24.12.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களின் தானமே மகா தானமாகும். இந்தத் தானத்தின் மூலமே நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். எனவே, மகா தானிகள் ஆகுங்கள்.
கேள்வி:
சேவை செய்வதில் தீவிர ஆர்வம் கொண்ட குழந்தைகளின் பிரதான அறிகுறிகள் எவை?பதில்:
1) அவர்கள் பழைய உலகின் சூழ்நிலையை விரும்ப மாட்டார்கள். 2) அவர்கள் பலருக்கும் சேவை செய்து, மற்றவர்களையும் தங்களைப் போன்று ஆக்குவதில் சந்தோஷம் அடைவார்கள். 3) கற்பதிலும், மற்றவர்களுக்குக் கற்பிப்பதிலும் மாத்திரமே அவர்கள் சுகத்தை உணர்வார்கள். 4) மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது அவர்களின் தொண்டை வரண்டு போனாலும் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். 5) அவர்களுக்கு எவரது சொத்துக்களும் தேவையில்லை. அவர்கள் வேறொருவரின் சொத்துக்களுக்குப் பின்னால் செல்வதில் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். 6) அவர்களின் பற்றின் இழைகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் துண்டிக்கப்பட்டிருக்கும். 7) அவர்கள் தந்தையைப் போன்று தாராள இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள். சேவை செய்வதைத் தவிர வேறு எதிலுமே அவர்கள் இனிமையைக் காணமாட்டார்கள்.பாடல்:
ஓம் நமசிவாய!ஓம் சாந்தி.
நீங்கள் யாருடைய புகழைச் சற்று முன்னர் செவிமடுத்தீர்களோ, அந்த ஆன்மீகத் தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கின்றார். இது ஒரு பாடசாலை. நீங்கள் அனைவரும் ஆசிரியரிடம் இருந்து உங்கள் பாடங்களைக் கற்கின்றீர்கள். இவரே பரம தந்தை என்றும் அழைக்கப்படுகின்ற பரம ஆசிரியர் ஆவார். ஆன்மீகத் தந்தையை மாத்திரமே பரம தந்தை எனக் கூற முடியும். ஒரு லௌகீகத் தந்தையை ஒருபோதும் பரம தந்தை எனக் கூற முடியாது. நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் இப்பொழுது பரலோகத் தந்தையுடன் அமர்ந்திருக்கின்றோம். சிலர் ஏற்கனவே இங்கு அமர்ந்திருக்கின்றனர், மற்றும் சிலர் இங்கு விருந்தாளிகளாக வருகின்றனர். நீங்கள் உங்களின் ஆஸ்தியைப் பெறுவதற்காக எல்லையற்ற தந்தையுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். எனவே, நீங்கள் உள்ளார்த்தமாக பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பரிதாபத்துக்கு உரியவர்கள் தொடர்ந்தும் விரக்திக் கூக்குரலிடுகின்றனர். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றே இந்நேரத்தில் உலகிலுள்ள அனைவரும் கூறுகின்றனர். அனாதரவாக இருக்கும் அந்த மக்களுக்கு அமைதி என்றால் என்ன என்பதே தெரியாது. ஞானக்கடலும், அமைதிக்கடலுமான தந்தையால் மாத்திரமே அமைதியை ஸ்தாபிக்க முடியும். அசரீரி உலகிலேயே அமைதி உள்ளது. இங்கு மக்கள், விரக்திக் கூக்குரலிடுகின்றனர்: எவ்வாறு உலகில் அமைதி நிலவ முடியும்? ஒரேயொரு தர்மம் இருந்த பொழுதிலேயே புதிய உலகமான சத்திய யுகத்தில் அமைதி நிலவியது. புதிய உலகம் தேவர்களின் உலகமான வைகுந்தம் எனப்படுகின்றது. சமய நூல்களிலும் அவர்கள் அமைதியற்ற விடயங்களையே எழுதியுள்ளனர். அவர்கள் ஹம்சனை துவாபர யுகத்திலும், இரணியஹசிப்பை சத்திய யுகத்திலும் காட்டி உள்ளனர். இராவணனின் குழப்பங்களை அவர்கள் திரேதா யுகத்தில் காட்டியுள்ளனர். எங்கும் அமைதியின்மையையே அவர்கள் காட்டியுள்ளனர். பரிதாபத்திற்கு உரியவர்கள் அத்தகைய காரிருளில் உள்ளனர். அவர்கள் எல்லையற்ற தந்தையை அழைக்கின்றனர். தந்தையாகிய கடவுள் வரும்போதே அவரால் அமைதியை ஸ்தாபிக்க முடியும். பரிதாபத்திற்கு உரியவர்களுக்கு கடவுளையே தெரியாது. புதிய உலகில் மாத்திரமே அமைதி நிலவுகின்றது. அது பழைய உலகில் இருக்க முடியாது. தந்தை மாத்திரமே புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். அமைதியை ஸ்தாபிக்க வருமாறு மக்கள் அவரை அழைக்கின்றனர். ஆரிய சமாஜியைச் சேர்ந்தவர்களும் அமைதியை அருள்பவரின் புகழைப் பாடுகின்றனர். தந்தை கூறுகின்றார்: தூய்மையே முதலாவதாகும். நீங்கள் இப்பொழுது தூய்மை ஆகுகின்றீர்கள். அங்கு, தூய்மை, அமைதி, ஆரோக்கியம், செல்வம் அனைத்துமே இருக்கும். செல்வம் இல்லாவிட்டால் மக்கள் சந்தோஷம் அற்றிருக்கின்றனர். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று செல்வந்தர்கள் ஆகுவதற்கே இங்கு வருகின்றீர்கள். அவர்கள் உலக அதிபதிகளாக இருந்தனர். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள். எவ்வாறாயினும், ஒவ்வொருவரின் புத்தியும் வரிசைக்கிரமமானது. பாபா கூறியுள்ளார்: நீங்கள் காலை வேளையில் வெளியில் ஊர்வலமாகச் செல்லும்போது நிச்சயமாக இலக்ஷ்மி நாராயணனின் படத்தை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய யுக்திகளை உருவாக்குங்கள். குழந்தைகளின் புத்தி இப்பொழுது தெய்வீகமானதாக வேண்டும். இந்நேரத்தில் அவர்கள் தமோபிரதானில் இருந்து ரஜோ ஸ்திதிக்குச் சென்று விட்டார்கள். அவர்கள் இப்பொழுது சதோவாகிய பின்னர் சதோபிரதான் ஸ்திதியை அடையவேண்டும். உங்களுக்கு அந்தளவு சக்தி இன்னமும் இல்லை. நீங்கள் நினைவில் இருப்பதில்லை. யோக சக்தி மிகவும் குறைவாக உள்ளது. எவரும் உடனடியாகவே சதோபிரதான் ஆகிவிட முடியாது. ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்று நினைவுகூரப்படுகின்றது. அது நல்லது. நீங்கள் பிராமணர்களாகி விட்டதால் ஜீவன் முக்தியை அடைகின்றீர்கள். ஜீவன் முக்தி நிலையிலும் அதி உயர்ந்த, நடுத்தரமான, தாழ்ந்த நிலைகள் உள்ளன. தந்தைக்கு உரியவர்கள் நிச்சயமாக ஜீவன் முக்தியைப் பெறுவார்கள். சிலர் தந்தைக்கு உரியவராகிய பின்னர் அவரை விட்டு விலகிச் சென்றாலும், அவர்களும் ஜீவன் முக்தியைப் பெறுவார்கள். அவர்கள் சுவர்க்கத்தில் நிலத்தைப் பெருக்குபவர்கள் ஆகுவார்கள். அவர்களால் குறைந்த பட்சம் சுவர்க்கத்துக்குச் செல்ல முடிந்தாலும் குறைந்த அந்தஸ்தையே அவர்கள் பெறுவார்கள். தந்தை உங்களுக்கு ஒருபோதும் அழிக்க முடியாத, அழிவற்ற ஞானத்தைக் கொடுக்கிறார். குழந்தைகளாகிய உங்கள் இதயங்களில் சந்தோஷ முரசு கொட்டட்டும். விரக்திக் கூக்குரல்களைத் தொடர்ந்து ஆச்சரியக் குரல்கள் ஒலிக்கும். நீங்கள் இப்போது, கடவுளின் குழந்தைகள். அதன் பின்னர் நீங்கள் தேவர்களின் குழந்தைகள் ஆகுவீர்கள். இந்நேரத்தில் உங்களின் வாழ்க்கை வைரம் போன்று பெறுமதி வாய்ந்ததாக ஆகின்றது. நீங்கள் பாரதத்திற்குச் சேவை செய்து அதை அமைதியாக ஆக்குகின்றீர்கள். அங்கு, தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் இருக்கும், அங்கு அனைத்தும் இருக்கும்! உங்களின் இந்த வாழ்க்கை தேவர்களினது வாழ்க்கையை விட அதி மேன்மையானது. இப்பொழுது நீங்கள் படைப்பவராகிய தந்தையையும், உலகச் சக்கரத்தையும் அறிவீர்கள். பண்டிகைகள் போன்ற அனைத்தும் தொன்று தொட்டுத் தொடர்வதாகக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், எப்பொழுதில் இருந்து? எவருமே இதை அறிய மாட்டார்கள். உலகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அது தொடர்ந்ததாக, அதாவது இராவணனை எரிக்கும் வழக்கமும் தொன்று தொட்டுத் தொடர்வதாக அவர்கள் நம்புகின்றனர். எவ்வாறாயினும், சத்திய யுகத்தில் இராவணன் இல்லாததால், அங்கு எவ்விதத் துன்பமும் இருப்பதில்லை. இதனாலேயே அவர்கள் கடவுளை நினைவு செய்வதும் இல்லை. இங்கு, அனைவரும் தொடர்ந்தும் கடவுளை நினைவு செய்கின்றனர். கடவுள் மாத்திரமே உலகில் அமைதியை நிலவச் செய்வார் என அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே அவர்கள் கூறுகின்றனர்: வாருங்கள், எங்கள் மீது கருணை காட்டுங்கள்! துன்பத்திலிருந்து எங்களை விடுவியுங்கள்! குழந்தைகளே தந்தையை அழைக்கின்றனர். ஏனெனில் அவர்களே சந்தோஷத்தைக் கண்டவர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மையாக்கி, உங்களை என்னுடன் திரும்ப அழைத்துச் செல்வேன். தூய்மை ஆகாதவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். இங்கு, நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாக இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்கள் மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். இறுதியில் நீங்கள் வீணான எண்ணங்கள் எதுவும் இல்லாதிருப்பதற்கு பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யக்கூடாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் கர்மாதீத நிலையை அடையும்வரை இவ்வெண்ணங்கள் வரும். அனுமனைப் போன்று அசைக்க முடியாதவர் ஆகுங்கள். அதற்குப் பெருமளவு முயற்சி தேவை. கீழ்ப்படிவான, நம்பிக்கைக்குரிய, தகுதி வாய்ந்த குழந்தைகள் தந்தையால் பெருமளவு நேசிக்கப்படுகின்றனர். ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்ளாதவர்கள் அந்தளவிற்கு நேசிக்கப்பட மாட்டார்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து ஒவ்வொரு சக்கரத்திலும் உங்களின் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எனவே, உங்கள் சந்தோஷ பாதரசம் மிகவும் உயர வேண்டும்! ஸ்தாபனை நிச்சயமாக நிகழ வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்பழைய உலகம் நிச்சயமாக மயானம் ஆகவேண்டும். நாங்கள் தேவதைகளின் தேசத்திற்குச் செல்வதற்காக முன்னைய சக்கரத்தில் செய்தது போன்று தொடர்ந்தும் முயற்சி செய்கின்றோம். இது ஒரு மயானமாகும். பழைய உலகினதும், புதிய உலகினதும் விளக்கம் ஏணிப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏணிப்படம் மிகவும் சிறந்தது, எனினும் மக்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. இங்கு, கடலின் (சிவபாபா) கரையில் வாழ்பவர்களால் கூட முழுமையாக இதனை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. நீங்கள் நிச்சயமாக ஞானச் செல்வத்தைத் தானம் செய்ய வேண்டும். தானம் செய்வதால் செல்வம் ஒருபோதுமே குறைவதில்லை. தானி அதன்பின்னர் மகாதானி எனக் கூறப்படுகின்றது. வைத்தியசாலையை அல்லது யாத்திரிகர்கள் தங்கும் மடங்களைக் கட்டுபவர்கள் மகா தானிகள் எனப்படுகின்றனர். அதற்கான பலனை அவர்கள் தமது அடுத்த பிறவியில் தற்காலிகமாகப் பெறுவார்கள். உதாரணமாக, ஒருவர் யாத்திரிகர் தங்கும் மடத்தைக் கட்டினால் தனது அடுத்த பிறவியில் அவர் நல்ல வீட்டில் பிறந்து சந்தோஷத்தை அனுபவிப்பார். அதிகளவு செல்வத்தைத் தானம் செய்பவர்கள், தமது அடுத்த பிறவியில், ஓர் அரசனுக்கோ அல்லது செல்வந்தர் ஒருவருக்கோ பிறப்பார். அவர்கள் தானம் செய்வதால் அவ்வாறு ஆகுகின்றனர். நீங்களோ கற்று இராஜ அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். கல்வியும், அத்துடன் தானமும் உள்ளது. இங்கு, இது நேரடியானது, பக்தி மார்க்கத்திலோ அது மறைமுகமானது. சிவபாபா இக்கல்வி மூலம் உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். சிவபாபாவிடம் அழிவற்ற ஞான இரத்தினங்கள் உள்ளன. ஒவ்வோர் இரத்தினமும் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்தது. பக்தியைப் பற்றி இவ்வாறு கூற முடியாது. இது ஞானம் எனப்படுகின்றது. சமயநூல்களில் பக்தியைப் பற்றிய அறிவு உள்ளது. எவ்வாறு பக்தி செய்வது என்பது பற்றிய கற்பித்தல்களை அவர்கள் பெறுகின்றார்கள். குழந்தைகளாகிய உங்களிடம் உங்கள் தலைக்கு நேரடியாக ஏறுகின்ற இந்த ஞானத்தின் போதை உள்ளது. நீங்கள் பக்தி செய்ததன் பின்னர் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இந்த ஞானத்தின் மூலம் உலக இராச்சிய உரிமைக்கான போதை உங்கள் தலைக்கு நேரடியாக ஏறுவதை அனுபவம் செய்கிறீர்கள். அதிக சேவை செய்பவர்கள் போதையுடைவர்கள் ஆகுவார்கள். நன்றாக சொற்பொழிவு ஆற்றுபவர்கள், அருங்காட்சியகங்களுக்கும், கண்காட்சிகளுக்கும் அழைக்கப்படுகின்றனர். அங்கும் அவர்கள் நிச்சயமாக வரிசைக்கிரமமாகவே இருப்பார்கள். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பன உள்ளன. தில்வாலா ஆலயத்தில் உங்கள் ஞாபகார்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உயிருள்ள தில்வாலா என்றும், அது உயிரற்றது என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் மறைமுகமானவர்கள். இதனாலேயே, மக்கள் உங்களை இனங்காணுவதில்லை. நீங்கள் இராஜ ரிஷிகள். அவர்கள் ஹத்தயோக ரிஷிகள். நீங்கள் இப்பொழுது ஞான ஞானேஸ்வரி (ஞானம் உள்ளவர்கள்) ஆவீர்கள். ஞானக் கடலே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் அநாதியான சத்திர சிகிச்சை நிபுணரின் குழந்தைகள். சத்திரசிகிச்சை நிபுணராலேயே உங்களின் நாடித் துடிப்பை உணர முடியும். தமது சொந்த நாடித் துடிப்பை உணராதவர்களால் எவ்வாறு மற்றவர்களுடைய நாடித் துடிப்பை உணர முடியும்? நீங்கள் அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரின் குழந்தைகள், இல்லையா? சத்குரு உங்களுக்கு இந்த ஞானத் தைலத்தைக் கொடுக்கின்றார். இது ஞான ஊசி ஆகும். ஆத்மாக்களுக்கு ஓர் ஊசி ஏற்றப்படுகின்றது. அப்புகழ் இந்நேரத்திற்கு உரியதாகும். இது சத்குருவின் புகழாகும். சத்குரு மாத்திரமே குருமாருக்கு இந்த ஞான ஊசியை ஏற்றுகின்றார். நீங்கள் அநாதியான சத்திர சிகிச்சையாளரின் குழந்தைகள். எனவே அனைவருக்கும் ஞான ஊசியேற்றுவதே உங்கள் தொழிலாகும். வைத்தியர்களின் மத்தியிலும், சிலர் ஒரு மாதத்தில் நூறாயிரம் ரூபாய்களையும், சிலரோ வெறும் 500 ரூபாய்களையும் மாத்திரமே சம்பாதிக்கின்றார்கள். மக்கள் ஒவ்வொருவரிடமும் வரிசைக்கிரமமாகவே செல்கின்றனர். ஒருவரைத் தூக்கில் இடுவதற்கான தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் இருந்தே பெறப்படுகின்றது. பின்னர் ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கை விடப்படுகின்றது. எனவே, அவர் அவரை மன்னித்து விடுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் போதை உடையவர்களாக, தாராள இதயத்துடன் இருக்க வேண்டும். தந்தை இந்தப் பாக்கிய இரதத்தில் பிரவேசித்தார், எனவே அவர் இவரைப் தாராள இதயம் கொண்டவர் ஆக்கினார். அவரால் எதையும் செய்யமுடியும், இல்லையா? அவர் இவரினுள் பிரவேசித்து அதிபதி ஆகினார். ஓ.கே. அவையனைத்தும் பாரதத்தின் நன்மைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் பாரதத்திற்கு நன்மை பயப்பதற்கே உங்களின் செல்வத்தைப் பயன்படுத்துகின்றீர்கள். நீங்கள் எவ்வாறு உங்கள் செலவுகளை எல்லாம் சமாளிக்கின்றீர்கள் என எவராவது வினவினால், அவரிடம் கூறுங்கள்: நாங்கள் எங்கள் சரீரம், மனம், செல்வம் என்பவற்றின் மூலம் சேவை செய்கின்றோம். நாங்கள் ஆட்சி செய்ய உள்ளோம், என்பதால் எங்களின் சொந்தப் பணத்தையே பயன்படுத்துகின்றோம். நாங்களே எங்கள் செலவுகளைச் சமாளித்துக் கொள்கின்றோம். பிராமணர்களாகிய நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். பிராமணர்கள் ஆகுபவர்கள் செலவுகளைச் சமாளித்துக் கொள்வார்கள். நாங்கள் சூத்திரரில் இருந்து பிராமணர்கள் ஆகியுள்ளோம், பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகவேண்டும். பாபா கூறுகின்றார்: படங்கள் அனைத்தையும் ‘திரான்ஸ்-லைற்’ வடிவில் உருவாக்கினால், மக்கள் அவற்றினால் கவரப்படுவார்கள். அம்பு உடனடியாகவே இலக்கைத் தாக்கும். சிலர் மந்திர வித்தைக்குப் பயந்து இங்கு வரமாட்டார்கள். மனிதர்களை தேவர்கள் ஆக்குவது மந்திரவித்தையே, இல்லையா? கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கின்றேன். ஹத்த யோகிகளால் ஒருபோதும் இராஜ யோகம் கற்பிக்க முடியாது. நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் ஓர் ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். இந்நேரத்தில் முழு உலகமும் எல்லையற்ற இலங்கை ஆகும். முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. எவ்வாறு சத்திய, திரேதா யுகங்களில் இராவணன் இருந்திருக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நான் உங்களுக்குக் கூறுவதைச் செவிமடுங்கள். இக்கண்களால் எதையும் பார்க்காதீர்கள். இப்பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். இதனாலேயே நாங்கள் எங்களின் சாந்தி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்கின்றோம். இப்பொழுது நீங்கள் பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். இவர் முதலாம் இலக்க பூஜிப்பவராக இருந்தார். அவர் நாராயணனை அதிகளவில் வழிபட்டு வந்தார். இப்பொழுது அவர் மீண்டும் ஒரு தடவை பூஜிக்கத் தகுதிவாய்ந்த நாராயணன் ஆகுகின்றார். நீங்களும் முயற்சி செய்து இவ்வாறு ஆகலாம். முதலாம், இராண்டாம், மூன்றாம் எட்வேட் என அரசர்கள் இருந்தது போன்று இராச்சியம் தொடரும். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை சர்வவியாபகர் எனக் கூறி அவமதித்து வந்தீர்கள். இருந்த போதிலும் நானோ உங்களை ஈடேற்றுகின்றேன். இந்நாடகம் மிகவும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது! நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் முன்னைய சக்கரத்தில் செய்த அதே முயற்சியையே செய்வீர்கள். சேவையில் ஆர்வம் கொண்ட குழந்தைகள், இரவு பகலாக இந்த ஓர் அக்கறையையே கொண்டிருப்பார்கள். தந்தை மூலம் குழந்தைகளாகிய நீங்கள் பாதையைக் கண்டுள்ளீர்கள். எனவே மற்றவர்களுக்குச் சேவை செய்வதைத் தவிர வேறு எதையுமே நீங்கள் செய்ய விரும்புவதில்லை. நீங்கள் உலகச் சூழ்நிலையை விரும்புவதில்லை. சேவை செய்பவர்கள், சேவை செய்யாமல் எந்த சுகத்தையும் பெறமாட்டார்கள். ஓர் ஆசிரியர் கற்பிப்பதில் களிப்படைகின்றார். நீங்கள் இப்பொழுது மிக மேன்மையான ஆசிரியர்கள் ஆகியுள்ளீர்கள். இதுவே உங்களின் தொழிலாகும். ஓர் ஆசிரியர் எந்தளவிற்கு சிறந்தவராக இருந்து, தன்னைப் போன்று பலரையும் ஆக்குகின்றாரோ, அதற்கேற்பவே அவர் ஒரு பரிசைப் பெறுகின்றார். எவருக்காவது கற்பிக்காவிட்டால் அவர் எந்த சுகத்தையும் உணரமாட்டார். கண்காட்சிகளில், சிலவேளைகளில் நள்ளிரவு 12 மணி வரை அவர்கள் இருக்க நேரிட்டாலும்கூட சந்தோஷத்தையே அனுபவம் செய்வார்கள். அவர்கள் களைப்படைந்து, அவர்களின் தொண்டை வரண்டு போனாலும் இது இறை சேவை என்பதால் அவர்கள் சந்தோஷமாகவே இருப்பார்கள். இது மிக மேன்மையான சேவை ஆகும். வேறு எதுவுமே அவர்களுக்கு இனிமையாக இருக்காது. அவர்கள் கூறுகிறார்கள்: இந்த சொத்துக்கள் போன்றவற்றை வைத்திருந்து, நாங்கள் என்னதான் செய்யப் போகிறோம்? நாங்கள் கற்பிக்கவே விரும்புகின்றோம். இந்தச் சேவையை மாத்திரமே நாங்கள் செய்ய விரும்புகின்றோம். அவர்களின் செல்வம் அல்லது சொத்துக்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படுமாயின், அவர்கள் கூறுவார்கள்: தங்கத்திற்காக உங்களின் காதுகள் வெட்டப்படக்கூடும், எனவே அத்தங்கத்தால் என்ன பயன்? சேவை செய்வதன் மூலம் உங்கள் படகு அக்கரைக்குச் செல்ல வேண்டும். பாபா கூறுகின்றார்: கட்டடங்களைத் தானம் செய்பவர்கள், பின்னரும் தங்களின் பெயரிலேயே அவற்றை வைத்துக் கொள்ளலாம். பிரம்மா குமாரிகள் சேவை செய்யவே விரும்புகின்றார்கள். இச்சேவைக்கு வெளி பந்தனங்கள் எதுவும் அவ்வளவு நல்லதல்ல. சிலரது பற்றின் இழைகள் ஈர்க்கப்படுகின்றன. சிலரது பற்றின் இழைகள் துண்டிக்கப்படுகின்றன. பாபா கூறுகிறார்: “மன்மனாபவ” ஆகுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் பெருமளவு உதவியைப் பெறுகிறீர்கள். நீங்கள் இச்சேவையில் ஈடுபட வேண்டும். இச் சேவையில் அதிக வருமானம் உள்ளது. கட்டடங்கள் போன்றவற்றிற்கான கேள்விக்கு இடமில்லை. அவர்கள் உங்களுக்குக் கட்டடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, பின்னர் நிபந்தனைகள் விதித்தால், நீங்கள் அதனை ஏற்கக்கூடாது. எவ்வாறு சேவை செய்வது எனத் தெரியாதவர்களால் எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை. ஓர் ஆசிரியர் பிறரையும் தன்னைப்போல் ஆக்குவார். இவ்வாறு ஆகாவிட்டால், அவர்களால் என்ன பயன்? பல கரங்கள் தேவைப்படுகின்றன. அதிலும், தாய்மார்களும், குமாரிகளுமே அதிகளவில் தேவைப்படுகின்றனர். தந்தையே ஆசிரியர் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் ஆசிரியர்கள் ஆகவேண்டும். ஆசிரியர்களால் வேறெந்த வகையான வேலையும் செய்ய முடியாது என்றில்லை. நீங்கள் சகல வகையான வேலைகளையும் செய்ய வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இரவு பகலாக சேவை பற்றிய எண்ணங்களை மாத்திரமே கொண்டிருங்கள். பற்றின் ஏனைய இழைகள் அனைத்தையும் துண்டித்துவிடுங்கள். சேவை செய்யாமல் சுகம் கிடைக்காது. சேவை செய்து, மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்குங்கள்.2. தந்தையைப் போன்று தாராள இதயம் கொண்டவர் ஆகுங்கள். ஒவ்வொருவரினதும் நாடித் துடிப்பை உணர்ந்து அவர்களுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் சரீரம், மனம், செல்வம் அனைத்தையும் பாரதத்தின் நன்மைக்காக பயன்படுத்துங்கள். ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவதற்கு, கீழ்ப்படிவானவரும், நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாக இருங்கள்.
ஆசீர்வாதம்:
ஏன்? என்ன? என்ற எக்கேள்வி வலையில் இருந்தும் விடுபட்டிருக்கின்ற ஓர் உலக சேவையாளராகி அதனால் பூகோள ஆட்சியாளராகவும் ஆகுவீர்களாக.உங்களுடைய சுயதரிசன சக்கரத்தை சரியான முறையில் அன்றி, பிழையான முறையில் சுழற்றும் போது, மாயையை வெற்றி கொள்பவர் ஆகுவதற்குப் பதிலாக, பிறரை பார்ப்பதால் ஏற்படும் குழப்பம் அடைதலின் சுழற்சி வலையில் சிக்கிக் கொள்கிறீர்கள். இதனாலேயே, ஏன்? என்ன? என்ற கேள்வி வலை உருவாக்கப்படுகின்றது. நீங்களே அதனை உருவாக்குகிறீர்கள், பின்னர் நீங்களே அதில் சிக்கிக் கொள்கிறீர்கள். எனவே, ஞானம் நிறைந்தவர் ஆகி, சுயதரிசன சக்கரத்தைச் சரியான முறையில் தொடர்ந்தும் சுழற்றினால், நீங்கள் ஏன்? என்ன? என்ற அத்தகைய கேள்வி வலையிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் யோகயுக்தாகவும், வாழ்விலிருந்து விடுபட்டவராகவும், பூகோள ஆட்சியாளராகவும் ஆகுவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் தந்தையுடன் எங்கும் பயணித்து உலக நன்மைக்கான சேவையை செய்வீர்கள். உலக சேவையாளர் ஆகுவதன் மூலம், நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்கின்ற ஓர் அரசர் ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்கள் திட்டங்களை தெளிவான புத்தியினால் நடைமுறை வடிவில் இடும் போது, அதில் வெற்றி நிறைந்துள்ளது.அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
உங்களுடைய கர்மாதீத் ஸ்திதியை நீங்கள் நெருங்கி வரும் போது, உங்கள் புத்தி எந்த ஆத்மாவிற்கும் அடிபணிவதும் இல்லை, நீங்களும் எந்த பந்தனத்தையும் உருவாக்க மாட்டீர்கள். நீங்கள் சகல கர்ம பந்தனங்களில் இருந்தும் விடுபடுவீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். ஓர் கருவியாக பற்றற்றவராகும் போது, சடப்பொருட்களினூடாக செயல்களை மேற்கொள்ள கூடியதாக இருக்கும். கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, பற்றற்றவராக இருப்பதற்கு நீங்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டியதில்லை. அனைத்தையும் செய்கின்ற பௌதீகப் புலன்கள் ஆத்மாவிலிருந்து வேறுபட்டது. ஆத்மாவே அதனை செய்விப்பவர் என்பதை இலகுவாகவும் இயல்பாகவும் அனுபவம் செய்யுங்கள்.