20.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, யாசிப்பவரில் இருந்து இளவரசன் ஆகுவதற்குத் தூய்மையே அடிப்படையாகும். தூய்மை ஆகுவதனால் மாத்திரமே நீங்கள் தூய உலக இராச்சியத்தைப் பெறுவீர்கள்.

கேள்வி:
இப்பாடசாலையின் எப்பாடம் உங்களை மனிதரில் இருந்து தேவராக மாற்றுகின்றது?

பதில்:
இப்பாடசாலையில் நீங்கள் ஒரு சரீரம் அல்ல, ஆனால் ஓர் ஆத்மா என்ற பாடத்தை ஒவ்வொரு நாளும் கற்கின்றீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதனாலேயே உங்களால் ஒரு மனிதனில் இருந்து தேவனாகவும் ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும் ஆக முடியும். இந்த நேரத்தில், மனிதர்கள் அனைவரும் பூஜிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். அதாவது, அவர்கள் தூய்மை அற்றவர்களாகவும் சரீர உணர்வு உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகையாலேயே அவர்கள் தொடர்ந்தும் தூய்மையாக்குகின்ற தந்தையை அழைக்கின்றார்கள்.

பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டு இறங்கிக் கீழே பூமிக்கு வாருங்கள்…..

ஓம் சாந்தி.
‘ஓம் சாந்தி’ எனக் கூறியது யார் என்பதைக் குழந்தைகள் அறிவார்கள். எந்தக் குழந்தைகள்? ‘ஓம் சாந்தி’ என எந்த ஆத்மா கூறினார் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியுமா? பரமாத்மா, பரமதந்தையே அவ்வாறு கூறினார். அவ்வாறு கூறியது ஒரு மனித ஆத்மா அல்ல என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பரமாத்மாவான பரமதந்தை சிவனே அவ்வாறு கூறினார். அனைவரதும் தந்தையான அவரே அதிமேலானவர் ஆவார். மாயையின் பெரியதொரு நிழல் பாரதத்தின் மீது சூழ்ந்துள்ளது எனப் பாடலில் செவிமடுத்தீர்கள். அவர்கள் மிகவும் தூய்மை அற்றவர்களாகி விட்டதாலேயே அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, எங்களைத் தூய்மை ஆக்குவதற்கு மீண்டும் ஒருமுறை வாருங்கள்! ஆத்மாக்களே கடவுள் என்று அழைக்கப்படும் தமது தந்தையை அழைக்கின்றார்கள். அவர் மாத்திரமே தூய்மை ஆக்குபவர் என அவர்கள் கூறுகின்றார்கள். ஒரேயொருவரின் புகழே உள்ளது. அவர் ஆத்மாக்கள் அனைவரதும் எல்லையற்ற தந்தை ஆவார். இங்கே, அனைவரும் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளதாலேயே அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ பரமாத்மாவான பரமதந்தையே! அவர் மாத்திரமே ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும் ஆவார். அவர் ஞானக்கடலும் உலக அதிபதியும் என்பதால் அவர் தந்தையும் ஆசிரியரும் ஆவார். அவர் சகல வேதங்கள், சமயநூல்கள், கிரான்த் போன்ற அனைத்தையும் அறிந்தவர். அவரே ஞானம் நிறைந்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்நேரத்தில் அனைவரும் சந்தோஷம் அற்றிருப்பதால், அவர்கள் அப்பாலுள்ள தந்தையை அழைக்கின்றார்கள். அவர்கள் தந்தையான கடவுளையே அழைக்கின்றார்கள். அவருக்கும் ஒரு பெயர் இருக்க வேண்டும். அவரை நினைவு செய்வதற்காக நினைவு கூரப்பட்ட பெயர் சிவபாபா ஆகும். அவரே ஞானக்கடலும், சந்தோஷக் கடலும், அமைதிக்கடலும், அதிமேலானவரும் ஆவார். மனித ஆத்மாக்கள் தமது தந்தையைப் புகழ்கின்றார்கள். அதிமேலான ஆத்மா யார்? அவர் பரமாத்மாவான பரமதந்தை ஆவார். அவர் பரமன் ஆவார். தூய்மையற்ற மனிதர்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். பாரதம் தூய்மையாக இருந்தபோது சத்தியயுகத்தில் தேவ இராச்சியம் இருந்தது. அங்கு தூய்மையற்ற எவருமே இருக்கவில்லை. இது தமோபிரதான் உலகமாகும், அதாவது, இந்த உலகில் வாழ்கின்ற ஆத்மாக்கள் அனைவரும் பாவாத்மாக்கள் ஆவார்கள். தூய்மையாக இருந்த இந்த பாரதம் இப்பொழுது தூய்மை அற்றதாகி விட்டது. இங்கே, கலியுகத்தில் அனைவருமே தூய்மை அற்றவர்கள் ஆவார்கள். ஞானக்கடலும், தூய்மையாக்குபவருமான பரமாத்மாவாகிய பரமதந்தை பரந்தாமத்திலிருந்து வந்து பிரம்மாவினூடாகக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவருக்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவையாகும். இந்த விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. அதிகாரியான ஞானக்கடல் மாத்திரமே அனைத்தையும் அறிவார். பாரதத்தில் விஷ்ணுவின் தொப்புளில் இருந்து பிரம்மா வெளிப்படுவதைப் போன்றும், அவர் சமயநூல்களைக் கைகளில் வைத்திருப்பதைப் போன்றும் படத்தைக் காட்டுவார்கள். விஷ்ணு சகல சமயநூல்களினதும் சாராம்சங்களையும் விவரிப்பதில்லை. ஞானக்கடலான பரமாத்மா பரமதந்தையே பிரம்மாவினூடாகச் சகல சமயநூல்களினதும் சாராம்சத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரே பிரம்மாவையும் விஷ்ணுவையும், சங்கரரையும் படைத்தவர் ஆவார். பிரம்மாவோ அல்லது விஷ்ணுவோ ஞானக்கடல் என்று அழைக்கப்படுவதில்லை. சங்கரரை அவ்வாறு கருதவேனும் முடியாது! அவ்வாறாயின் ஞானக்கடல் யார்? அசரீரியான அதிமேலான பரமாத்மாவே தூய்மையாக்குபவர் ஆவார். இதுவே அந்த பரமாத்மாவான பரமதந்தையின் புகழாகும். இங்கும், ஆத்மாக்களே புகழப்படுகின்றார்கள். ஆத்மா சரீரத்தினூடாகக் கூறுகின்றார்: நான் ஒரு ஜனாதிபதி, நான் ஒரு சட்டநிபுணர், நான் இன்ன அமைச்சர். ஓர் ஆத்மாவே ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றார். ஆத்மா சரீரத்தினூடாகக் கூறுகின்றார்: நான் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு இன்னொன்றை எடுக்கின்றேன். தந்தை இந்த நேரத்தில் வந்து கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! உங்கள் தந்தையான நான் உங்களுக்கு இப்பாடத்தைக் கற்பிக்கவே வந்துள்ளேன். இது மனிதர்களைத் தேவர்களாகவும், சாதாரண ஒரு ஆணை நாராயணனாகவும், சாதாரண ஒரு பெண்ணை இலக்ஷ்மியாகவும் மாற்றுகின்ற ஒரு பாடசாலை ஆகும். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையை அழைக்கின்றார்கள்: ஓ பரமாத்மாவான பரமதந்தையே, அசரீரி உலகில் இருந்து இப்பொழுது இச்சரீர உலகிற்கு வாருங்கள்! உங்கள் வடிவத்தை மாற்றுங்கள்! அசரீரி ஆத்மாக்களான நீங்கள் ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கும் பொழுது, நீங்கள் ஒரு கருப்பைக்குள் புகுந்து மறுபிறப்பு எடுக்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் ஒரு கருப்பையினூடாகவே 84 பிறவிகளையும் எடுக்கின்றீர்கள். நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு இன்னொன்றை எடுக்கின்றீர்கள், இவ்வாறாகவே நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். நான் ஒரு கருப்பைக்குள் பிரவேசிப்பதில்லை. பாரத மக்களாகிய நீங்கள் ஆதியில் தேவதர்மத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் தொடர்ந்தும் கீழே இறங்கியபோது, ஷத்திரிய குலத்தினர் ஆகி, அதன் பின்னர் வைசிய குலத்தினராகவும், பின்னர் சூத்திர குலத்தினராகவும் ஆகியபோது உங்கள் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தன. பாரதம் பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்ததாகவும், அதன் பின்னர் பதினான்கு சுவர்க்கக் கலைகள் உடையதாகவும் ஆகியது. பாரத மக்களுக்குத் தமது சொந்தப் பிறவிகளைத் தெரியாது. பாரதமக்களே 84 பிறவிகளை எடுக்கிறார்கள். ஏனைய சமயத்தைச் சேர்ந்த எவரும் 84 பிறவிகளை எடுப்பதில்லை. நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் ஆகியுள்ளீர்கள். இது ஞான விடயமாகும். சுயதரிசன சக்கரவர்த்திகள் ஆகுவதனால் நீங்கள் சுவர்க்கத்தின் சக்கரவர்த்திகளாகவும் பூகோள ஆட்சியாளர்களாகவும் ஆகுகின்றீர்கள். தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவதற்காகவே இங்கு நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டீர்கள். இதுவே தூய்மையற்ற உலகமாகும். ஒரேயொரு தந்தை மட்டுமே தூய்மையாக்குபவரும் அனைவருக்கும் சத்கதியை அருள்பவரும் ஆவார். அனைவரும் அவரை அழைக்கிறார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை அன்றித் தந்தையையே நினைவு செய்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் கீதையைக் கூறவில்லை. சகல சமயநூல்களிலும் அதி மேன்மையான இரத்தினம் கீதையே ஆகும். பாரதத்தின் கீதை எந்த மதத்தின் சமயநூல்? ஆதி சனாதன தேவிதேவதா தர்மம். கீதையைப் பாடியது யார்? இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பித்தது யார்? தூய்மையாக்குபவரான தந்தையாகிய பரமாத்மா பரமதந்தை ஆவார். அசரீரியான ஆத்மாக்களான நீங்கள் பௌதீகச் சரீரங்களை எடுத்துள்ளீர்கள். சரீரதாரிகளை ஒருபோதும் கடவுள் என்று அழைக்க முடியாது. சத்தியயுகத்தில் இலக்ஷ்மியும் நாராயணனும் இருந்தாலும், அவர்கள் கடவுள் என்று அழைக்கப்படுவதில்லை. அது அவர்களுக்கு வழங்கப்படும் பட்டமே ஆகும். சட்டத்தின்படி, ஒரேயொரு கடவுளே இருக்கிறார். படைப்பவர் ஒருவரே. ஏனைய அனைவரும் தேவர்களே. இது 5000 வருடங்களுக்குரிய விடயமாகும். இது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அவர்கள் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி என்று அழைக்கப்பட்டார்கள். கடவுள் ஒரு சக்கரவர்த்தி ஆகுவதில்லை. அவர் வந்து பாரத மக்களைத் தேவர்களாக ஆக்குகின்ற தந்தை ஆவார். இப்போது எவரும் தேவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. இது இராவண சமுதாயம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது இராவண இராச்சியம் ஆகும். இராவணன் பழைய எதிரியாக இருப்பதனாலேயே அவர்கள் இராவணனின் கொடும்பாவியை வருடாவருடம் எரிக்கிறார்கள். எவ்வாறாயினும், பாரத மக்களுக்கு அவரைப் பற்றித் தெரியாது. இராவணன் யார் என்பது சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. ஏன் அவர்கள் இராவணனைப் பத்துத் தலைகளுடன் சித்தரித்துள்ளார்கள்? இந்த விடயங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மனிதர்கள் முற்றிலும் கல்லுப் புத்திகளைக் கொண்டிருக்கின்றனர். இலக்ஷ்மி, நாராயணன் போன்றவர்கள் தெய்வீகப் புத்திகளைக் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அது தெய்வீகப் பிரபுக்களினதும் சீமாட்டிகளினதும் இராச்சியமாகும். அரசனும் அரசியும் எவ்வாறோ, அவ்வாறே பிரஜைகளும் இருந்தனர். பாரதத்தைப் போன்று சந்தோஷ பூமி வேறு எங்கும் இல்லை. பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது, அங்கு சுகவீனம், துன்பம், நோய்கள் போன்றவை இருக்கவில்லை. அங்கு சம்பூரணமான சந்தோஷம் நிலவியது. கடவுளின் புகழ் முடிவற்றது எனக் கூறப்படுகிறது. அதேபோன்று, பாரதத்தின் புகழும் முடிவற்றது. அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்களாக இருப்பதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள். அமைதியோ அல்லது செழிப்போ இல்லை. பாரத மக்களான நீங்கள் சூரிய வம்சத் தேவர்களாக இருந்து பின்னர் படிப்படியாகத் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளீர்கள். இது மரண பூமி என்று அழைக்கப்படுகிறது. இது தீக்கிரையாக்கப்பட வேண்டும். இதுவே சிவனின் ஞானயாகம் ஆகும். அவர்கள் இதனை உருத்திரனின் ஞானயாகம் என்றும் அழைக்கிறார்கள். மக்கள் அதற்குப் பல்வேறுபட்ட பெயர்களைச் சூட்டுகிறார்கள். அவர்கள் சிவனின் உருவத்தை எங்கு கண்டாலும், அதற்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டுகிறார்கள். அவர்கள் ஒரேயொருவருக்குப் பல ஆலயங்களைக் கட்டி, வெவ்வேறு பெயர்களை உபயோகிக்கிறார்கள். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார்: இந்த ஞானம், பக்தி, விருப்பமின்மை உள்ளன. பக்தி இப்போது முடிவிற்கு வருகின்றது. உங்களுக்குப் பக்தியில் விருப்பமின்மை காணப்படுகிறது. அதாவது, உங்களுக்கு இந்தப் பழைய உலகின் மீது விருப்பமின்மை ஏற்பட்டுள்ளது. இந்தப் பழைய உலகம் இப்போது அழியப் போகிறது. குழந்தைகள் வினவுகிறார்கள்: பாபா, நாம் எவ்வாறு தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகமுடியும்? புதியவர்கள் இங்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோன்று, புதியதொரு மாணவர் கல்லூரிக்குச் செல்லும்போது, அவர் எதனையும் புரிந்து கொள்ள மாட்டார். மனிதர்கள் எவ்வாறு தேவர்களாக மாறுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. தூய்மையற்ற மனிதர்கள் தூய்மை ஆகுகிறார்கள். இந்த வேளையில், பாரதம் பிச்சைக்கார நிலையில் உள்ளது. சத்தியயுகத்தில், பாரதம் இளவரசரைப் போன்றிருந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் பாரதத்தின் முதலாம் இலக்க இளவரசர் ஆவார். அவரிடம் சகல நற்குணங்களும் இருந்தன. அந்த இராச்சியம் இலக்ஷ்மி, நாராயணனுடையது எனப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணர் ஓர் இளவரசராகவும், இராதை இளவரசியாகவும் இருந்தனர். இளவரசர் ஸ்ரீகிருஷ்ணரின் புகழ் நினைவு கூரப்படுகிறது: சகல நற்குணங்களும் நிறைந்தவர், பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர். அவர் கீதையைக் கூறவில்லை. அவர் சத்தியயுகத்தின் இளவரசராக இருந்தார். தூய்மையற்ற மனிதர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதற்காகக் கீதையின் அத்தியாயங்களை அவர் கற்பிப்பது என்பது அசாத்தியமானது. அச்சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சார்ந்தவை. சமயநூல்களுக்கு அதிகளவு புகழ் உள்ளது! சத்தியயுகத்தில், பக்தி மார்க்கத்திற்குரிய சமயநூல்கள், படங்கள் போன்றவை இருக்காது. அங்கு, 21 பிறவிகளுக்கு இந்த ஞானத்தின் வெகுமதியே இருக்கும். நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்களுடைய சத்தியயுக இராச்சிய பாக்கியத்தைக் கோருகிறீர்கள். பாரத மக்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் சத்தியயுகத்தில் உலக அதிபதிகளாக இருந்தார்கள். அங்கு பிரிவினை போன்றவை கிடையாது. அது 5000 வருடங்களுக்குரிய விடயமாகும். இது இப்போது கலியுக முடிவாகும். விநாசம் முன்னால் உள்ளது. தூய்மையற்ற கலியுகத்தைத் தூய சத்தியயுகமாக மாற்றுவதற்கே இந்த ஞானயாகத்தைக் கடவுள் உருவாக்கியுள்ளார். எனவே, நிச்சயமாகத் தூய்மையற்ற உலகின் விநாசம் இடம்பெற வேண்டும். பிரம்மாவினூடாக ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது என நினைவுகூரப்படுகிறது. சிவபாபா இப்போது அதனைப் பிரம்மாவினூடாகச் செய்விக்கிறார். நீங்கள் இப்போது மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என்பது நினைவுகூரப்படுகிறது. அவர் மக்களின் தந்தையான பிரஜாபிதா ஆவார். அனைவரும் அவருடைய குழந்தைகள் ஆவார்கள். சுவர்க்கம் நிச்சயமாக பிரம்மாவினூடாகவே ஸ்தாபிக்கப்பட்டது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு, நான் இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பிப்பதற்காகச் சங்கமயுகத்தில் வந்தேன். ஸ்ரீகிருஷ்ணர் அன்றி, நானே வந்தேன். ஸ்ரீகிருஷ்ணரால் இந்தத் தூய்மையற்ற உலகினுள் பிரவேசிக்க முடியாது. தந்தை மட்டுமே வருகிறார். அவர் மட்டுமே அனைவருக்கும் சத்கதியை அருள்பவர் ஆவார். மனிதர்களால் மனிதர்களுக்குச் சத்கதி அருள முடியாது. அனைவரும் அவரை மட்டுமே நினைவு செய்கிறார்கள். பரமாத்மாவான பரமதந்தை, எங்கு வசிக்கிறார்? அவர் பரந்தாமத்தில் வசிக்கிறார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். அது மகத்தான பிரம்ம தத்துவம் ஆகும். அங்கு மகாத்மாக்களைப் போன்று ஆத்மாக்கள் தூய்மையானவர்கள். இங்கும், அவர்கள் மகாத்மாக்களைப் பற்றியும் பாவாத்மாக்களைப் பற்றியும் பேசுகிறார்கள். உண்மையில், இங்கு ஒரு மகாத்மாவேனும் இல்லை. ஆத்மாக்கள் நீரினால் அன்றி, இந்த ஞானத்தாலும் யோகத்தாலும் தூய்மையாகவும் சதோபிரதானாகவும் ஆகவேண்டும். ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். ஆத்மாக்களில் மாசு கலக்கின்றது. ஆத்மாவே தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு போன்று ஆகுகிறார். இப்போது, தூய்மை அற்றவர்களாகி விட்ட ஆத்மாக்களை யாரால் தூய்மையாக்க முடியும்? வேறு எவருமன்றிப் பரமாத்மாவாகிய பரமதந்தையினாலேயே உங்களைத் தூய்மையாக்க முடியும். தந்தை இங்கிருந்து கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்களுடைய பாவங்கள் அழிந்துவிடும்! எந்தளவிற்கு நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். இதற்கே முயற்சி தேவைப்படுகிறது. எவ்வாறு இந்த உலகச்சக்கரம் சுழல்கிறது என்றும், எவ்வாறு நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என்றும், சத்தியயுக இராச்சியம் எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்றும் பின்னர் எவ்வாறு இராவணன் வந்தான் என்ற இந்த சகல ஞானத்தையும் நீங்கள் உங்களுடைய புத்திகளில் கொண்டிருக்கிறீர்கள். இராவணன் யார் என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் எப்போது இராவணனின் கொடும்பாவியை எரிக்க ஆரம்பித்தார்கள் என்பதும் எவருக்கும் தெரியாது. அவர்கள் ஒவ்வொரு வருடமும் அதனை எரிக்கிறார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் அதனை எரிப்பதில்லை. இது இப்போது இராவண இராச்சியம் ஆகும். எவராலும் இராம இராச்சியத்தை ஸ்தாபிக்க முடியாது. அது தந்தையின் பணி மட்டுமே ஆகும். தூய்மையற்ற மனிதர்களால் இதனைச் செய்ய முடியாது. அவர்கள் அனைவரும் அழிக்கப்படப் போகிறார்கள். தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட வேண்டும். சத்தியயுகத்தில் உள்ள ஒருவரேனும், ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எனக் கூற மாட்டார்கள். அது தூய உலகம். இலக்ஷ்மி, நாராயணனை யார் சுவர்க்க அதிபதிகள் ஆக்கினார் என்றும், அவர்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்தார்கள் என்றும் நீங்கள் இப்போது அறிவீர்கள். ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே 84 பிறவிகளை எடுக்கிறார்கள். அவர்களே இந்த நேரத்தில் சூத்திர வம்சத்திற்கு உரியவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் இப்போது பிராமண வம்சத்திற்கு உரியவர்கள் ஆகுகிறார்கள். நீங்களே பிராமண உச்சிக்குடுமிகள் ஆவீர்கள். அதியுயர்ந்த உச்சிக்குடுமிகளே பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமண குலத்தின் அலங்காரங்கள் ஆவார்கள். நீங்களும் இப்போது சிவபாபாவின் குழந்தைகள் ஆவீர்கள். அத்துடன் நீங்கள் பேரர்களும் பேத்திகளும் ஆவீர்கள். நீங்கள் சிவவம்சத்தைச் சார்ந்த பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் ஆவீர்கள். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பாட்டனாரிடம் இருந்து பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! தூய்மையானவர்கள் ஆகுங்கள். நீங்கள் முக்திதாமத்திற்கு என்னிடம் வருவீர்கள். சென்ற கல்பத்தில் இவற்றைப் புரிந்து கொண்டவர்கள் மாத்திரமே இப்போது அவற்றைப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு பிரம்மாகுமார், குமாரிகள் இருப்பதாகச் சிலர் வினவுகிறார்கள். நாங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறோம் என அவர்களுக்குக் கூறுங்கள். இந்தத் தெய்வீக விருட்சம் தொடர்ந்து வளருகிறது. ஆதி சனாதன தேவிதேவதா விருட்சத்தின் கன்று இப்போது மீண்டும் நாட்டப்படுகிறது. ஏனெனில் தேவதர்மம் இப்போது இல்லை. அனைவரும் தங்களை இந்துக்கள் என்றே அழைக்கிறார்கள். அவர்கள் ஏனைய மதங்களுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் வந்து தமது ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற சந்தோஷம் என்ற உங்களுடைய ஆஸ்தியைக் கோருவதற்காக, அதாவது, மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதற்காக வந்துள்ளீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுவதற்கு, இந்த ஞானத்திலும் யோகத்திலும் உறுதி ஆகுங்கள். நினைவெனும் முயற்சியைச் செய்வதன் மூலம் ஆத்மாவிலுள்ள மாசை அகற்றுங்கள்.

2. பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்களாகிய நாங்கள் உச்சிக் குடுமிகள் என்ற போதையைப் பேணுங்கள். பிராமணர்கள் மாத்திரமே ஆஸ்திக்கான உரிமையைக் கொண்டுள்ளவர்கள். ஏனெனில் நாங்கள் அனைவரும் சிவபாபாவின் பேரக்குழந்தைகள் ஆவோம்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சக்திவாய்ந்த மனோபாவத்தால் எந்தவொரு தூய்மையற்ற சூழலையும் மாற்றுகின்ற மாஸ்ரர் தூய்மையாக்குபவர் ஆகுவீர்களாக.

சூழல் எத்தகையதாக இருந்தாலும் உங்களின் சக்திவாய்ந்த மனோபாவத்தால் அந்தச் சூழலை மாற்ற முடியும். சூழல் விகாரங்கள் நிறைந்ததாக இருந்தாலும் உங்களின் மனோபாவம் விகாரமற்றதாக இருக்க வேண்டும். தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குபவர்களால் தூய்மையற்ற சூழலின் ஆதிக்கத்திற்கு உட்பட முடியாது. மாஸ்ரர் தூய்மையாக்குபவராகி, உங்களின் சக்திவாய்ந்த மனோபாவத்தால் எந்தவொரு தூய்மையற்ற அல்லது பலவீனமான சூழலை முடித்து விடுங்கள். அதைப் பற்றிப் பேசுவதன் மூலம் அத்தகைய சூழலை உருவாக்காதீர்கள். பலவீனமான அல்லது தூய்மையற்ற சூழலைப் பற்றிப் பேசுவதும் ஒரு பாவமே ஆகும்.

சுலோகம்:
இப்போது, பூமியில் இறை புரிந்துணர்வு என்ற விதையை விதையுங்கள், வெளிப்படுத்தல் இடம்பெறும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

யோகம் என்றால் மௌன சக்தி என்று அர்த்தம். இந்த மௌன சக்தியால் இலகுவாக தன்னையும் மற்றறவர்களையும் மாற்ற முடியும். இந்தச் சக்தியினால் பஞ்சதத்துவங்களுடன் ஆத்மாக்களும் மாற்றம் அடையும். வார்த்தைகளினால் பாடநெறியை வழங்கி ஆத்மாக்களை மாற்றம் அடையச் செய்கிறீர்கள். ஆனால் பஞ்சதத்துவங்களை மாற்றமடைய செய்வதற்கு, மௌன சக்தி உங்களுக்குத் தேவை. அதாவது உங்களுக்கு யோகசக்தி தேவை. ஏனைய அனைத்து எண்ணங்களும் மௌனித்து, பாபாவும் நானும் என்ற ஓர் எண்ணம் மாத்திரம் இருக்கின்ற போது, உங்கள் யோகம் சக்தி வாய்ந்ததாக ஆகின்றது. தந்தையைச் சந்திக்கின்ற அனுபவத்தைத் தவிர ஏனைய எண்ணங்கள் அனைத்தும் அற்றுப் போய்விட வேண்டும். அப்பொழுதே உங்கள் நினைவு நெருப்பைப் போன்றதென்றும் அதனூடாக மாற்றம் இடம்பெற முடியும் என உங்களால் நேர்மையாகக் கூற முடியும்.