09.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் முழு உலகிலும் அமைதி நிறைந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையின் உதவியாளர்கள் ஆவீர்கள். அமைதியும், சந்தோஷமும் நிலவுகின்ற உலகம் இப்பொழுது உங்கள் முன்னிலையில் உள்ளது.

கேள்வி:
தந்தை ஏன் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார்? இந்தக் கல்வியின் சாராம்சம் என்ன?

பதில்:
தந்தை குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகளான, சுவர்க்க இளவரசர்களாக ஆக்குவதற்கே கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இந்தக் கல்வியின் சாராம்சம்: உலக விடயங்கள் அனைத்தையும் துறவுங்கள். உங்களிடம் மில்லியன்களோ அல்லது பல நூறாயிரங்களோ இருக்கின்றன என ஒருபொழுதும் நினைக்காதீர்கள். உங்களால் எதையும் வைத்திருக்க முடியாது. எனவே, மிக நன்றாக முயற்சி செய்து, இந்தக் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்து விட்டது!

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இறுதியில், இந்த உலகில் அமைதி நிலவுவதற்கான காலம் வந்து விட்டது. இந்த உலகில் எப்படி அமைதி நிலவ முடியும் என அனைவரும் கேட்கின்றனர். இதற்குச் சிறந்த ஆலோசனை வழங்குபவர்களுக்கு ஒரு பரிசு வழங்கப்படுகின்றது. நேருவும் ஆலோசனை வழங்கினார், எனினும் அதன் மூலம் அமைதி உருவாகவில்லை. அவர் வெறும் ஆலோசனையை மாத்திரம் வழங்கிச் சென்று விட்டார். ஒரு காலத்தில் முழு உலகிலும் அமைதியும் சந்தோஷமும் செழிப்பும் இருந்தன என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. அது இப்பொழுது இல்லை. அது மீண்டும் ஒருமுறை வரும். சக்கரம் சுழன்றாக வேண்டும். இது சங்கமயுகத்துப் பிராமணர்களாகிய உங்கள் புத்தியில் உள்ளது. பாரதம் மீண்டும் தங்கமாக மாறும் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. பாரதம் “தங்கச் சிட்டுக்குருவி” என அழைக்கப்படுகின்றது. மக்கள் இந்தப் புகழைப் பாடினாலும், அது பெயரளவிலேயே உள்ளது. நீங்கள் இப்பொழுது இதற்காக நடைமுறையில் முயற்சி செய்கின்றீர்கள். இப்பொழுது இன்னமும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நரகத்தின் துன்பகரமான விடயங்கள் அனைத்தையும் உங்களால் மறக்க முடிகின்றது. சந்தோஷ உலகம் சற்று முன்னாலேயே உள்ளது என்பதை உங்கள் புத்தி அறியும். முன்னர் வெளிநாட்டில் இருந்து வரும்போது, உங்கள் இலக்கை அடைய இன்னும் சிறிது நேரம் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால், வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுக்கும். இப்பொழுது நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை ஆகாய விமானம் மூலம் மிக விரைவாகச் சென்றடைய முடியும். உங்கள் சந்தோஷ நாட்கள் மீண்டும் வரப்போகின்றன என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இதற்காக முயற்சி செய்கின்றீர்கள். எவ்வாறு மிக இலகுவாக முயற்சி செய்வது என்பதை பாபா உங்களுக்குக் காட்டி உள்ளார். நாடகத்தின்படி, ஒரு சக்கரத்திற்கு முன்னர் இருந்ததைப் போல் இது மிகச்சரியாக நிகழ்வது நிச்சயம். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். தேவர்களுக்காகப் பல ஆலயங்கள் இப்பொழுது கட்டப்படுகின்றன. ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டிய பின்னர் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது இன்னமும் எத்தனை நாட்கள் எஞ்சியுள்ளன? குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தின் அதிகாரிகள். பரமாத்மாவாகிய பரமதந்தையே சர்வசக்திவான் எனக் கூறப்படுகின்றது. நீங்கள் இந்த ஞானத்தின் அதிகாரிகள், அவர்களோ பக்தியின் அதிகாரிகள். தந்தை சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக இவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காக முயற்சி செய்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். அனைவருடனும் பக்தியைப் பற்றி மாத்திரமே பக்தியின் அதிகாரிகள் பேசுகின்றார்கள். நீங்கள் இந்த ஞானத்தின் அதிகாரிகள். எனவே, நீங்கள் இந்த ஞானத்தை மாத்திரமே பேசுகின்றீர்கள். சத்தியயுகத்தில் பக்தி கிடையாது; அங்கே பூஜிப்பவர் ஒருவர் கூட இருப்பதில்லை. அங்கே அனைவரும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள். முதல் அரைக்கல்பத்திற்கு நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் மற்றைய அரைக்கல்பத்திற்கு நீங்கள் பூஜிப்பவர்களாகவும் இருக்கின்றீர்கள். இது பாரத மக்களை மாத்திரமே குறிக்கின்றது. அவர்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்த பொழுது, பாரதம் சுவர்க்கமாக இருந்தது. பாரத மக்கள் பூஜிப்பவர்கள் ஆகினர், அது இப்பொழுது நரகமாக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நடைமுறை ரீதியில் உங்கள் வாழ்வுகளை உருவாக்குகின்றீர்கள். நீங்கள் உங்களின் சொந்த முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, தொடர்ந்தும் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றீர்கள். உங்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் வளர்கின்றது. இது நாடகத்தில் முன்னதாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகம் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றது, நீங்கள் தொடர்ந்தும் இதனைச் செய்கின்றீர்கள். உங்களுக்கு நாடகத்தில் நடிப்பதற்கு அழிவற்ற பாகங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விடயங்கள் பற்றி உலகில் எவருக்கும் என்ன தெரியும்? நாடகத்தில் நாங்கள் இந்தப் பாகங்களை நடிக்கின்றோம். இதைப் பற்றிப் பேசுபவர்கள், எவ்வாறு நாங்கள் இந்த நாடகத்தில் பாகங்களை நடிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. வேறு எவருமின்றி, நீங்கள் மாத்திரமே உலகின் வரலாற்றையும் புவியியலையும் அறிவீர்கள். அதிமேலானவர் யார் என்பதை உலகில் எவருமே அறியமாட்டார்கள். ரிஷிகள், முனிவர்கள் போன்றோர் தங்களுக்குத் தெரியாது என்று கூறுவதுண்டு. அவர்கள் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல…) எனக் கூறுவார்கள். தந்தையே படைப்பவர் என்பதையும் அவரே இப்பொழுது எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறியுள்ளார்: நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, ஆத்ம உணர்வு ஸ்திதியில் அமர்ந்திருங்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, உலகின் வரலாறையும் புவியியலையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் எண்ணத்தை வாசிப்பவர் அல்ல. உலகம் மிகவும் பெரியது. நான் ஏன் எதைப் பற்றியும் வாசிக்க வேண்டும்? தந்தையே கூறுகின்றார்: நாடகத்தில் நிச்சயம் செய்திருப்பதற்கேற்ப நான் உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு வருகின்றேன். நாடகத்தில் எனக்கிருக்கும் பாகத்தை நடிப்பதற்காகவே நான் வருகின்றேன், ஆனால் எவரது எண்ணங்களையும் நான் வாசிப்பதில்லை. நான் என்ன பாகத்தை நடிக்கின்றேன் என்பதையும் நீங்கள் என்ன பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதையும் நான் உங்களுக்குக் கூறுகின்றேன். நீங்கள் இந்த ஞானத்தைக் கற்று, அதை மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றீர்கள். எனது பாகம் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதே. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். நீங்கள் திகதி, நேரம் போன்றவற்றை அறிவீர்கள். உலகில் வேறு எவரும் இதை அறியார். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர், அடுத்த சக்கரம் முடிவுக்கு வரும்பொழுது, பாபா மீண்டும் வருவார். இப்பொழுது நடிக்கப்படும் காட்சி அனைத்தும் ஒரு சக்கரத்தின் பின்னர் மீண்டும் இடம்பெறும். ஒரு விநாடி அடுத்த விநாடியைப் போன்று இருக்க முடியாது. இந்த நாடகம் தொடர்ந்தும் சுழல்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த எல்லையற்ற நாடகத்தைப் பற்றி இப்பொழுது அறிவீர்கள். இருந்தும் நீங்கள் மீண்டும் மீண்டும் அதை மறந்து விடுகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: பாபாவே உங்கள் தந்தையும் அத்துடன் அவரே உங்கள் ஆசிரியரும் குருவும் ஆவார் என்பதை நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தி அந்தத் திசையிலேயே செல்ல வேண்டும். தந்தையின் புகழைக் கேட்கும் பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள் சந்தோஷம் அடைகின்றீர்கள். நீங்கள் எல்லோரும் கூறுகின்றீர்கள்: எங்களின் பாபாவே எங்களின் தந்தையும் ஆசிரியரும் ஆவார். அத்துடன் அவர் சத்தியமானவரும் ஆவார். இந்தக்கல்வியும் உண்மையானது, அத்துடன் முழுமையானது. ஏனைய மக்களின் கல்விகள் முழுமை அற்றவை. குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். உயர் பரீட்சையில் சித்தி எய்துபவர்களின் புத்தியில் மிகுதியான சந்தோஷம் இருக்கும். நீங்கள் அத்தகைய மேன்மையான கற்பித்தல்களைக் கற்கின்றீர்கள். எனவே, நீங்கள் அனுபவிக்கின்ற சந்தோஷத்தால் உங்கள் புத்தி நிறைந்து வழிய வேண்டும். எல்லையற்ற தந்தையும், பாபாவுமாகிய, கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்! உங்களுக்குப் புல்லரிக்க வேண்டும். அதே கீதையின் அத்தியாயம் இப்பொழுது மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது. வேறு எவருமன்றி, நீங்களே இதை அறிவீர்கள். சக்கரத்தின் கால எல்லையை அவர்கள் அதிகரித்து விட்டனர். 5000 வருடங்களின் முழுக் கதையும் உங்கள் புத்தியில் தொடர்ந்தும் சுழல்கின்றது. இது சுயதரிசனச் சக்கரம் என அழைக்கப்படுகின்றது. சில குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, பல புயல்கள் வருவதால் நான் உங்களை மறந்து விடுகின்றேன். பாபா கேட்கின்றார்: யாரை நீங்கள் மறக்கின்றீர்கள்? உங்களை இரட்டைக் கிரீடமுடைய உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை எப்படி உங்களால் மறக்க முடிகின்றது? நீங்கள் வேறு எவரையும் மறப்பதில்லை. உங்கள் மனைவி, குழந்தைகள், தாய்வழி மாமன், தந்தைவழி மாமன், நண்பர்கள், உறவினர்கள் போன்ற எல்லோரையும் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். எனவே, இந்த விடயத்தை உங்களால் எப்படி மறக்க முடியும்? இதை நினைவு செய்வதிலேயே உங்கள் போராட்டம் உள்ளது. இயன்றவரை நினைவில் நிலைத்திருங்கள். முன்னேறிச் செல்வதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையின் நினைவில் உலாவ வேண்டும். நீங்கள் குளிர்ந்த காற்றில், மொட்டை மாடிக்கோ அல்லது வெளியிலோ செல்ல முடியும். இங்கேதான் வந்து அமரவேண்டும் என்ற அவசியம் இல்லை; நீங்கள் வெளியே செல்ல முடியும். அதிகாலையில் பயம் என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் வெளியில் உலா செல்லலாம். பாபாவை அதிகமாக நினைவு செய்பவர் யார் என்பது பற்றி உங்கள் மத்தியில் பேசுங்கள். பின்னர், நீங்கள் பாபாவை எந்தளவிற்கு நினைவு செய்தீர்கள் என்பதையும் மற்றைய நேரத்தில் உங்கள் புத்தி எங்கு சென்றது என்பதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவே ஒருவரோடு ஒருவர் சேர்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தல் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் தந்தையை எவ்வளவு நேரம் நினைவுசெய்தீர்கள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். பாபா தனது சொந்தப் பயிற்சியைப் பற்றி உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் நினைவில் இருந்தவாறு, ஒரு மணி நேரம் நடந்து சென்றாலும், உங்கள் கால்கள் களைப்படையாது. எனவே, நினைவைக் கொண்டிருப்பதால் பல பாவங்கள் அழிக்கப்பட முடியும். நீங்கள் சக்கரத்தை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்ற உண்மையை மாத்திரமே இரவுபகலாக உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். கலியுக மனிதர்களுக்கு இது பற்றி எதுவுமே தெரியாது. அவர்கள் முக்தி பெறுவதற்காக அதிகளவு பக்தி செய்கின்றனர். பல அபிப்பிராயங்கள் உள்ளன. பிராமணர்களாகிய நீங்கள் ஒரேயொரு அபிப்பிராயத்தை மாத்திரமே கொண்டிருக்கின்றீர்கள். பிராமணர்கள் ஆகுகின்ற அனைவருக்கும் பின்பற்றுவதற்கு ஸ்ரீமத் உள்ளது. தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். தேவர்கள் ஸ்ரீமத்தைக் கொண்டிருப்பதில்லை. இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் பிராமணர்கள் ஆகுவதுடன், உங்களுக்கு ஸ்ரீமத்தும் கொடுக்கப்படுகின்றது. கடவுள் அசரீரியானவர். அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அதன் மூலம் நீங்கள் உங்களின் இராச்சிய பாக்கியத்தைக் கோரி, உலகின் மேன்மையான அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் பல வேதங்களும் சமயநூல்களும் உள்ளன. எவ்வாறாயினும், ஒரேயொரு கீதை மாத்திரமே பயனுள்ளது. கடவுள் வந்து இராஜயோகம் கற்பிக்கின்றார். அந்தக் கற்பித்தல்கள் மாத்திரமே கீதை என அழைக்கப்படுகின்றன. நீங்கள் இப்பொழுது தந்தையுடன் கற்கின்றீர்கள், அவரிடமிருந்தே சுவர்க்க இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். கற்பவர்கள் அதைப் பெறுகின்றார்கள். நாடகத்தில் இப்பாகத்தையே நீங்கள் நடிக்கின்றீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார், அவர் மாத்திரமே இந்த ஞானத்தை உங்களுக்குப் பேசுகின்றார். நாடகத் திட்டத்திற்கேற்ப, அவர் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். அவர் கலியுகத்தின் இறுதிக்கும் சத்தியயுகத்தின் ஆரம்பத்திற்கும் இடையில் வருகின்றார். எதையிட்டும் குழப்பம் அடையாதீர்கள். தந்தை இவரில் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். வேறு எவராலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாது. இவர் (தாதா) வேறு எவரிடமாவது கற்றிருந்தால், வேறு பலரும் அதே நபரிடம் கற்றிருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: நான் குருமார் போன்ற அனைவரையும் ஈடேற்றுவதற்காகவே வருகின்றேன். குழந்தைகளாகிய உங்களின் இலக்கும் குறிக்கோளும் இப்பொழுது உங்களின் முன்னால் உள்ளன. நாங்கள் அவ்வாறு ஆகுகின்றோம். இது சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகின்ற உண்மைக் கதை. அவர் பின்னர் பக்தி மார்க்கத்தில் புகழப்படுகின்றார். பக்தி மார்க்கச் சம்பிரதாயங்கள் தொடர்கின்றன. இராவண இராச்சியம் இப்பொழுது முடிவடைய உள்ளது. நீங்கள் தசேரா போன்றவற்றைக் கொண்டாடுவதற்கு இப்பொழுது வேறு எங்கும் செல்வதில்லை. அவர்கள் செய்பவற்றுக்கான விளக்கத்தைக் கொடுப்பதற்காகவே நீங்கள் செல்கின்றீர்கள். அது சிறு குழந்தைகளின் வேலை. அவர்கள் இராவணனை எவ்வாறு எரிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முக்கிய பிரமுகர்கள் அனைவரும் செல்கின்றனர். அவன் யார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். இது இராவண இராச்சியம். மக்கள் தசேராவை அதிகளவு சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். அந்த விழாவின்பொழுது, அவர்கள் தொடர்ந்தும் இராவணனை எரிக்கின்றனர்; அவ்வாறிருந்தும், அவர்கள் துன்பம் தொடர்கின்றது. அவர்களிடம் எவ்விதப் புரிந்துணர்வும் கிடையாது. நீங்கள் எந்தளவிற்கு விவேகம் அற்றவர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இராவணன் உங்களை விவேகம் அற்றவர்கள் ஆக்குகின்றான். நீங்கள் இப்பொழுது கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் நிச்சயமாக இலக்ஷ்மி அல்லது நாராயணனாக ஆகுவோம். அதற்குக் குறைவான முயற்சி எதையும் செய்யமாட்டோம். இது மட்டுமே எங்களின் பாடசாலை, இந்தக்கல்வி மிகவும் இலகுவானது. வயதான தாய்மார்களாகிய உங்களால் வேறு எதையும் நினைவு செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியும். அவர்களின் வாய்களிலிருந்து “ஓ இராமா!” என்பது வெளிப்படுகின்றது. பாபா உங்களுக்கு மிக இலகுவான இந்த வழிமுறையைக் கூறுகின்றார்: நீங்கள் ஓர் ஆத்மா, பரமாத்மாவான தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் படகு அக்கரை செல்லும். நீங்கள் எங்கே செல்வீர்கள்? அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும். ஏனைய அனைத்தையும் மறந்துவிடுங்கள். முன்னர் நீங்கள் கேட்டவற்றையோ கற்றவற்றையோ மறந்து விடுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். இந்த நினைவின் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். இது மிக இலகுவானது! “நெற்றியின் மத்தியில் ஓர் அற்புதமான நட்சத்திரம் பிரகாசிக்கின்றது” எனக் கூறப்படுகின்றது. எனவே, ஓர் ஆத்மா நிச்சயமாக மிகவும் சின்னஞ்சிறியதாகவே இருக்க வேண்டும். ஆத்மாவைப் பார்ப்பதற்காக வைத்தியர்கள் மிகவும் கடின முயற்சி செய்கின்றனர், எனினும், அது மிகவும் சூட்சுமமானது. எந்தப் பௌதீக முறைகளைப் பயன்படுத்தியும் எவராலும் அதைப் பார்க்க முடியாது. தந்தையும் ஒரு புள்ளியே. அவர் கூறுகின்றார்: நீங்கள் சாதாரணமானவர்களாக இருப்பதால், நானும் உங்களுக்குக் கற்பிப்பதற்கு, அதேபோன்று, சாதாரணமாக ஆகுகின்றேன். கடவுள் எப்படி எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை எவ்வாறு எவராலும் அறிந்துகொள்ள முடியும்? ஸ்ரீகிருஷ்ணர் உங்களுக்குக் கற்பித்திருந்தால், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஏனைய இடங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இங்கே வந்து விடுவார்கள். அவரிடம் அத்தகைய கவர்ச்சி உள்ளது. அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரை நேசிக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அவரைப் போன்று ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் ஓர் இளவரசர். நீங்கள் கிருஷ்ணரை உங்கள் மடியில் வைத்திருக்க விரும்பினால், அதற்காக முயற்சி செய்ய வேண்டும். இது பெரிய விடயமல்ல. தந்தை குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகளான, சுவர்க்கத்தின் இளவரசர்கள் ஆக்குவதற்காகவே கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உலக விடயங்கள் அனைத்தையும் துறப்பதே இந்தக் கல்வியின் சாராம்சம். உங்களிடம் மில்லியன்களோ அல்லது நூறாயிரங்களோ உள்ளன என ஒருபொழுதும் நினைக்காதீர்கள். உங்களால் எதையும் வைத்திருக்க முடியாதிருக்கும். எனவே, மிக நன்றாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் தந்தையிடம் வரும்பொழுது, அவர் முறைப்பாடு செய்கின்றார்: நீங்கள் எட்டு மாதங்களாக வகுப்பிற்குச் சமூகம் அளிக்கின்றீர்கள். இந்தக் காலப்பகுதியில், நீங்கள் யாரிடமிருந்து சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்களோ, அந்தத் தந்தையை இன்னமும் சந்திக்கவே இல்லை. அத்தகைய குழந்தைகள் தங்களுக்கு இந்த வேலை அல்லது அந்த வேலை இருந்தது என பாபாவிற்குப் பதில் அளிக்கின்றனர். ஓ! நீங்கள் இறந்திருந்தால் என்னவாகி இருக்கும்? உங்களால் எப்படி இங்கே வர முடிந்திருக்கும்? இந்தச் சாக்குப்போக்குகளைச் சொல்லாதீர்கள். தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார், நீங்கள் அதைக் கற்பதில்லை. பெருமளவு பக்தி செய்தவர்களுக்கு அம்பு தாக்குவதற்கு ஏழு நாட்களன்றி, ஒரு விநாடியே போதுமானது. ஒரு விநாடியில் நீங்கள் ஓர் உலக அதிபதி ஆகலாம். அனுபவசாலியான இவர், இங்கே அமர்ந்திருக்கின்றார். இவருக்கு விநாசத்தினதும், நான்கு கரங்களுடைய உருவத்தினதும் காட்சிகள் கிடைத்தன, தான் உலக அதிபதியாக வேண்டும் என்பதை இவர் புரிந்துகொண்டார். இவருக்குக் கிடைத்த காட்சிகள் மூலம் இவர் உற்சாகம் அடைந்ததால், அனைத்தையும் துறந்தார். உங்கள் சுவர்க்க இராச்சியத்தை உங்களுக்குக் கொடுப்பதற்குத் தந்தை இங்கு வந்துவிட்டார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கேட்கின்றார்: எவ்வளவு காலத்திற்கு நீங்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தீர்கள்? நீங்கள் பதில் அளிக்கின்றீர்கள்: எட்டு மாதங்கள். நினைவும், இந்த ஞானமுமே பிரதான விடயங்கள் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். காட்சிகள் போன்றவற்றால் எந்தவிதப் பயனும் கிடையாது. நீங்கள் ஒரு தடவை தந்தையை இனங்கண்டு விட்டால், படிக்க ஆரம்பிக்க வேண்டும், அப்பொழுது நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் பெறுகின்ற கருத்துக்களை எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். அதிகளவு இனிமையுடன் விளங்கப்படுத்துங்கள்: தூய்மையாக்குபவரான, சிவபாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய உலகின் தூய அதிபதிகள் ஆகுவீர்கள். அதிகளவு புத்திசாலித்தனத்துடன் விளங்கப்படுத்துங்கள்: தந்தையான கடவுள் உங்களை விடுதலையாக்கி, உங்கள் இனிய வீட்டிற்கு மீண்டும் உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள். அது சரி. ஆத்மாக்களாகிய உங்களை மூடியுள்ள துருவை அகற்றுவதற்கு, தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையின் நினைவில் உலா செல்லுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் பாபாவை நினைவு செய்கின்றீர்கள் எனப் பார்ப்பதற்கு, உங்கள் மத்தியில் இனிமையாக இதயபூர்வமாக உரையாடுங்கள். பின்னர் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் தந்தையை ஒரு தடவை இனங்கண்டுவிட்டால், சாக்குப்போக்கு எதையும் சொல்லாதீர்கள், ஆனால் இந்தக் கல்வியில் ஈடுபட்டிருங்கள். ஒருபொழுதும் ஒரு முரளியையேனும் தவற விடாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லோருடைய நற்குணங்களையும் பார்க்கும்போது, உங்களுக்குள் தந்தையின் நற்குணங்களைக் கிரகித்து, நற்குணங்களின் சொரூபம் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில், நற்குணங்களின் மாலையை அணிந்து கொள்ளும் குழந்தைகள், வெற்றி மாலையில் பிரவேசிக்கிறார்கள். அதனால், நீங்கள் ஒரு புனித அன்னம் ஆகவேண்டும். எல்லோருடைய நற்குணங்களைப் பார்க்கும்போதும் நீங்களே தந்தையின் நற்குணங்களைக் கிரகிக்க வேண்டும். இந்த நற்குணங்களின் மாலை உங்களின் ஒவ்வொருவரின் கழுத்திலும் இருக்க வேண்டும். எந்தளவிற்கு நீங்கள் தந்தையின் நற்குணங்களைக் கிரகிக்கிறீர்களோ, அதற்கேற்ப, உங்களின் கழுத்தில் பெரிய மாலை இருக்கும். நற்குணங்களின் மாலையின் மணிகளை உருட்டுவதன் மூலம், நீங்கள் நற்குணங்களின் சொரூபம் ஆகுவீர்கள். இதன் ஞாபகார்த்தமாகவே, தேவர்களின் கழுத்துகளிலும் சக்திகளின் (தேவிகள்) கழுத்துகளிலும் மாலை காட்டப்பட்டுள்ளது.

சுலோகம்:
பற்றற்ற பார்வையாளரின் ஸ்திதியே, மிகச்சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான சிம்மாசனம் ஆகும்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
அகநோக்கில் இருந்தவண்ணம் எல்லாவற்றையும் செய்வதன் மூலம் நீங்கள் தடைகளில் இருந்தும் வீணான எண்ணங்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள். உங்களின் நேரமும் பாதுகாக்கப்படும். நீங்கள் அகநோக்கில் இருக்கும்போது, விழிப்புணர்வின் சக்தியை நீங்கள் விருத்தி செய்வீர்கள். ஆத்மாக்களான உங்களின் கண்களும் சக்திவாய்ந்தவை ஆகும். அப்போது, எந்தவொரு தடை வரவிருந்தாலும், அந்தத் தினத்தில் ஒரு பரீட்சைத்தாள் வரவிருக்கிறது என்பதை நீங்கள் முன்கூட்டியே உணர்வீர்கள். எந்தளவிற்கு முன்கூட்டியே நீங்கள் அதை அறிந்து கொள்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஏனென்றால், நீங்கள் விவேகியாக இருப்பீர்கள்.