26.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது புகழ்ச்சி இகழ்ச்சி, மரியாதை அவமரியாதை, சந்தோஷம் துன்பம் போன்றவற்றை சகித்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய சந்தோஷத்துக்கான நாட்கள் இப்பொழுது நெருங்கி வருகின்றன.

கேள்வி:
தந்தை அவரது பிராமணக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை என்ன?

பதில்:
தந்தையுடன் ஒருபோதும் முகம் கோணாதீர்கள். நீங்கள் தந்தையுடன் முகம் கோணினால் நீங்கள் சத்கதியுடனும் முகம் கோணுவீர்கள். தந்தை உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றார்: முகம் கோணுபவர்கள் தீவிரமான தண்டனையை அனுபவம் செய்வார்கள். நீங்கள் ஒருவர் மற்றவருடனோ அல்லது பிராமண ஆசிரியருடனோ முகம் கோணினால் மலர்கள் ஆகுவதற்குப் பதிலாக முட்கள் ஆகுவீர்கள். ஆகையினால் இதையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

பாடல்:
ஓ மனமே பொறுமையாய் இரு! உனது சந்தோஷத்துக்கான நாட்கள் வரவிருக்கின்றன!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்ட குழந்தைளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் பல பிறவிகளின் அனைத்துத் துன்பங்களும் அகற்றப்படுகின்றன. நீங்கள் இந்தப் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். உங்களுடைய துன்பத்துக்கான பாகம் முடிந்து சந்தோஷத்திற்கான பாகம் ஆரம்பம் ஆகுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் துன்பத்தை அனுபவம் செய்வார்கள். இங்கு பாபாவிடம் வந்த பின்னரும்கூட அவர்கள் ஏதோவொன்றைப் பற்றிய கவலையை உணர்வார்கள். பல குழந்தைகள் கஷ்டப்படுகின்றார்கள் என பாபாவும் புரிந்து கொண்டுள்ளார். மக்கள் யாத்திரைக்குச் செல்லும்போது சில நேரங்களில் பெருமளவில் சனக்கூட்டமும் சில நேரங்களில் பெருமழையும் புயலும் இருக்கும். ‘நாங்கள் கடவுளிடம்தானே செல்கின்றோம், அதனால் என்ன நடந்தால்தான் என்ன?’ என உண்மையான பக்தர்கள் கூறுவார்கள். அவர்கள் கடவுளிடம் செல்வதாக நினைத்து அந்த யாத்திரையில் செல்கின்றார்கள். மனிதர்களுக்கு பல கடவுள்கள் இருக்கின்றார்கள். உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் ‘அது பரவாயில்லை, ஒரு நல்ல செயலைச் செய்கின்றபோது எப்பொழுதும் தடைகள் இருக்கும்’ எனக் கூறுவார்கள். எனவே அவர்கள் இடையில் திரும்பி வரமாட்டார்கள். சிலர் இடையில் திரும்பி விடுகின்றார்கள். சில நேரங்களில் தடைகள் இருக்கும், சில நேரங்களில் தடைகள் இருக்கமாட்டாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இது உங்களுடைய யாத்திரையாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் செல்கின்றீர்கள் எனக் கூறுகின்றீர்கள். அந்தத் தந்தை அனைவரின் துன்பத்தையும் அகற்றுகின்றார். உங்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. இந்த நாட்களில் எத்தனை கூட்டமாக மக்கள் மதுபனுக்கு வருகின்றார்கள் என்று பாருங்கள். பாபா மிகவும் அக்கறை கொள்கின்றார். ஏனெனில் பலர் கஷ்டங்களை எதிர் நோக்குகின்றார்கள். சிலர் நிலத்திலேயும் தூங்க வேண்டியுள்ளது. பாபா தனது குழந்தைகள் நிலத்தில் தூங்குவதை விரும்புவதில்லை. எவ்வாறாயினும், நாடகத்திற்கேற்ப எவ்வாறு ஒரு கல்பத்திற்கு முன்னர் பெருமளவு கூட்டம் இருந்ததோ அந்தளவு கூட்டம் இருக்கும். இது மீண்டும் இடம்பெறும். இதில் நீங்கள் எந்தவித துன்பத்தையும் அனுபவம் செய்யக்கூடாது. கற்பவர்களில் சிலர் அரசர்களாகவும் சிலர் ஏழைகளாகவும் ஆகுவார்கள் என நீங்கள் அறிவீர்கள். சிலர் உயர்ந்த அந்தஸ்தையும் மற்றவர்கள் குறைந்த அந்தஸ்தையும் கொண்டிருப்பார்கள். ஆனால் அனைவரும் நிச்சயமாக சந்தோஷமாகவே இருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றார்கள். அவர்களால் எதையும் சகித்துக்கொள்ள முடியாதென்பதை பாபாவும் அறிவார். அவர்கள் ஏதாவது கஷ்டத்திற்கு முகம் கொடுக்கவேண்டி வந்தால் “இங்கே வருவதில் எங்களுக்கு எந்தவித பயனும் இல்லை” எனக் கூறுவார்கள். அல்லது தமது பிராமண ஆசிரியர் தங்களை இங்கே வருமாறு வலியுறுத்தியதாகக் கூறுவார்கள். சில குழந்தைகள் தமது பிராமண ஆசிரியர் எந்தவித காரணமும் இன்றி தங்களைச் சிக்கவைத்து விட்டதாகவும் கூறுகின்றார்கள். அவர்கள் இந்த உலக பல்கலைக் கழகத்திற்கு வந்திருப்பதாக முழுமையாக அடையாளம் கண்டுகொள்வதில்லை. இந்த நேரத்தில் கற்பதன் மூலம் எதிர்காலத்தில் சிலர் அரசர்களாகவும் சிலர் ஏழைகளாகவும் ஆகுகின்றார்கள். எவ்வாறாயினும், இங்குள்ள அரசர்களுக்கும் ஏழைகளுக்கும் அங்குள்ள அரசர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்குமுள்ள வித்தியாசம் உள்ளது. இங்கே ஏழைகளும் அரசர்களும் சந்தோஷம் இல்லாமலே இருக்கின்றார்கள். அங்கே இருவருமே சந்தோஷமாக இருப்பார்கள். இங்கேயுள்ள உலகம் விகாரமானதும் தூய்மையற்றதும் ஆகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இங்கே ஒருவர் பெருமளவு செல்வத்தை வைத்திருந்தாலும் அவை அனைத்தும் தூசாகப் போகின்றன. இந்த சரீரமும் அழிக்கப்படும். ஆத்மாக்கள் தூசாக மாட்டார்கள். பிர்லாவைப் போன்று பலர் செல்வந்தர்களாக இருந்த போதிலும் இந்தப் பழைய உலகம் இப்பொழுது மாறுகின்றது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவர்கள் இதைப் புரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாகவே இங்கே வருவார்கள். அவர்கள் கடவுள் இங்கே வந்துள்ளார் எனக் கூறுவார்கள். கடைசியில் வேறு எங்குதான் அவர்கள் செல்லமுடியும்? தந்தை இல்லாமல் எவருமே சத்கதியைப் பெறமுடியாது. ஒருவர் முகம் கோணினால் அவர் தனது சத்கதியுடன் முகம் கோணுவதாகக் கூறப்படுகின்றது. பலர் தொடர்ந்தும் முகம் கோணிப் பின்னர் வீழ்ந்து விடுகின்றார்கள். இந்த ஞானத்தைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த பலர் இருக்கின்றார்கள். அவர்கள் பெருமளவு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். சிலர் இந்தப் பாதையைத் தவிர வேறு பாதையில்லை என உண்மையிலேயே நம்புகின்றார்கள். இதன் மூலமே உங்களுடைய ஆஸ்தியாகிய அமைதி மற்றும் சந்தோஷத்தை பெற்றுக் கொள்கின்றீர்கள். பாபா இல்லாமல் அமைதி, சந்தோஷத்தை அடைவது சாத்தியம் இல்லை. நீங்கள் பெருமளவு செல்வத்தை கொண்டிருக்கும் போதே நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். செல்வத்தை கொண்டிருப்பதில் சந்தோஷம் இருக்கின்றது. அங்கே அசரீரி உலகில் ஆத்மாக்கள் அமைதியாக இருப்பார்கள். சிலர் தாங்கள் ஒரு பாகத்தை நடிக்க வேண்டிய தேவை இல்லாவிடின் அவர்கள் தொடர்ந்தும் மேலேயே இருந்து விடலாம் எனக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அப்படிக் கூறுவதனால் எதுவும் நடப்பதில்லை. இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது என குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பல குழந்தைகள் ஏதோ ஒன்றைப்பற்றி சந்தேகம் கொண்டு பின்னர் விலகிச் செல்கின்றார்கள். அவர்கள் அவர்களுடைய ஆசிரியருடனோ அல்லது ஒருவர் மற்றவருடனோ முகம் கோணி கற்பதை நிறுத்தி விடுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது மலர்கள் ஆகுவதற்காக இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் உண்மையிலேயே முட்களிலிருந்து மலர்களாக மாறுகின்றீர்கள் என நீங்கள் உணர்கின்றீர்கள். நீங்கள் நிச்சயமாக மலர்களாக வேண்டும். சில குழந்தைகள் ஏதாவதொரு சந்தேகத்தை கொண்டிருந்து இன்னார் இன்னார் இதைச் செய்கின்றார், இவர் அப்படியானவர் அல்லது இப்படியானவர், இதனாலேயே நான் இங்கே வருவதில்லை எனக் கூறுகின்றார்கள். அவர்கள் முகம்கோணி வீட்டில் சென்று இருந்து விடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் விரும்பும் எவருடனும் முகம் கோணுங்கள், ஆனால் ஒரேயொரு தந்தையுடன் முகம் கோணாதீர்கள். பாபா இந்த எச்சரிக்கையைக் கொடுக்கின்றார்: தண்டனை மிகவும் தீவிரமானது. கர்ப்பம் என்ற சிறையில் என்ன தண்டனையைப் பெறுகின்றீர்களோ, நீங்கள் செய்தவற்றிற்கான காட்சியை முதலில் நீங்கள் காண்பீர்கள். முதலில் காட்சிகளைக் காணாமல் தண்டனை இருக்க முடியாது. அதேபோன்று தற்பொழுது எவ்வாறு கற்கும்போது நீங்கள் மற்றவர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு முகம் கோணி கற்பதை நிறுத்தி விடுகின்றீர்கள் என்பதற்கான காட்சிகளையும் காண்பீர்கள். தந்தையுடன் கற்கவேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபோதும் கற்பதை நிறுத்தாதீர்கள்! நீங்கள் இங்கே மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதற்கே கற்கின்றீர்கள். நீங்கள் அதிமேலான தந்தையைச் சந்திக்கவே இங்கே வந்துள்ளீர்கள். சிலநேரங்களில் எதிர்பார்த்ததிற்கும் மேலாகக் குழந்தைகள் வருகின்றார்கள். ஆகையினால் நாடகத்திற்கு ஏற்ப சில கஷ்டங்கள் இருக்கும். சில குழந்தைகள் “நான் இன்ன இன்னதைப் பெறவில்லை. நான் இதைப் பெறவில்லை!” எனப் பல புயல்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள். அவை அனைத்தும் ஒன்றுமேயில்லை. மரணத்தின் போது இந்த ஞானமில்லாத மக்கள் கேட்பார்கள்: அவர்கள் காரணம் இல்லாமல் என்னைக் கொல்வதற்கு நான் என்ன குற்றம் செய்தேன்? கடைசியில் நடிக்கப்படும் பாகம் ‘காரணம் இல்லாமல் இரத்தம் சிந்துகின்ற பாகம்’ என்று அழைக்கப்படும். சடுதியாகக் குண்டுகள் போடப்பட்டு பலர் இறப்பார்கள். அது காரணம் இல்லாமல் இரத்தம் சிந்துதல், இல்லையா? இந்த ஞானம் இல்லாத மக்கள் துன்பத்தில் கதறி அழுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷம் அடைவீர்கள். ஏனெனில் இந்த உலகம் அழியப் போகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மற்றைய அனைத்து மதங்களும் அழிக்கப்படா விட்டால் எவ்வாறு ஒரு உண்மையான தர்மம் ஸ்தாபிக்கப்பட முடியும்? சத்தியயுகத்தில் அனாதியான ஆதிசனாதன தேவி தேவதா தர்மமே இருந்தது. சத்தியயுக ஆரம்பத்தில் என்ன இருந்தது என யாரும் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? இது மங்களகரமான சங்கமயுகம். தந்தை உங்களை அதிமேன்மையான மனிதர்கள் ஆக்குவதற்காக இங்கே வந்துள்ளார். அவர் அனைவரினதும் தந்தை ஆவார். நீங்கள் இப்பொழுது நாடகம் பற்றி அறிவீர்கள். அனைவரும் சத்திய யுகத்துக்குச் செல்ல மாட்டார்கள். அந்தக் கோடிக்கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் சத்திய யுகத்துக்குச் செல்லமாட்டார்கள். இந்த விடயங்கள் எல்லாம் விரிவானவை. பல புதல்விகள் இங்கே எதனையும் விளங்கிக் கொள்வதில்லை. அவர்கள் பக்திமார்க்கத்தில் உள்ள அனைத்திற்கும் பழக்கப்பட்டுள்ளதால் இந்த ஞானம் அவர்களின் புத்தியில் இருப்பதில்லை. அவர்கள் பக்தி செய்யும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: கடவுளால் என்னதான் செய்யமுடியாது? அவரால் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்க முடியும். சிலர் பாபாவிடம் வந்து கூறுகிறார்கள்: இன்னார் இறந்தவரை உயிர்ப்பித்தார். எனவே கடவுளால் இதைச் செய்ய முடியாதா? ஒருவர் நல்லவற்றை செய்கின்ற பொழுது மக்கள் அவரைப் புகழத் தொடங்குகிறார்கள். பின்னர் அவர் ஆயிரக்கணக்கான சீடர்களைக் கொண்டிப்பார். உங்களிடம் வெகுசிலரே இங்கே வருகின்றார்கள். உங்களுக்குக் கடவுள் கற்பிக்கின்றார் என்றால் ஏன் உங்களில் வெகு சிலரே இருக்கின்றீர்கள்? பல மக்கள் இவ்வாறான விடயங்களை உங்களுக்குக் கூறுகின்றார்கள். ஆ, ஆமாம்! ஆனால் இங்கே நீங்கள் மரணிக்க வேண்டும். அங்கே உங்களுடைய காதுகளைத் திருப்திப்படுத்துகின்ற விடயங்கள் மாத்திரமே இருக்கும். அவர்கள் கீதையை மிகச்சிறப்பாக எடுத்துரைப்பார்கள். பக்தர்கள் அதைச் செவிமடுப்பார்கள். இங்கே இது உங்களின் காதுகளைக் திருப்திப்படுத்தும் விடயமல்ல. உங்களுக்குத் தந்தையை நினைவு செய்யுமாறு கூறப்படுகின்றது, அவ்வளவுதான். “மன்மனாபவ” என்ற பதமும் கீதையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை கூறுகின்றார்: ஓகே நீங்கள் உங்கள் பிராமண ஆசிரியருடனோ அல்லது உங்களுடைய நிலையத்துடனோ முகம் கோணினாலும் குறைந்தது இதையாவது செய்யுங்கள்: அனைவரின் தொடர்பையும் துண்டித்து உங்களை ஆத்மாவெனக் கருதி ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை தூய்மையாக்குபவர், அவ்வளவு தான்! தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். தொடர்ந்தும் சுயதரிசன சக்கரத்தை சுழற்றுங்கள். இந்தளவுக்காவது நீங்கள் நினைவு செய்தால் நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சிக்கு ஏற்பவே சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிடில் நீங்கள் யாரை ஆட்சி செய்வீர்கள்? பெருமளவு முயற்சி செய்பவர்கள், உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்காக மக்கள் பெருமளவில் தலையை அடித்துக் கொள்கின்றார்கள். எவருமே முயற்சி செய்யாமல் வாழமுடியாது. எவ்வாறு அதிமேலானவர் தூய்மையாக்குகின்ற தந்தையாக இருக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். மக்கள் அவரைப் பற்றிய இந்தப் புகழைப் பாடியபோதிலும் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. பாரதம் மிகுந்த செல்வந்தமாக இருந்தது. பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது அதுவே உலகின் அற்புதமாக இருந்தது. அந்த ஏழு அற்புதங்களும் மாயைக்குச் சொந்தமானவை. முழு நாடகத்திலும் அதி மேலானது சுவர்க்கமும் அதி கீழானது நரகமும் ஆகும். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் வந்துள்ளீர்கள். எங்களின் இனிய பாபா எங்களை அனைத்திலும் உயர்ந்த இலக்கிற்கு இட்டுச் செல்கின்றார் என நீங்கள் அறிவீர்கள். யாரால் அவரை மறக்கமுடியும்? நீங்கள் எங்கேயாவது சென்றாலும் ஒரு விடயத்தை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். இதைக் கடவுளே பேசுகின்றார், கடவுள் பிரம்மா பேசுவதில்லை. எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களைக் கேட்கின்றார்: குழந்தைகளே, நான் உங்களைச் செல்வந்தர்கள் ஆக்கிவிட்டுச் சென்றேன், எனவே எவ்வாறு நீங்கள் இவ்வளவு சீரழிந்தவர்கள் ஆகினீர்கள்? எவ்வாறாயினும் சில குழந்தைகள் கேட்கின்றார்கள், ஆனால் எதையுமே புரிந்து கொள்வதில்லை! அதனால் அந்தக் குழந்தைகள் சிறிது கஷ்டத்தை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் மரியாதையையும் அவமரியாதையையும் சந்தோஷத்தையும் துன்பத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும். இங்கே உள்ள மக்களைப் பாருங்கள்! அவர்களுக்குப் பிரதம மந்திரியின்மீதுகூட கல்லெறிய நேரம் எடுக்காது. மாணவர்கள் இளம் இரத்தம் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் பெருமளவில் புகழப்படுகின்றார்கள். அந்தக் குழந்தைகள் எதிர்கால இளம் இரத்தம் என அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அதே மாணவர்கள் துன்பம் விளைவிக்கக் காரணம் ஆகுகின்றார்கள். அவர்கள் கல்லூரிக்குத் தீ வைக்கின்றார்கள்: அவர்கள் தொடர்ந்தும் அனைவரையும் அவமரியாதை செய்கிறார்கள். உலகின் நிலை என்னவாகி உள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஒரு நாடகத்தில் உள்ள நடிகருக்கு அதன் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ அல்லது பிரதான நடிகர்கள் பற்றியோ தெரியாதுவிடின் நீங்கள் என்ன கூறுவீர்கள்? அனைவரிலும் மகத்துவமான நடிகரின் வாழ்க்கை வரலாறு பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் நடிக்கின்ற பாகத்தையோ அல்லது முக்கியமான மதங்களின் ஸ்தாபகர்கள் நடிக்கின்ற பாகத்தையோ அவர்கள் அறியமாட்டார்கள். மக்கள் குருட்டு நம்பிக்கையுடன் அவர்கள் அனைவரையும் குருமார்கள் என அழைக்கின்றார்கள். ஒரு குரு என்றால் சத்கதி அருள்பவர் ஆவார். பரமாத்மா பரமதந்தையே அனைவருக்கும் சத்கதி அருள்பவர் ஆவார். அவர் பரம குருவுமாவார். அவர் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரது பாகம் அற்புதமானது. அவர் இந்த தர்மத்தை ஸ்தாபித்து ஏனைய அனைத்து மதங்களையும் அழிக்கின்றார். ஏனைய அனைத்து ஸ்தாபகர்களும் இலகுவாக மதத்தை ஸ்தாபிக்கிறார்கள். ஸ்தாபனையையும் விநாசத்தையும் கொண்டு நடாத்துபவரே குரு என அழைக்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: நான் மகாகாலன் ஆவேன். ஒரு மதம் ஸ்தாபிக்கப்பட்டு மற்றைய அனைத்து மதங்களும் அழிக்கப்படும். அனைத்தும் இந்த ஞான யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் என்றே அர்த்தமாகும். பின்னர் எந்த யுத்தமும் இடம்பெறமாட்டாது, எந்த யாகமும் உருவாக்கப்பட மாட்டாது. நீங்கள் இப்பொழுது உலகின் ஆரம்பம் மத்தி இறுதி பற்றி அறிவீர்கள். ஏனைய அனைவரும் இலகுவாக “நேற்றி நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்று கூறுவார்கள். நீங்கள் அவ்வாறு கூறுவதில்லை. வேறு எவருமன்றி தந்தையால் மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். ஆகையினால் குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும். எவ்வாறாயினும் மாயை உங்களின் நினைவை முடிக்கும் அளவுக்கு உங்களை எதிர்க்கின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தையும் துன்பத்தையும் மரியாதையையும் அவமரியாதையையும் சகித்துக்கொள்ள வேண்டும். உண்மையில் இங்குள்ள எவரும் அவமரியாதை செய்யப்படுவதில்லை. ஏதாவது நடந்தால் அதைத் தந்தைக்கு முறையிடுங்கள். நீங்கள் முறையிடாவிடின் பாவத்தைச் சேர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் தந்தைக்கு அதுபற்றிக் கூறினால் அவர்கள் மிக விரைவில் எச்சரிக்கப்படுவார்கள். இந்த சத்திரசிகிச்சை நிபுணரிடம் இருந்து எதையும் மறைக்காதீர்கள். அவர் மகத்தான சத்திரசிகிச்சை நிபுணர். அவர் இந்த ஞானம் எனும் ஊசியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அது இந்த ஞானத்தைலம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஞானம் காஜல் (கண் அழகுபடுத்தல்) ஞானம் என அழைக்கப்படுகின்றது. இங்கே மந்திரவித்தை என்ற கேள்வியில்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு தூய்மை அற்றவரிலிருந்து தூய்மை ஆகுவதற்கான பாதையைக் காட்ட வந்துள்ளேன். நீங்கள் தூய்மை ஆகாதுவிடின் உங்களால் எதையும் கிரகிக்க முடியாது. காமத்தின் காரணமாகவே பாவங்கள் செய்யப்படுகின்றன. நீங்கள் காமத்தை வெல்லவேண்டும். நீங்களே விகாரத்தில் ஈடுபட்டால் விகாரத்தில் ஈடுபடாதீர்கள் என உங்களால் மற்றவர்களுக்குக் கூறமுடியாது. அது மிகப் பெரிய பாவமாகும். “ராமா ராமா” எனக் கூறுங்கள், நீங்கள் கடலைக் கடக்கமுடியும் என்ற பண்டிதரின் கதையை பாபா கூறுகிறார். மக்கள் அது கடல் நீரைக் குறிப்பதாக நினைக்கின்றார்கள். எவ்வாறு வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் சென்றடைய முடியாதோ அவ்வாறே பிரம்ம தத்துவத்துக்கும் முடிவில்லை. இங்கே மக்கள் அனைத்தினதும் ஆழத்துக்குச் செல்ல முயற்சிக்கின்றார்கள். ஆனால் அங்கே அவர்கள் எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். இங்கே அவர்கள் ஆகாயத்தில் எவ்வளவு தூரம் சென்றாலும் அவர்கள் மீண்டும் திரும்பி வரவேண்டும். அவர்களிடம் போதிய எரிபொருள் இல்லாவிடில் எவ்வாறு அவர்கள் திரும்ப முடியும்? அது விஞ்ஞானத்தின் அளவற்ற அகந்தையாகும். அவற்றின் மூலம் அவர்கள் அழிவை ஏற்படுத்துவார்கள். ஆகாய விமானங்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும், ஆனால் அதன் மூலம் பெருமளவு துன்பமும் விளையும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தக் காரணத்துக்காகவும் கற்பதை நிறுத்தாதீர்கள். தண்டனை மிகவும் தீவிரமானது. ஆகையினால் அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, மற்றைய அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். முகம் கோணாதீர்கள்.

2. தந்தையே உங்களுக்கு இந்த ஞான ஊசியை அல்லது இந்த ஞானத் தைலத்தைக் கொடுக்கின்றார். அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரிடம் எதையும் மறைக்காதீர்கள். தந்தையிடம் கூறுவதன் மூலம் நீங்கள் மிக விரைவில் எச்சரிக்கப்படுவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆரோக்கியமான சரீரத்தையும் சந்தோஷமான மனதையும் இந்த ஞானச் செல்வத்தையும் கொண்டிருப்பதன் மூலம் மகா பாக்கியசாலி ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில் நீங்கள் உங்களின் ஆதி ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்போது, உங்களின் கர்ம வேதனை ஒரு முட்கிரீடமாக மாறிவிடும். உங்களின் சரீர நோய்கள் (ரோகா) யோகாவாக மாறிவிடும். அதனால் நீங்கள் சதா ஆரோக்கியமாக இருப்பீர்கள். மன்மனாபவ என்பதில் ஸ்திரமாக இருப்பதனால் உங்களின் சந்தோஷச் சுரங்கம் சதா நிரம்பியிருக்கும். இதனாலேயே நீங்கள் சந்தோஷமான மனதைக் கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் உங்களின் இந்த ஞானச் செல்வமே எல்லாவற்றிலும் அதிமேன்மையான செல்வம் ஆகும். இந்த ஞானச் செல்வத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு சடப்பொருள் இயல்பாகவே ஒரு வேலையாள் ஆகிவிடும். உங்களுக்கு ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளும் உள்ளன. புனித அன்னங்களுடன் தொடர்பு உள்ளன. எனவே உங்களிடம் இயல்பாகவே மகா பாக்கியசாலிக்குரிய ஆசீர்வாதம் உள்ளது.

சுலோகம்:
நினைவிற்கும் சேவைக்கும் இடையிலான சமநிலை இரட்டைப் பூட்டு ஆகும்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.

பல பிறவிகளாக உங்களின் சரீர ரூபத்தின் இயல்பான விழிப்புணர்வு உங்களுக்கு இருந்ததைப் போல் குறுகிய காலத்திற்காயினும் உங்களால் உங்களின் ஆதி ரூபத்தின் விழிப்புணர்வை அனுபவம் செய்ய முடியாதா? இந்த முதல் பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் உங்களின் ஆத்ம உணர்வு ஸ்திதியுடன் ஆத்மாக்கள் எல்லோருக்கும் ஒரு காட்சியை அருள்வதற்குக் கருவிகள் ஆகுவீர்கள்.