவதை விரும்ப மாட்டார்கள். அவர்களது சரீர உணர்வு காரணமாக அவர்கள் சங்கடப்படுகின்றனர். சரி, அவர்களுக்கு வேறானதொரு பாடசாலையைத் திறவுங்கள். சரீர வாழ்வாதாரத்திற்கான ஏனைய கல்விகள், ஒரு சில சதப் பெறுமதி வாய்ந்ததாக இருக்கின்ற அதேவேளை, இந்தக் கல்வி 21 பிறவிகளுக்கானது. பலராலும் நன்மையடைய முடியும். பொதுவாக தங்கள் வீட்டில் கீதா பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க முடியுமா எனக் கேட்பவர்கள் தாய்மார்களே ஆவர். இறை சேவை செய்வதற்கு அவர்களிடம் அதிகளவு உற்சாகம் உள்ளது. ஆண்கள் தமது கேளிக்கைக் கழகங்கள் முதலியவற்றில் தொடர்ந்தும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர். செல்வந்தர்களுக்கு இங்கேதான் சுவர்க்கம் உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் பெருமளவு நவநாகரீகம் போன்றவற்றை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேவர்களின் இயற்கை அழகு எவ்வாறு இருக்கின்றதெனப் பாருங்கள். அங்கே பெருமளவு வேறுபாடு இருக்கிறது. இங்கு உங்களுக்கு உண்மை கூறப்படுகிறது. இருப்பினும் ஒருசிலரே வருகின்றார்கள், அதுவும் ஏழைகளே வருகின்றார்கள். மக்கள் அத்தகைய இடங்களுக்கு மிக விரைவிலே செல்கிறார்கள். அவர்கள் அதிகளவு அலங்காரங்கள் போன்றவற்றைச் செய்தவாறு அந்த இடங்களுக்குச் செல்கின்றார்கள். குருமார்கள் இப்பொழுது நிச்சயதார்த்தங்களைக் கூட செய்து வைக்கிறார்கள். இங்கே ஒருவரை பாதுகாப்பதற்கே அவருக்கு நிச்சயதார்த்தம் ஒழுங்கு செய்யப்படுகின்றது. அவர் காமச் சிதையில் விழுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு, இந்த ஞானச் சிதையில் அமர்வதனால் அவரால் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலியாக ஆக முடியும். அவள் தனது பெற்றோருக்குக் கூறுகின்றாள்: என்னைச் சீரழிக்கும் இந்த வேலையை நிறுத்துங்கள், நாம் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்லுவோம். பெற்றோர் பதில் அளிக்கின்றார்கள்: எங்களால் என்ன செய்ய முடியும்? மக்களும் சமூகமும் எம்மையிட்டு குழப்பம் அடைந்து, குலத்திற்கு நாம் இழிவு ஏற்படுத்துகின்றோம் எனச் சொல்வார்கள். திருமணம் செய்யாதிருப்பது சமூகச் சட்டதிட்டங்களுக்கு முரண்பட்டது. அவர்களால் மனிதர்களின் அபிப்பிராயங்களையும் தமது குலத்தின் கோட்பாடுகளையும் கைவிட முடிவதில்லை. பக்தி மார்க்கத்திலும் அவர்கள் பாடுகின்றார்கள்: எனக்கு ஒரேயொருவரே அன்றி வேறெவரும் இல்லை. மீராவின் பாடல்களும் உள்ளன. பெண்களுக்குள் மீராவே முதற் இலக்கப் பக்தை ஆவார். நாரதரே ஆண்களில் முதல் இலக்கமாக நினைவு செய்யப்படுகிறார். நாரதரைப் பற்றி ஒரு கதையும் இருக்கிறது. புதியவர் ஒருவர் தாம் இலக்ஷ்மியை திருமணம் செய்ய முடியுமா என்று கேட்கும் பொழுது, அவர் அதற்குத் தகுதிவாய்ந்தவரா எனச் சோதித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அவரைக் கேளுங்கள்: நீங்கள் முழுமையாகவே தூய்மையாகி விட்டீர்களா? அனைத்து நற்குணங்களும் நிறைந்தவர் ஆகிவிட்டீர்களா? இந்த உலகம் விகாரம் நிறைந்ததும் தூய்மை அற்றதுமாகும். தந்தை உங்களை அதிலிருந்து அகற்றி, தூய்மை ஆக்குவதற்கே வந்துள்ளார். தூய்மை ஆகுங்கள், அப்போது இலக்ஷ்மியை திருமணம் செய்வதற்கு நீங்கள் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். சிலர் பாபாவிடம் வந்து சத்தியம் ஒன்றைச் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் வீடுசென்றதும் விகாரத்தில் ஈடுபடுகிறார்கள். பாபா அத்தகைய செய்திகளைப் பெறுகிறார். பாபா கூறுகிறார்: அத்தகைய மக்களை இங்கு அழைத்துவரும் பிராமண ஆசிரியரும் பெருமளவு பாதிக்கப்படுவார். இந்திரசபையைப் பற்றி ஒரு கதையும் உள்ளது. அத்தகையவர்களை இங்கு அழைத்து வருபவர்களும் தண்டிக்கப்படுவார்கள். பாபா எப்பொழுதும் பலவீனமானவர்களை இங்கு அழைத்து வரவேண்டாம் என ஆசிரியர்களாகிய உங்களுக்குக் கூறுகிறார். இல்லாவிடின் உங்களது ஸ்திதியும் தாழ்ந்துவிடும். ஏனெனில் நீங்கள் அவர்களை சட்டத்திற்கு விரோதமாக அழைத்து வருகிறீர்கள். உண்மையில் ஒரு பிராமண ஆசிரியர் ஆகுவது இலகுவானதாகும். நீங்கள் 10 இலிருந்து 15 நாட்களில் அவ்வாறு ஆகிவிடலாம். எவருக்கும் விளங்கப்படுத்துவதற்குரிய மிக இலகுவான வழிமுறைகளை பாபா காட்டுகிறார். பாரதமக்களாகிய நீங்களே ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்திற்கு சொந்தமானவர்கள். நீங்களே சுவர்க்க வாசிகளாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது நரக வாசிகள். நீங்கள் மீண்டும் ஒருமுறை சுவர்க்க வாசிகள் ஆக வேண்டும். ஆகவே விகாரங்களைத் துறவுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள், அதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது மிகவும் இலகுவானது. எவ்வாறாயினும் சிலர் இதனைப் புரிந்து கொள்வதே இல்லை. அவர்கள் தாமே இதனைப் புரிந்து கொள்ளாவிடின், மற்றவர்களுக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவார்கள்? தனது ஓய்வு ஸ்திதியில் இருக்கும் ஒருவருக்குக் கூடப் பற்றின் இழைகள் இருக்கின்றன. இக்காலத்தில் பெரும்பான்மையானவர்கள் ஓய்வு ஸ்திதிக்குச் (எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆசிரமத்திற்குச் செல்லல்) செல்வதில்லை. அவர்கள் தமோபிரதானாக இருக்கிறார்கள். அவர்கள் இங்கே சிக்கிக் கொள்கிறார்கள். முன்னர் ஓய்வு எடுக்க விரும்புபவர்களுக்கென பெரிய ஆச்சிரமங்கள் பல இருந்தன. இந்நாட்களில் அத்தனை ஆச்சிரமங்கள் இல்லை. 80, 90 வயதை அடைந்தும் கூடச் சிலர் தமது வீட்டை விட்டு செல்வதில்லை. தாம் சத்தத்திற்கு அப்பால் சென்று கடவுளை நினைவு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கடவுள் யார் என்று தெரியாது. சர்வவியாபி என்று அவரைக் கூறுகிறார்கள். அப்படியாயின், அவர்கள் யாரை நினைவு செய்கிறார்கள்? தாம் பூஜிப்பவர்கள் என்பதைக்கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை உங்களை பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகிறார். அதுவும் 21 பிறவிகளுக்காகும். ஆகவே நீங்கள் நிச்சயமாக இதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்த பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும் என பாபா விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்பொழுது வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டும். இந்த ஒரேயொரு அக்கறையையே நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அங்கு குற்றமான எதுவும் இல்லை. தந்தை வந்து அந்தத் தூய உலகைத் தயார்படுத்துவதற்கான தூண்டுதல்களை உங்களுக்குக் கொடுக்கிறார். அவர் அற்பிற்கினிய சேவை செய்கின்ற குழந்தைகளைத் தனது கண்களில் அமர்த்தி அவர்களைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அதி சீரழிந்தவர்களை ஈடேற்றுவதற்கு ஒருவருக்கு தைரியம் வேண்டும். அரசாங்கத்திற்காக வேலை செய்கின்ற பெரிய குழுக்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் மிக நன்றாகக் கற்றவர்களும் நாகரீகமானவர்களும் ஆவார்கள். இங்கு பலரும் ஏழைகளும் சாதாரணமானவர்களும் ஆவார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து அதிகளவு அவர்களை ஈடேற்றுகின்றார். உங்கள் நடத்தை மிக இராஜரீகமானதாக இருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கு கற்பிக்கின்றார்! ஏனைய கல்விகளின் முக்கியமான பரீட்சை ஒன்றில் ஒருவர் சித்தி அடைந்தால் அவர் நாகரீகமானவர் ஆகுகின்றார். இங்கு தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். ஏழைகளே ஏதோவொன்றை இங்கு அனுப்புபவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்களுக்கான காசுக்கட்டளைகளையும் அனுப்புகின்றார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் அதிகளவு பாக்கியசாலிகள். நீங்கள் பிரதிபலனாக அதிகளவைப் பெறுகிறீர்கள். இதுவொன்றும் புதியதல்ல. நாடகத்தைப் பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, மிக நன்றாகக் கற்றிடுங்கள். இது கடவுளின் யக்ஞம், நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் எதையாவது நீங்கள் இங்கு எடுத்துக் கொண்டால், நீங்கள் அங்கு குறைவாகவே பெறுவீர்கள். நீங்கள் அனைத்தையும் சுவர்க்கத்தில் பெற்றுக் கொள்வீர்கள். பாபாவிற்கு சுறுசுறுப்பான, உஷாரான குழந்தைகள் சேவை செய்வதற்குத் தேவைப்படுகின்றார்கள்: சுதேஷ், மோகினி போன்ற குழந்தைகள் சேவை செய்வதில் அதிகளவு உற்சாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள். உங்களது பெயர் அதிகளவு வெளிப்படுத்தப்படும். பின்னர் மக்கள் உங்களுக்கு அதிகளவு மரியாதை கொடுப்பர்கள். பாபா தொடர்ந்தும் உங்கள் அனைவருக்கும் வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைவில் நிலைத்திருங்கள்! பரீட்சை அண்மிக்கும் போது மாணவர்கள் தனிமையில் அமர்ந்திருந்து கற்பதுண்டு. அவர்கள் தனிப்பட்ட ஆசிரியர்களையும் கொண்டிருப்பார்கள். எங்களிடம் பல ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் நீங்கள் கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். தந்தை அனைத்தையும் இலகுவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ஒர் ஆத்மா என்பதில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அந்த சரீரம் அழியக்கூடியது, ஆனால் ஆத்மாவாகிய நீங்கள் அழிவற்றவர்கள். நீங்கள் ஒரேயொரு தடவையே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். சத்தியயுகத்தில் இருந்து கலியுக இறுதிவரை எவராலும் அதனைப் பெற முடியாது. நீங்கள் மட்டுமே அதனைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். நாங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். தந்தையின் நினைவைக் கொண்டிருக்கும் போதே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவ்வளவுதான். இதனை மௌனமாக மீண்டும் மீண்டும் உங்களுக்குள் கூறுவதனால் அதிகளவு நன்மை உள்ளது. எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் அட்டவணையை வைத்திருப்பதற்கு மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் எழுதுவதில் களைப்படைகிறீர்கள். பாபா அத்தகைய இலகுவான முறையில் இந்த ஞானத்தை விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவாகிய நான், சதோபிரதானாக இருந்தேன், இப்பொழுது தமோபிரதானாக ஆகியுள்ளேன். தந்தை இப்பொழுது கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இது மிக இலகுவானது, இருப்பினும் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். நீங்கள் இங்கிருக்கும் வரை உங்களை ஓர் ஆத்மா எனக் கருதுங்கள். ஆத்மாவாகிய நான் பாபாவின் குழந்தை. தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களின் அரைக்கல்பத்துப் பாவங்கள் எரிக்கப்படும். பாபா உங்களுக்கு அத்தகைய இலகுவான வழிமுறையைக் காட்டுகிறார். அனைத்துக் குழந்தைகளும் இதனைச் செவிமடுக்கின்றனர். இந்த பாபா தானும் இதனைப் பயிற்சி செய்கிறார். இதனாலேயே அவரால் உங்களுக்குக் கற்பிக்க முடிகிறது. நான் பாபாவின் இரதம், பாபா எனக்கு உணவளிக்கிறார். குழந்தைகளாகிய நீங்களும் இதே போன்று சிந்திக்க வேண்டும். சிவபாபாவைத் தொடர்ந்து நினைவு செய்வதனால் அதிகளவு நன்மை இருக்கிறது. ஆனால் நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். இது மிகவும் இலகுவானது! நீங்கள் உங்கள் வியாபாரத்தில் வாடிக்கையாளர் எவரும் இல்லாதபோது நினைவில் அமருங்கள். நான் ஓர் ஆத்மா. நான் பாபாவை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் நோயுற்றிருந்தாலும் உங்களால் பாபாவை நினைவு செய்ய முடியும். நீங்கள் பந்தனத்தில் இருந்தாலும் அங்கிருந்தவாறே தொடர்ந்தும் பாபாவை நினைவு செய்யுங்கள். அப்பொழுது 10 முதல் 20 வருடங்களாக இங்கிருப்பவர்களை விடவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் உங்களால் கோரிக்கொள்ள முடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சேவையில் மிகவும் உஷாராகவும், சுறுசுறுப்பாகவும் இருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏகாந்தத்தில் இருந்து தந்தையை நினைவு செய்யுங்கள். கற்பதில் ஆழமான ஆர்வத்தைக் கொண்டிருங்கள். இந்தக் கல்வியுடன் ஒருபோதும் முரண்படாதீர்கள்.2. உங்களது நடத்தை மிகமிக இராஜரீகமானதாக இருக்கட்டும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. ஆகவே அனைத்துப் பற்றின் இழைகளையும் துண்டித்து விடுங்கள். ஓய்வு பெற்ற ஸ்திதியில் (சத்தத்திற்கு அப்பால்) இருப்பதை பயிற்சி செய்யுங்கள். அதிசீரழிந்தவர்களையும் ஈடேற்றுவதற்காக அவர்களுக்கும் சேவை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களின் மேன்மையான மனோபாவத்தால் மற்றவர்களின் மனோபாவங்களை மாற்றி, சதா வெற்றிச் சொரூபம் ஆகுவீர்களாக.வெற்றிச் சொரூபம் ஆகுவதற்கு, உங்களின் சொந்த மனோபாவத்தால் மற்றவர்களின் மனோபாவங்களையும் உங்களின் எண்ணங்களால் அவர்களின் எண்ணங்களையும் மாற்றுகின்ற பணியைச் செய்யுங்கள். இதில் ஆராய்ச்சி செய்யுங்கள். இந்தச் சேவையைச் செய்வதில் நீங்கள் மும்முரமாக ஈடுபடும்போது, இயல்பாகவே பலவீனங்கள் பலவற்றில் இருந்து நீங்கள் அப்பால் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இப்போது, இதற்காக ஒரு திட்டத்தைச் செய்யுங்கள். அப்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வருமானமும் அதிகளவில் அதிகரிக்கும். அப்போது உங்களுக்குக் கட்டடங்களும் வழங்கப்படும். முழுமையான வெற்றி இலகுவாகப் பெறப்படும். இந்த வழிமுறையானது உங்களை வெற்றி சொரூபம் ஆக்கிவிடும்.
சுலோகம்:
உங்களின் நேரத்தைப் பயனுள்ள முறையில் தொடர்ந்து பயன்படுத்துங்கள். நீங்கள் அதனால் ஏமாற்றப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
தந்தைக்குக் குழந்தைகளான உங்களிடம் அதிகளவு அன்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் அதற்குப் பதில் அளிக்கும் முகமாக, அவர் நீண்டதொரு கடிதத்தை எழுதுகிறார். அவர் அன்பையும் நினைவுகளையும் வழங்குவதுடன் உங்களின் சகபாடியாகி, அந்தச் சகவாசத்தின் பொறுப்பையும் நிறைவேற்றுகிறார். இந்த அன்பிற்கு, உங்களின் பலவீனங்கள் எல்லாவற்றையும் அவரிடம் அர்ப்பணியுங்கள். எல்லைக்கு உட்பட்ட ஆதிக்கம் எதுவும் உங்களைக் கவராத வகையில் இறையன்பில் அமிழ்ந்திருங்கள். எல்லையற்ற பேறுகளில் சதா திளைத்திருங்கள். இதன் மூலம் ஆன்மீகத்தின் நறுமணம் சூழலில் பரவும்.
விசேட அறிவித்தல்: பாபாவின் ஸ்ரீமத்திற்கேற்ப, முரளிகள் பாபாவின் குழந்தைகளுக்கு மட்டுமே ஆகும். இராஜயோகா பாடநெறியை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு அல்ல. ஆகவே, கருவி ஆசிரியர்கள், சகோதர, சகோதரிகள் எல்லோரிடமும் பாபாவின் சாகார் முரளிகளின் ஓடியோ மற்றும் வீடியோப் பதிவுகளை யுரியூப், பேஸ்புக், இன்ஸ்ரகிராம் அல்லது எந்தவொரு வட்ஸ் அப் குழுவிலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.