27.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் நேரம் மிகவும் பெறுமதியானது. ஆகையால் உங்கள் நேரத்தைப் பயனற்ற விடயங்களில் வீணாக்காதீர்கள்.
கேள்வி:
நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்குத் தந்தையால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீமத் யாது?பதில்:
1.குழந்தைகளே, நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதனால், எந்த ஓர் அசுரத்தன்மையும் இருக்கக் கூடாது. 2. எவருடனும் கோபப்படாதீர்கள். 3. எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். 4. பயனற்ற விடயங்களைச் செவிமடுக்காதீர்கள். தந்தையின் ஸ்ரீமத்: தீயதைக் கேட்காதீர்கள்!ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சாதாரணமாகவே அமர்கின்றீர்கள். இவ்வாறாக நீங்கள் எங்கும் அமரலாம். நீங்கள் ஒரு காட்டில், மலையில், வீட்டில், ஒரு குடிலில் எங்கே அமர்வதாயினும், உங்களால் இவ்வாறு அமர முடியும். இவ்வாறு அமருவதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் மாற்றம் அடைகிறீர்கள். மனிதர்களாகிய நீங்களே, எதிர்காலத்திற்கான தேவர்களாக இப்பொழுது ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் முட்களில் இருந்து மலர்களாக மாறுகின்றோம். பாபாவே, பூந்தோட்டத்தின் அதிபதியும் பூந்தோட்டக்காரரும் ஆவார். தந்தையை நினைவு செய்து 84 பிறவிச் சக்கரத்தைச் சுழற்றுவதன் மூலம் மட்டுமே நாங்கள் மாற்றம் அடைகின்றோம். நீங்கள் இங்கிருந்தாலும் அல்லது வேறு எங்கிருந்தாலும் படிப்படியாக மாற்றம் அடைந்து மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள். இவ்வாறுதான் நீங்கள் ஆகுகிறீர்கள் என்ற இலக்கும் குறிக்கோளும் உங்கள் புத்திகளில் உள்ளன. நீங்கள் என்ன செய்தாலும், சப்பாத்தி தயாரித்துக் கொண்டிருந்தாலும் உங்கள் புத்தியில் தந்தையை மாத்திரம் வைத்திருங்கள். குழந்தைகளாகிய நீங்கள், பெற்றுள்ள ஸ்ரீமத்: நடந்தும் உலாவித் திரியும்போதும், அனைத்தையும் செய்யும்போதும், நினைவில் நிலைத்திருங்கள். தந்தையை நீங்கள் நினைவு செய்யும் போது, நீங்கள் ஆஸ்தியையும், 84 பிறவிச் சக்கரத்தையும் நினைவு செய்கிறீர்கள். இதில் வேறு என்ன சிரமம் உள்ளது? எதுவுமே இல்லை! நாங்கள் தேவர்கள் ஆகிக் கொண்டிருப்பதால், எங்களுக்கு அசுரத்தன்மைகள் இருக்கவே கூடாது. எவருடனும் கோபப்படாதீர்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். பயனற்ற எந்த விடயத்தையும் செவிமடுக்காதீர்கள். தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் உலக விடயங்களின் வம்பளத்தல்களை அதிகளவு செவிமடுத்துள்ளீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் இவற்றைச் செவிமடுத்ததால், நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது, இன்னார் இவ்வாறானவர் அல்லது அவருக்கு இந்தக் குறைபாடு உள்ளது போன்று வம்பளப்பதை நிறுத்திவிடுங்கள். எந்த ஒரு பயனற்ற விடயங்களைப் பற்றியும் பேசாதீர்கள். இது உங்கள் நேரத்தை வீணாக்குவது போன்றதாகும். உங்கள் நேரம் மிகவும் பெறுமதி வாய்ந்தது. இந்தக் கல்வியின் மூலம் மாத்திரமே, நீங்கள் பயனடைய முடியும். இந்தக் கல்வியின் மூலமாக மாத்திரமே, நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். ஏனைய கல்விகளில் நீங்கள் அதிகளவு முயற்சி செய்யவேண்டி இருக்கின்றது. பரீட்சைகளைச் செய்வதற்குச் சிலர் வெளிநாடுகளுக்குக் கூடச் செல்கிறார்கள். உங்களுக்கு எந்த ஒரு சிரமமும் கொடுக்கப்படவில்லை. ஆத்மாக்களாகிய உங்களிடம் தந்தை கூறுகிறார்: தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் எதிரெதிரே அமர்த்தப்பட்டாலும் தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். நினைவில் அமர்ந்திருப்பதன் மூலம், நீங்கள் முட்களில் இருந்து மலர்களாக மாற்றம் அடைகிறீர்கள். இது மிகவும் சிறந்த வழிமுறை! ஆகையால், நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான நோய்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான நோய்க்கும் ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளார். முக்கியஸ்தர்கள் தமக்கென விசேட சத்திர சிகிச்சை நிபுணர்களை வைத்துள்ளார்கள். உங்களின் சத்திரசிகிச்சை நிபுணர் யார்? கடவுள் ஆவார். அவர் அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர். அவர் கூறுகிறார்: நான் அரைக்கல்பத்திற்கு உங்களை நோய்களில் இருந்து விடுவிக்கின்றேன். என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக இருப்பீர்கள். இதனை நினைவு செய்ய, நீங்கள் ஒரு முடிச்சைப் போட்டுக் கொள்ளுங்கள். நினைவு செய்வதன் மூலம் மாத்திரமே நீங்கள் நோயற்றவர்களாக முடியும். அதன் பின்னர், 21 பிறவிகளுக்கு உங்களுக்கு எந்த ஒரு நோயும் இருக்க மாட்டாது. ஆத்மா அழிவதில்லை. ஆயினும், சரீரம் நோய்வாய்ப்படுகின்ற போது, ஆத்மாவே அனைத்து வேதனைகளையும் அனுபவிக்கின்றார். அங்கே, அரைக்கல்பத்திற்கு உங்களுக்கு எந்த ஒரு நோயும் இருக்கமாட்டாது. நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகச் சேவை செய்ய வேண்டும். சில குழந்தைகள் கண்காட்சிகளில் சேவை செய்யும் போது, அவர்களின் தொண்டை அடைத்து விடுகின்றது. சில குழந்தைகள் தாம் சேவை செய்து கொண்டிருக்கும் போது, தாம் பாபாவிடம் சென்று விடுவோம் என்று நம்புகின்றார்கள். இதுவும் சேவை செய்வதற்கு மிகவும் சிறந்த வழியாகும். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்த வேண்டும். கண்காட்சிகளின் போது, முதன்முதலில் இலக்ஷ்மி நாராயணனின் படத்தையே காட்டுங்கள். இதுவே முதற்தரமான (A1) படமாகும். 5000 வருடங்களுக்கு முன்னர், உண்மையிலேயே பாரதமே அவர்களது இராச்சியமாக இருந்தது. அவர்களிடம் அதிகளவு செல்வம் இருந்தது. அப்பொழுது தூய்மை, சந்தோஷம், அமைதி ஆகிய அனைத்தும் இருந்தன. எவ்வாறாயினும், பக்திமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், சத்திய யுகத்திற்கு நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் எனக் கால எல்லையைக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறாயின், எவ்வாறு எதனையும் நினைவு செய்ய முடியும்? இலக்ஷ்மி நாராயணின் இந்தப் படம் முதற்தரமானது. இந்த வம்சம், சத்தியயுகத்தில் 1250 வருடங்கள் ஆட்சி செய்தது. முன்னர் உங்களுக்கும் இது தெரிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள், முழு உலகையும் ஆட்சி செய்தீர்கள் என்று தந்தை உங்களுக்கு இப்பொழுது ஞாபகப்படுத்தி உள்ளார். நீங்கள் அதனை மறந்துவிட்டீர்களா? நீங்களே 84 பிறவிகளை எடுத்தீர்கள். நீங்களே சூரியவம்சத்தைச் சேர்ந்தவர்கள். நிச்சயமாக மறுபிறவி உண்டு. நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பது மிகவும் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விடயமாகும். நீங்கள் தொடர்ந்தும் இறங்கினீர்கள். இப்பொழுது தந்தை உங்களை, ஏறும் ஸ்திதியில் அழைத்துச் செல்கின்றார். பக்தர்கள் பாடுகின்றார்கள்: உங்கள் ஸ்திதி ஏறும்போது, அனைவரும் பயன் அடைகின்றார்கள். அவர்கள் சங்கு போன்றவற்றையும் ஊதுகின்றார்கள். இப்பொழுது விரக்திக் கூக்குரல் கேட்கும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பாகிஸ்தானில் என்ன நடந்தது என்று பாருங்கள்! அனைவரது வாயில் இருந்தும் வெளிப்பட்ட வார்த்தைகள்: “ஓ, கடவுளே! ஓ! ராமா! இப்போது என்ன நடக்கப் போகிறது?” இப்போது வரவுள்ள விநாசம் மிகப் பெரியது. அதன் பின்னர், வெற்றி முரசு கொட்டும். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்த எல்லையற்ற உலகம் அழிய உள்ளது. எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் எல்லைக்கு உட்பட்ட விடயங்களின் வரலாற்றையும் புவியியலையும் பற்றியே செவிமடுத்துக் கொண்டிருந்தீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு ஆட்சிக்கு வந்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது. அவர்களின் வரலாறும், புவியியலும் எவருக்கும் தெரியாது. அவர்கள் எத்தனை பிறவிகளில் ஆட்சி செய்தார்கள் என்றும் அதன் பின்னர் அந்தச் சமயங்கள் எவ்வாறு வந்தன என்பதையும் நீங்கள் மிகவும் நன்றாக அறிந்திருக்கின்றீர்கள். இது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. இதனை ஆன்மீகத் தந்தையே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார். அங்கே (உலகப் பாடசாலைகளில்) மனிதர்களே மனிதர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். இங்கே, பரமாத்மா ஆத்மாக்களாகிய எங்களைத் தனக்குச் சமமானவர் ஆக்குகிறார். ஓர் ஆசிரியர், நிச்சயமாக பிறரைத் தனக்குச் சமமாகவே ஆக்குவார். தந்தை கூறுகிறார்: நான் உங்களை இரட்டைக் கிரீடம் உடையவர் ஆக்குகிறேன். நான் உங்களை என்னை விடவும் மேலானவர் ஆக்குகிறேன். நினைவு செய்வதன் மூலம் நீங்கள் ஒளிக்கிரீடத்தைப் பெறுகிறீர்கள். அத்துடன், 84 பிறவிச்சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது செயல், நடுநிலைச்செயல், பாவச் செயல்களின் தத்துவம் விளங்கப்படுத்தப்படுகின்றது. சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையாக உள்ளன. இராவண இராச்சியத்தில் செயல்கள் பாவகரமானவை. ஏணியில் இறங்கும் போது, உங்கள் கலைகள் படிப்படையாகக் குறைவடைந்து, உங்கள் ஸ்திதி தொடர்ந்தும் இறங்குகின்றது. நீங்கள் மிகவும் அழுக்கடைகின்றீர்கள். அதன் பின்னர், தந்தை வந்து, பக்தர்களுக்கு, அவர்களது பக்திக்கான பலனைக் கொடுக்கின்றார். உலகில் உள்ள அனைவருமே பக்தர்கள் ஆவார்கள். சத்தியயுகத்தில், பக்தர்கள் எவரும் இருப்பதில்லை. பக்திக்கான பிரிவு இங்கேயே உள்ளது. அங்கே, ஞானத்தின் வெகுமதியே உள்ளது. இப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்து உங்களது எல்லையற்ற வெகுமதியைப் பெறுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். முதன்முதலில், இலக்ஷ்மி நாராயணனின் படத்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். அவர்களது இராச்சியம் 5000 வருடங்களின் முன்னர் இருந்தது. அப்பொழுது சந்தோஷம், அமைதி, தூய்மை அனைத்தும் உலகில் நிலவின. வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. இந்த நேரத்தில், எண்ணிக்கையற்ற சமயங்கள் உள்ளன. முதலில் இருந்த அந்தத் தர்மம் இப்பொழுது இல்லை. அது நிச்சயமாக மீண்டும் ஒருமுறை வரும். தந்தை இப்பொழுது அதிகளவு அன்புடன் எங்களுக்குக் கற்பிக்கின்றார். யுத்தம் என்றதொரு கேள்விக்கே இடமில்லை. இது அந்நிய இராச்சியத்தில், பிச்சைக்கார வாழ்க்கை ஆகும். இங்குள்ள அனைத்தும் மறைமுகமானது. தந்தையும் மறைமுகமானதொரு முறையிலேயே வந்துள்ளார். அவர் இங்கே அமர்ந்திருந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவே, அனைத்தையும் செய்கின்றார். ஆத்மாக்கள் தமது பாகத்தைச் சரீரங்களின் மூலம் நடிக்கின்றார்கள். ஆத்மாக்கள் இப்பொழுது சரீர உணர்வு உடையவர்கள் ஆகியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! தந்தை உங்களுக்கு வேறு எந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. தந்தை மறைமுகமாக வரும் பொழுது, அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராச்சியத்தை மறைமுகமான தானமாக வழங்குகின்றார். உங்களுடைய அனைத்தும் மறைமுகமானது. ஆகையாலேயே, ஒரு பெண் திருமணம் செய்யும் போது அவளுக்கு மறைமுகமாகவே சீதனம் வழங்கப்படுகின்ற ஒரு சம்பிரதாயம் உள்ளது. உண்மையில் கூறப்படுகின்றது: மறைமுகமாகத் தானம் செய்வது மகா புண்ணியம். இரண்டு மூன்று பேருக்கு அது தெரியவந்தால், அதன் சக்தி குறைவடைகின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, கண்காட்சிகளில், முதன் முதலில், இலக்ஷ்மி நாராயணனின் படத்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். அவர்களிடம் வினவுங்கள்: உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா? எவ்வாறாயினும், எப்பொழுது அமைதி நிலவுகின்றது என்பதை எவரது புத்தியும் அறியாதுள்ளது. சத்தியயுகத்தில் தூய்மை, அமைதி, சந்தோஷம் அனைத்தும் நிலவின என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ‘இன்ன, இன்னார், சுவர்க்கவாசி ஆகினார்’ என அவர்கள் கூறும் பொழுது மக்கள் சுவர்க்கத்தை நினைவு செய்கின்றார்கள். எவ்வாறாயினும், அதனைப் பற்றி எவருக்கும் எதுவும் தெரியாது. அவர்கள் அனைவரும் தத்தமது மனதில் என்ன தோன்றுகின்றதோ அதனைக் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் கூறுவதில் எந்த அர்த்தமும் இருப்பதில்லை. இது நாடகத்தில் உள்ளது. நீங்கள் எவ்வாறு 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள் என்பது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் இப்பொழுது உள்ளது. தந்தை எங்களை இந்தத் தூய்மையற்ற உலகில் இருந்து அகற்றி, மீண்டும் தூய உலகிற்கு அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றார். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதன் மூலம், நாங்கள் மாற்றம் செய்யப்படுகின்றோம். நாங்கள் முட்களில் இருந்து மலர்கள் ஆக மாறுகின்றோம். அதன் பின்னர் நாங்கள் பூகோள ஆட்சியாளர் ஆகுகின்றோம். தந்தையே எங்களை அவ்வாறாக ஆக்குகின்றார். பரமாத்மா என்றென்றும் தூய்மையாகவே உள்ளார். அவர் மாத்திரமே ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குவதற்காக வரமுடியும். சத்தியயுகத்தில், நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள். அங்கே இயற்கையான அழகு இருக்கின்றது. இக்காலத்தில், மக்கள் செயற்கையாக அலங்கரித்துக் கொள்கின்றார்கள். இப்பொழுது வகைவகையாகத் தோன்றியுள்ள நவநாகரிகங்களைப் பாருங்கள்! அவர்கள் அணிகின்ற ஆடைகளைப் பாருங்கள்! அந்தக் காலத்தில் பெண்கள் தம் மீது பிறரின் பார்வை படாதவாறு முக்காடிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது முக்காடு அகற்றப்பட்டுள்ளது. எங்கும் தீய நடத்தையே அதிகரித்து உள்ளது. தந்தை கூறுகின்றார்: தீயதைக் கேட்காதீர்கள்! ஓர் அரசருக்குச் சக்தி உள்ளது. கடவுளின் பெயரில் எவரும் தானம் செய்யும் பொழுது, அதனால் அவர் சக்தியைப் பெறுகின்றார். இங்கே, எவருக்கும் எந்த சக்தியும் இல்லை. அனைவரும் தாம் விரும்பியதையே செய்கின்றார்கள். மனிதர்கள் மிகவும் தீயவர்கள் ஆகி உள்ளார்கள். படகோட்டி உங்கள் கைகளைப் பிடித்திருப்பதால், நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள் ஆவீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்களே அவரது கருவிகள் ஆகுகின்றீர்கள். முதலாவதும், பிரதானதுமான தீய ஆவி சரீர உணர்வாகும். பின்னர், ஏனைய அனைத்துத் தீய ஆவிகளும் அதனைத் தொடர்கின்றன. உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதித் தந்தையை நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள். இது கசப்பான மருந்தல்ல. அவர் கூறுகின்றார்: உங்களை ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். பாபாவின் நினைவுடன் நீங்கள் எவ்வளவு தூரம் நடந்தாலும், உங்கள் கால்கள் களைப்படைய மாட்டாது. நீங்கள் இலேசாகுவீர்கள். உங்களுக்கு அதிகளவு உதவி கிடைக்கும். நீங்கள் மாஸ்டர் சர்வசக்திவான்கள் ஆவீர்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். அவர் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களிடம் அவர் கூறுகின்றார்: தீயதைக் கேட்காதீர்கள்! சேவை செய்கின்ற குழந்தைகளின் வாயிலிருந்து இந்த ஞான இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்படும். அவர்களின் வாயிலிருந்து வேறு எதுவும் அன்றி இந்த ஞான விடயங்கள் மாத்திரமே வெளிவர முடியும். பயனற்ற வம்பளத்தலைச் செவிமடுக்காதீர்கள். சேவை செய்கின்றவர்களின் வாய்களில் இருந்து சதா இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்படும். இந்த ஞானத்தைத் தவிர வேறு எதனைப் பேசுவதும், கற்களை எறிவதைப் போன்றதே ஆகும். நீங்கள் கற்களை எறியாத போது, நிச்சயமாக இந்த ஞான இரத்தினங்களையே கொடுக்கின்றீர்கள். நீங்கள் கற்களை எறிபவர்களாகவோ அல்லது பெறுமதி குறிப்பிட முடியாத இந்த ஞான இரத்தினங்களை வழங்குபவர்களாகவோ இருக்கின்றீர்கள். தந்தை வந்து உங்களுக்கு இந்த ஞான இரத்தினங்களைத் தருகின்றார். சதா அவர்கள் கற்களை எறிகின்ற அது பக்தியாகும். பாபா மிக மிக இனிமையானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்குப் பாடினீர்கள்: ‘நீங்களே எங்களின் தாயும் தந்தையும் ஆவீர்கள்’. ஆனால் உங்களுக்கு அதன் அர்த்தம் என்னவென்றே தெரியாது. நீங்கள் கிளிகளைப் போல் பாடினீர்கள். இப்பொழுது நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். பாபா எங்களுக்கு உலக இராச்சியம் என்ற எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். 5000 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் உலக அதிபதிகளாக இருந்தோம். இப்பொழுது நாங்கள் அதிபதிகள் அல்ல. ஆனால், மீண்டும் அவ்வாறு ஆகுவோம். சிவபாபா எங்களுக்கு பிரம்மாவின் ஊடாக ஆஸ்தியைக் கொடுக்கின்றார். பிராமண குலம் இருக்க வேண்டும். அவர்கள் ‘பாக்கிய இரதம்’ என்று கூறுகின்றார்கள், ஆனால். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. ஆகையாலேயே பிரம்மாவும் பிராமண குலமும் உள்ளது. பாபா இந்தச் சரீரத்தில் பிரவேசிக்கும் போதே, பிரம்மாவிற்குப் பாக்கியரதம் என்ற பெயர் கொடுக்கப்படுகின்றது. பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் உச்சிக் குடுமிகள் ஆவீர்கள். பல்-வகை உருவமும் இதனையே காட்டுகின்றது. உச்சியில் சிவபாபா உள்ளார். அதன் பின்னர் கடவுளின் குழந்தைகளாகி உள்ள, சங்கமயுகத்தின் பிராமணர்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். இப்பொழுது, நீங்களே கடவுளின் குழந்தைகள் என்பதை அறிவீர்கள். அதன் பின்னர், நீங்கள் தேவர்களின் குழந்தைகள் ஆவீர்கள். ஆகையால், உங்கள் கலைகள் குறைவடையும். இலக்ஷ்மி, நாராயணனனிடம் இந்த ஞானம் இல்லாததால், அவர்களிடம் கலைகள் குறைவாகவே உள்ளன. பிராமணர்களாகிய உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. எவ்வாறாயினும், இலக்ஷ்மியும் நாராயணனும் இந்த ஞானம் அற்றவர்கள் என்று கூற மாட்டீர்கள். இந்த ஞானத்தின் ஊடாகவே அவர்கள் அந்த அந்தஸ்தைக் கோரினார்கள். பிராமணர்களாகிய நீங்கள், மிகவும் மேன்மையானவர்கள். அதன் பின்னர், நீங்கள் தேவர்கள் ஆகும் போது, உங்களிடம் இந்த ஞானம் எதுவுமே இருக்க மாட்டாது. நீங்கள் தேவர்களாக இருந்தபோது, உங்களிடம் இந்த ஞானம் இருக்குமாயின், உங்கள் தேவ வம்சம் தொன்று தொட்ட காலத்திலிருந்து தொடர்ந்தும் நிலைத்திருக்கும். இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்டகாலம் தொலைந்திருந்து, இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளாகிய உங்களுக்கு, இரகசியங்கள் அனைத்தும் கூறப்பட்டுள்ளன. நீங்கள் புகையிரதத்தில் பயணம் செய்யும் போதும், உங்களால் சேவை செய்ய முடியும். ஒரு படத்தை ஒருவருக்கு விளங்கப்படுத்த ஆரம்பித்தால், இன்னமும் பலர் சூழ்ந்து கொள்வார்கள். இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஞானத்தை மிகவும் நன்றாகக் கிரகித்து, பிரஜைகள் ஆகுகின்றார்கள். சேவைக்காக நீங்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் நல்ல படங்கள் உள்ளன. பாரத மக்களாகிய நாங்கள் முதலில் தேவர்களாக இருந்தோம். நாங்கள் இப்பொழுது எதுவும் அற்றவர்கள் ஆகிவிட்டோம். வரலாறு மீண்டும் இடம்பெறும். இது இரு யுகங்களுக்கு இடைப்பட்ட சங்கமம் ஆகும். இப்பொழுதே நாங்கள் அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றோம். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் வாய்களில் இருந்து இந்த ஞானத்தை அன்றி வேறு எதனையும் வெளிப்படுத்தாதீர்கள். வம்பு பேசுவதை என்றுமே செவிமடுக்காதீர்கள். கற்கள் அன்றி, இந்த ஞான இரத்தினங்கள் மாத்திரமே சதா உங்கள் வாய்களில் இருந்து வெளிப்பட வேண்டும்.2. சேவை செய்வதுடன், நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, உங்களை நோய்களில் இருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். உங்களை 21 பிறவிகளுக்கு நோய்களில் இருந்து விடுவிக்கின்ற, சத்திரசிகிச்சை நிபுணரான கடவுளையே நீங்கள் கண்டு விட்டீர்கள் என்ற போதையிலும் சந்தோஷத்திலும் நிலைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு செயலிலும் தந்தையைப் பின்பற்றி, அன்பின் பிரதிபலனைக் கொடுக்கும் ஒரு தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக.நீங்கள் இயல்பாகவே நீங்கள் விரும்பும் ஒருவரைப் பின்பற்றுவீர்கள். எப்போதும் உங்களைக் கேட்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்: நான் செய்யம் செயலில் தந்தையைப் பின்பற்றுகிறேனா? அப்படி இல்லாவிட்டால், அவ்வப்போது நிறுத்துங்கள். தந்தையைப் பிரதி செய்வதன் மூலம், நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுகிறீர்கள். எப்படிப் பிரதி செய்வதற்கு நீங்கள் ஒரு கார்பன் கடதாசியைப் பயன்படுத்துவதைப் போல், கவனம் செலுத்துதல் என்ற கடதாசியைப் பயன்படுத்துங்கள். பிரதி செய்யப்பட்டு விடும். ஏனென்றால், இது மட்டுமே தீவிர முயற்சியாளராகி உங்களை ஒவ்வொரு சக்தியாலும் நிரப்பிக் கொள்வதற்கான காலம் ஆகும். உங்களால் உங்களை நிரப்பிக் கொள்ள முடியாவிட்டால், யாராவது ஒருவரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் அப்படியே செய்து கொண்டிருந்தால், அது ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ என்று ஆகிவிடும்.
சுலோகம்:
திருப்தியின் பலன், சந்தோஷம். சந்தோஷமாக இருப்பதன் மூலம் உங்களின் கேள்விகள் அனைத்தும் முடிந்துவிடும்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். எந்தவொரு பலவீனமான ஆத்மாவினதும் பலவீனங்களைப் பார்க்காதீர்கள். ஆத்மாக்கள் எல்லோரும் வேறுபட்டவர்கள் என்பதை உணர்ந்தவராக இருங்கள். எல்லோருக்காகவும் ஆத்ம உணர்வுப் பார்வை இருக்க வேண்டும். எல்லோரையும் ஓர் ஆத்மா என நினைப்பதன் மூலம் உங்களால் அவர்களுக்குச் சக்தியைக் கொடுக்க முடியும். ஆத்மாவே பேசுகிறார். இவை ஆத்மாவின் சம்ஸ்காரங்கள்: இந்தப் பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லோருக்காகவும் நல்லாசிகளைக் கொண்டிருப்பீர்கள்.