27.11.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்ற விடயங்கள் உங்களுடைய 21 பிறவிகளுக்கான வருமானத்தின் மூலாதாரமாகும். எனவே, நன்றாகக் கற்றால், நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின் அதீந்திரிய சுகம் ஏன் நினைவுகூரப்படுகின்றது?பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்நேரத்தில் தந்தையை அறிவீர்கள் என்பதால் ஆகும். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை நீங்கள் மாத்திரமே தந்தையின் மூலம் அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது எல்லையற்றதில், அதாவது சங்கமத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உவர் கால்வாயைக் கடந்து, இனிமையான அமிர்தக் கால்வாய்க்குச் செல்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார்! பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இச்சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். இதனாலேயே உங்களுடைய அதீந்திரிய சுகமே நினைவுகூரப்படுகின்றது.ஓம் சாந்தி.
எல்லையற்ற ஆன்மீகத் தந்தை எல்லையற்ற ஆன்மீகக் குழந்தைகளுடன் பேசுகிறார், அதாவது அவர் உங்களுக்குத் தன்னுடைய வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். நீங்கள் நிச்சயமாக உயிருள்ளவர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் புதிய பாடசாலை எதிலும் கற்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு 5000 வருடங்களும் இங்கே கற்க வருகின்றோம். “நீங்கள் முன்பு இங்கே கற்க வந்துள்ளீர்களா?” என்று பாபா உங்களை வினவினால், “நாங்கள் 5000 வருடங்களுக்கு ஒருமுறை அதி மேன்மையான சங்கம யுகத்தில் இங்கே பாபாவிடம் வருகின்றோம்” என்று அனைவரும் பதிலளிப்பார்கள். நீங்கள் இதை நினைவு செய்கின்றீர்கள், அல்லவா? அல்லது நீங்கள் இதை மறந்துவிட்டீர்களா? மாணவர்கள் நிச்சயமாகத் தங்களுடைய பாடசாலையை நினைவு செய்கிறார்கள். உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் ஒன்றேயாகும். பாபாவின் குழந்தைகள் ஆகுபவர்கள் யாராயினும், அவர் வந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தாலும் அல்லது நீண்ட காலமாக வருபவராக இருந்தாலும், அனைவரது இலக்கும் குறிக்கோளும் ஒன்றேயாகும். எவருக்கும் இழப்பு இருக்க முடியாது. கல்வியின் மூலம் வருமானம் உள்ளது. மக்கள் அமர்ந்திருந்து கிராந்தை (சீக்கியர்களின் சமய நூல்) வாசிப்பதன் மூலம் வருமானத்தைச் சம்பாதிக்கின்றார்கள். அவர்களின் சரீர வாழ்வாதாரத்திற்காக, அவர்களால் மிக விரைவாக உழைக்க முடிகின்றது. சிலர் சாதுக்களாகி, அமர்ந்திருந்து சமய நூல்களை வாசித்து, வருமானத்தைச் சம்பாதிக்கக் கூடியவர்கள் ஆகுகின்றார்கள். அவை அனைத்தும் வருமானத்தின் மூலாதாரமாகும். அனைத்திற்கும் ஒரு வருமானம் இருக்க வேண்டும். உங்களிடம் பணம் இருந்தால், உங்களால் எங்கும் பயணம் செய்ய முடியும். உங்களால் 21 பிறவிகளுக்கு வருமானத்தைச் சம்பாதிக்கக்கூடிய மிக நல்ல கல்வியை பாபா உங்களுக்குக் கொடுக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த வருமானத்தின் மூலம் நீங்கள் சதா சந்தோஷமானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒருபோதும் நோய்வாய்ப்பட மாட்டீர்கள், நீங்கள் அமரத்துவமாக இருப்பீர்கள். நீங்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் தொடர்ந்தும் எதனையிட்டாவது திணறிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் கற்கின்றீர்கள் என்று உள்ளுர சதா நினைவு செய்ய வேண்டும். இவை கடவுளின் வாசகங்கள். இது கீதையாகும். கீதையின் யுகம் ஒன்றுள்ளது. அது ஐந்தாவது யுகம் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இந்த சங்கமயுகம் மிகவும் குறுகியது. உண்மையில், இது ஏனைய யுகங்களின் கால்பங்குகூட இல்லை. உங்களால் சதவீதத்தைக் கணிக்க முடியும். நீங்கள் மேலும் முன்னேற்றம் அடையும்போது தந்தை தொடர்ந்தும் அனைத்தையும் விளங்கப்படுத்துவார். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு அனைத்தும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் நிச்சயிக்கப்பட்ட பாகங்கள் மீண்டும் இடம்பெறுகின்றது. நீங்கள் கற்கின்ற அனைத்தும் மீண்டும் இடம்பெறுகின்றது. “மீண்டும் இடம்பெறுதல்” என்ற இரகசியத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். உங்களுடைய பாகம் ஒவ்வோர் அடியிலும் மாறுகின்றது. ஒரு விநாடி மற்றைய விநாடிக்குச் சமமானதாக இருக்கமுடியாது. நேரம் தொடர்ந்தும் பேனைப் போல் நகர்கின்றது – “டிக் டிக்” என விநாடிகள் நகர்கின்றன. நீங்கள் இப்பொழுது எல்லையற்றதில் இருக்கின்றீர்கள். வேறெந்த மனிதரும் எல்லையற்றதில் இல்லை. எல்லையற்றது பற்றிய, அதாவது ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை வேறெவரும் கொண்டிருப்பதில்லை. உங்களுக்கு இப்பொழுது எதிர்காலம் தெரியும். நாங்கள் புதிய உலகிற்குச் செல்கின்றோம். இது நாங்கள் கடக்க வேண்டிய சங்கமயுகமாகும். உவர் கால்வாய் உள்ளது. இது இனிமையான அமிர்தக் கால்வாயாகும். மற்றையது நஞ்சாகும். நீங்கள் இப்பொழுது நச்சுக் கடலைவிட்டு, பாற்கடலுக்குச் செல்கின்றீர்கள். இது ஓர் எல்லையற்ற விடயம். இந்த உலகிலுள்ள எவருக்கும் இவ்விடயங்களைப் பற்றித் தெரியாது. இது புதியதொன்றாகும். யார் கடவுளென அழைக்கப்பட வேண்டும் என்பதும் அவர் என்ன பாகத்தை நடிக்கிறார் என்பதும் உங்களுக்கு மாத்திரமே தெரியும். உங்கள் பட்டியலில் உள்ள தலைப்புக்களில் ஒன்று: ‘வாருங்கள், பரமாத்மா பரமதந்தையின் சுயசரிதையை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம்’ என்பதாகும். உண்மையில், குழந்தைகள் தங்களுடைய தந்தையின் சுயசரிதையைக் கூறுவது பொதுவானதாகும். எவ்வாறாயினும் இவரோ தந்தையர் அனைவருக்கும் தந்தை ஆவார். எவ்வாறாயினும், உங்களுக்கிடையே, நீங்கள் இதை உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் சரியான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தை அதை உங்களுக்குக் கொடுத்துள்ளதாலேயே உங்களால் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த முடிகிறது. வேறு எவருக்கும் எல்லையற்ற தந்தையைத் தெரியாது. சங்கம யுகத்தில் மாத்திரமே அவரை உங்களுக்குத் தெரியும். மனிதர்கள் தேவர்களாகவோ அல்லது சூத்திரர்களாகவோ இருந்தாலும், ஆத்மாக்கள் தூய்மையானவர்களாகவோ அல்லது தூய்மை அற்றவர்களாகவோ இருந்தாலும் எவருக்கும் அவரைத் தெரியாது. சங்கம யுகத்து பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே அவரைத் தெரியும். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! இதனாலேயே, “உங்களுக்கு அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்றால், கோப, கோபியரைக் கேளுங்கள்” என்ற புகழ் இருக்கின்றது. பாபா தந்தையாகவும், ஆசிரியராகவும், சற்குருவாகவும் இருக்கின்றார். எனவே நீங்கள் ''பரமன்'' (சுப்ரீம்) என்ற வார்த்தையை நிச்சயமாக எழுதவேண்டும். சிலவேளைகளில் குழந்தைகளாகிய நீங்கள் இதை மறந்து விடுகின்றீர்கள். இவ்விடயங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். நீங்கள் நிச்சயமாக சிவபாபாவின் புகழில் இவ்வார்த்தையை எழுதவேண்டும். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாது. உங்களாலேயே இதை விளங்கப்படுத்த முடியும், இது உங்களுடைய வெற்றியாகும். எல்லையற்ற தந்தை அனைவருக்கும் ஆசிரியரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் ஆவார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரே எங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தையும் எல்லையற்ற இந்த ஞானத்தையும் கொடுக்கின்றார். இருந்தும், நீங்கள் அத்தகைய தந்தையை மறந்து விடுகின்றீர்கள்! மாயை மிகவும் சக்திவாய்ந்தவள்! கடவுள் சக்திவாய்ந்தவராகக் கருதப்படுகின்றார், ஆனால் மாயையும் குறைந்தவள் அல்ல. அச்சொல்லின் மிகச் சரியான அர்த்தத்தை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மாயைக்கு இராவணன் என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. இராம இராச்சியமும் இராவண இராச்சியமும் உள்ளது. நீங்கள் இதை மிகச்சரியாக விளங்கப்படுத்த வேண்டும். இராமரின் இராச்சியம் இருப்பதால், இராவணனின் இராச்சியமும் இருக்கவே வேண்டும். இது எப்பொழுதும் இராமரின் இராச்சியமாக இருக்க முடியாது. எல்லையற்ற தந்தை இங்கு அமர்ந்திருந்து ஸ்ரீகிருஷ்ணரின் இராச்சியமாகிய இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பவர் யார் என்பதை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் பாரதத்தை அதிகளவு புகழவேண்டும். பாரதமே சத்திய பூமியாக இருந்தது. அந்த பூமி அதிகளவு புகழப்பட்டது! தந்தையே அதை அவ்வாறு ஆக்கினார். நீங்கள் தந்தையின் மீது அதிகளவு அன்பு செலுத்துகிறீர்கள்! உங்கள் புத்திகளில் இலக்கும் குறிக்கோளும் உள்ளன. மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கல்வியில் போதையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் நடத்தையையிட்டும் அக்கறை கொண்டிருக்க வேண்டும். இது கடவுளின் கல்வி என்பதால் நீங்கள் இதனை ஒரு நாளும் தவறவிடவோ, அல்லது உங்கள் ஆசிரியர் வகுப்பிற்கு வந்த பின்னர் நீங்கள் வகுப்பிற்கு தாமதித்து வரவோ கூடாது என உங்களுடைய மனச்சாட்சி கூறுகின்றது. உங்கள் ஆசிரியர் வந்த பின்னர் நீங்கள் வகுப்பிற்கு வருவது என்றால் அவரை அவமதிப்பதாகும். பாடசாலைகளில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர் வந்த பின்னர் வந்தார்களானால் அவர்கள் வகுப்பின் வெளியே நிற்க வைக்கப்படுவார்கள். பாபா தனது குழந்தைப் பருவத்தின் உதாரணத்தைக் குறிப்பிடுகிறார். எனது ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அவர் எங்களை வகுப்பினுள் நுழைவதற்குக்கூட அனுமதிப்பதில்லை. இங்கோ, பலர் தாமதித்தே வருகிறார்கள். சேவை செய்கின்ற கீழ்ப்படிவான குழந்தைகள் மீது தந்தை நிச்சயமாக அன்பு செலுத்துகிறார். இது ஆதி சனாதன தேவி தேவதா தர்மமாகும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். எப்பொழுது இந்த தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது? இது எவருடைய புத்தியிலும் புகுவதில்லை. இது உங்கள் புத்திகளில் இருந்தும் மீண்டும் மீண்டும் நழுவுகின்றது. நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். உங்களுக்குக் கற்பிப்பது யார்? பரமதந்தை, பரமாத்மாவே. இது உங்கள் பிராமண குலம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். வம்சம் எதுவும் இல்லை. இதுவே அதி மேன்மையான பிராமண குலமாகும். தந்தையும் அனைவரிலும் மேன்மையானவர், அவரே அதி மேலானவர். ஆகவே அவர் கொடுக்கின்ற வருமானமும் நிச்சயமாக அதி மேன்மையானதாகவே இருக்கும். அவர் மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கப்பட முடியும். அவர் உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகிறார். உங்களை மேன்மையாக்குபவர் யார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். வேறு எவரும் எதையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் கூறுகிறீர்கள்: எங்கள் தந்தையே தந்தையும், ஆசிரியரும் சற்குருவும் ஆவார். அத்துடன் அவர் எங்களுக்குக் கற்பிக்கிறார். நாங்கள் அனைவரும் ஆத்மாக்கள். ஆத்மாக்களாகிய எங்களுக்குத் தந்தை நினைவுபடுத்தி உள்ளார்: நீங்கள் எனது குழந்தைகள். இது ஒரு சகோதரத்துவம். அவர்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள். அவர் அசரீரியானவர் என்பதால், ஆத்மாக்களும் நிச்சயமாக அசரீரியானவர்களாகவே இருப்பார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுத்து, தொடர்ந்தும் தனது பாகத்தை நடிக்கின்றார். ஆத்மாக்கள் எனக் கருதுவதற்குப் பதிலாக மக்கள் தங்களைச் சரீரங்களெனக் கருதுகிறார்கள். அவர்கள் தாங்கள் ஆத்மாக்கள் என்பதை மறந்து விட்டார்கள். நான் இதை ஒருபோதுமே மறப்பதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சாலிகிராம்கள். நானே பரம தந்தை அதாவது நானே பரமாத்மா. அவருக்கு வேறெந்தப் பெயரும் இல்லை. பரமாத்மாவின் பெயர் சிவன் ஆகும். நீங்கள் அனைவரும் அவரைப் போன்ற ஆத்மாக்களாயினும், நீங்கள் சாலிகிராம்கள் என அழைக்கப்படுகிறீர்கள். சிவாலயத்தில் அவர்கள் பல சாலிகிராம்களை வைத்துள்ளார்கள். அவர்கள் சிவனை வழிபடும்பொழுது சாலிகிராம்களையும் வழிபடுகிறார்கள். இதனாலேயே பாபா ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் சரீரங்கள் இரண்டும் வழிபாடு செய்யப்படுகின்றன என விளங்கப்படுத்தி உள்ளார். எனக்குச் சொந்தமாகச் சரீரம் இல்லாததால், ஆத்மாவாகவே நான் வழிபாடு செய்யப்படுகின்றேன். நீங்கள் மிக மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள்! பாபா மிகவும் பூரிப்படைகிறார். சிலவேளைகளில் (லௌகீகத்) தந்தை ஏழையாக இருக்கின்றார், அவரது குழந்தை கற்று உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைகின்றார். அவர்கள் எதுவும் அற்றவர்களில் இருந்து ஏதோ ஒன்றாக ஆகின்றார்கள்! நீங்களும் மிகவும் மேன்மையானவர்களாக இருந்தீர்கள் என்பதைத் தந்தை புரிந்து கொள்கிறார். பின்னர் உங்களுக்கு உங்கள் தந்தையைத் தெரியாததால் நீங்கள் அநாதைகள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் ஆகிவிட்டீர்கள். ஆகவே, நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை சுவர்க்கத்தின் தந்தையாகிய கடவுளே எனக் அழைத்தீர்கள். சுவர்க்கமானது இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு என்ன இருக்கும் என்பது வேறு எவரதும் புத்தியிலும் அல்லாது உங்கள் புத்தியிலேயே இருக்கிறது. நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தவர்கள் என்பதும், நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகுகின்றீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் மாத்திரமே உள்ளது. தாங்கள் அதிபதிகள் என பிரஜைகளும் கூறுவார்கள். இவ்விடயங்கள் குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் மாத்திரமே உள்ளது. ஆகவே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! இவை அனைத்தையும் கேட்ட பின்னர் நீங்கள் மற்றவர்களுக்கும் இதைக் கூறவேண்டும். இதனாலேயே நிலையங்களும் அருங்காட்சியகங்களும் திறக்கப்படுகின்றன. முன்னைய கல்பத்தில் என்ன நடந்ததோ அதுவே தொடர்ந்தும் இடம்பெறும். பலர் ஓர் அருங்காட்சியகத்தையோ அல்லது நிலையத்தையோ உங்களுக்காகத் திறப்பதற்கு முன்வருவார்கள். பலர் உருவாகுவார்கள். அனைவருடைய எலும்புகளும் மென்மை ஆக்கப்படுகின்றன. நீங்கள் தொடர்ந்தும் முழு உலகின் எலும்புகளையும் மென்மை ஆக்குகிறீர்கள். உங்கள் யோகத்தில் பெருமளவு சக்தி உள்ளது. தந்தை கூறுகிறார்: உங்களிடம் அதிக சக்தி உள்ளது. யோக நிலையிலிருந்து உணவைத் தயாரித்து மற்றவர்களுக்கும் வழங்குவதால் அவர்களது புத்திகள் இத்திசையை நோக்கி ஈர்க்கப்படும். பக்தி மார்க்கத்தில் தமது குரு உணவருந்திய தட்டிலும்கூட மக்கள் உண்கிறார்கள். பக்தி மார்க்கம் விபரிக்க முடியாத அளவிற்கு விரிவடைந்துள்ளது எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்! இது விதையும், அது விருட்சமும் ஆகும். நீங்கள் விதையைப் பற்றிப் பேசமுடியும். ஆனால் நீங்கள் இலைகளை எண்ணுமாறு எவரையாவது கேட்பீர்களாக இருந்தால், அதை எவராலும் செய்ய முடியாது. அங்கு, எண்ணற்ற இலைகள் இருக்கின்றன. ஒரு விதையினுள் இலை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருப்பதில்லை. இது ஓர் அற்புதமே! இதுவும் இயற்கை என்றே அழைக்கப்படுகிறது. அனைத்து பூச்சிகளின் வாழ்க்கையும் மிகவும் அற்புதமானது! பல வகையான பூச்சிகள் உள்ளன. எவ்வாறு அவை உருவாக்கப்படுகின்றன எனப் பாருங்கள். இது ஓர் அற்புதமான நாடகமாகும். இதுவே இயற்கை எனப்படுகிறது. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. சத்திய யுகத்தில் நீங்கள் எதைப் பார்ப்பீர்கள்? அங்கு அனைத்தும் புதியதாகவே இருக்கும். புதியன அனைத்தும் அங்கே இருக்கும். ஸ்ரீகிருஷ்ணரின் கிரீடத்தில் ஒரு மயிலிறகு காட்டப்பட்டுள்ளதால் மயிலானது பாரதத்தின் தேசியப்பறவை எனப்படுகிறது என்று தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஆண், பெண் மயில்கள் மிகவும் அழகானவை. அவற்றின் படைப்பானது கண்ணீரினாலேயே இடம்பெறுகிறது. இதனாலேயே அது தேசியப் பறவை எனப்படுகிறது. வெளிநாட்டிலும் அழகான பறவைகள் இருக்கின்றன. குழந்தைகளாகிய உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. வேறு எவருக்கும் இது தெரியாது. அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் உங்களுக்கு பரமாத்மா, பரம தந்தையின் சுயசரிதையைக் கூறுவோம். படைப்பவர் இருப்பதால் நிச்சயமாக அவரது படைப்பும் இருக்கவே வேண்டும். எங்களுக்கு அதன் வரலாறும், புவியியலும் தெரியும். அதிமேலான எல்லையற்ற தந்தை நடிக்கின்ற பாகமும் எங்களுக்குத் தெரியும். இவ்வுலகத்தவர்களுக்கு அதுபற்றி சிறிதேனும் தெரியாது. இவ்வுலகானது மிகவும் அழுக்கானது. தற்காலத்தில் அழகானவராக இருப்பதும் பிரச்சனையாக உள்ளது. எப்படி அவர்கள் குழந்தைகளைக் கடத்துகின்றார்கள் எனப் பாருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இவ்விகார உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். இது அழுக்கான உலகும், அழுக்கான சரீரங்களும் ஆகும். நாங்கள் தந்தையை நினைவுசெய்து, எங்கள் ஆத்மாக்களைத் தூய்மையாக்க வேண்டும். நாங்கள் சதோபிரதானாகவும், சந்தோஷமாகவும் இருந்தோம். இப்பொழுது நாங்கள் தமோபிரதானாகவும் சந்தோஷமற்றும் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையாக விரும்புகிறீர்கள். “நீங்களே தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவர்” என்று அவர்கள் பாடியபோதிலும், (தூய்மை அற்றவற்றில்) அவர்கள் விருப்பமின்மையைக் கொண்டிருப்பதில்லை. இவ்வுலகம் அழுக்கானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். புதிய உலகில் நாங்கள் அழகான சரீரங்களைப் பெற்றுக் கொள்வோம். நாங்கள் அமரத்துவ பூமியின் அதிபதிகள் ஆகுகின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவும், முகமலர்ச்சியுடனும் இருக்கவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்கள். தந்தை வந்து, அதே குழந்தைகளை ஒவ்வொரு 5000 வருடங்களிலும் சந்திப்பதால், நிச்சயமாக அந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். நான் குழந்தைகளாகிய உங்களைச் சந்திப்பதற்காக மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இறை மாணவர்கள். ஆகவே நீங்கள் கல்வியில் போதை கொண்டிருப்பதுடன், உங்கள் நடத்தையிலும் அக்கறை கொண்டிருக்க வேண்டும். ஒரு நாளேனும் இக்கல்வியைத் தவற விடக்கூடாது. வகுப்பிற்குத் தாமதமாக வருவதன் மூலம் ஆசிரியரை அவமதிக்காதீர்கள்.2. விகாரம் நிறைந்த, அழுக்கான இவ்வுலகில் விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். தந்தையின் நினைவின் மூலம் ஆத்மாவாகிய உங்களைத் தூய்மையாகவும் சதோபிரதானாகவும் ஆக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். எப்பொழுதும் சந்தோஷமாகவும் முகமலர்ச்சியுடனும் இருங்கள்.
ஆசீர்வாதம்:
பிறரை ஈடேற்றி, நம்பிக்கை இழந்திருப்போரில் நம்பிக்கையை உருவாக்குகின்ற ஓர் உண்மையான திருப்திமணியாக இருப்பீர்களாக.திரிகாலதரிசிகள் ஆகி, ஆத்மாக்களிலுள்ள எந்தவொரு பலவீனத்தையும் பிரித்தறியுங்கள். அந்தப் பலவீனத்தை உங்களில் கிரகிப்பதற்கு அல்லது அதனைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, உங்களுடைய உபகாரமான வடிவத்தினால் அந்த பலவீனம் என்ற முள்ளை முடியுங்கள். முள்ளை மலராக மாற்றுங்கள். நீங்களும் ஒரு திருப்திமணியாக, திருப்தியாக இருந்து, பிறரையும் திருப்திப்படுத்துங்கள். அனைவருமே நம்பிக்கை இழந்திருக்கின்ற, ஒருவரிடத்தில் அல்லது ஒரு சூழ்நிலையில் நீங்கள் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அதாவது, நீங்கள் விரக்தி அடைந்துள்ள ஆத்மாக்களை சக்திசாலிகளாக ஆக்க வேண்டும். அத்தகைய மேன்மையான பணியை நீங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளும் போது, நீங்கள் பிறரை ஈடேற்றுபவரும், திருப்திமணியும் என்ற ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
உங்கள் பரீட்சையின் போது, உங்கள் சத்தியத்தை நினைவுசெய்தால், வெளிப்படுத்துதல் இடம்பெறும்.அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).
நாள் முழுவதும், ஒரு விநாடி உங்களுக்குக் கிடைத்தாலும், மீண்டும் மீண்டும் சரீரமற்றவர் ஆகுகின்ற பயிற்சியைச் செய்யுங்கள். இரண்டு அல்லது நான்கு விநாடிகளை பயன்படுத்தினாலுமே, இவ்வாறு செய்வதனால், நீங்கள் அதிகளவு உதவியை பெறுவீர்கள். இல்லாவிடின், உங்கள் புத்தி நாள் முழுவதும் தொடர்ந்தும் வேலை செய்வதால், சரீரமற்றவர் ஆகுவதற்கு நேரம் எடுக்கும். இதனை நீங்கள் பயிற்சி செய்தால், நீங்கள் விரும்பிய போதெல்லாம் நீங்கள் சரீரமற்றவர் ஆகுவீர்கள். இறுதி நேரத்தில், அனைத்தும் சடுதியாகவே வரும். ஆகவே, சடுதியில் என்ற பரீட்சைக்கு, சரீரமற்றவராக இருப்பதன் பயிற்சி மிக மிக அவசியமாகும்.